Skip to main content

'ராணி' இதழின் ஆசிரியர் மரணம்  -பட்டுக்கோட்டை பிரபாகர் இரங்கல்!

Published on 17/09/2020 | Edited on 17/09/2020

 

Rani weekly magazine editor passed away

 

ராணி வார இதழ் ஆசிரியர் ராமகிருஷ்ணன் திடீர் உடல் நலக்குறைவால் மரணமடைந்தார். கடந்த 14 -ஆம் தேதி அவரது தாயார் மரணமடைந்த நிலையில் இன்று ராமகிருஷ்ணன் மரணமடைந்திருப்பது பத்திரிகையாளர்களையும் படைப்பாளர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

 

ராமகிருஷ்ணனின் மறைவிற்கு கீழ்கண்டவாறு இரங்கல் தெரிவித்திருக்கிறார் எழுத்தாளரான பட்டுக்கோட்டை பிரபாகர், "ராணி வார இதழின் ஆசிரியர் ராமகிருஷ்ணன் என்கிற வணங்காமுடி இன்று நம்மை விட்டு நிரந்தரமாக நீங்கிவிட்டார். மிகவும் அன்பானவர். சிரித்துச் சிரித்துப் பேசுகிறவர். சிறப்பான சிந்தனையாளர். நல்ல ரசனையாளர். திறமையான கட்டுரையாளர். வணங்காமுடி என்கிற பெயரில் பல புத்தகங்கள் எழுதியிருப்பவர். புதிய திறமைகளைத் தேடித் தேடி ஊக்குவிப்பவர். நல்ல எழுத்தை, கருத்தை எங்கு கண்டாலும் அழைத்துப் பாராட்டி ஆனந்தப்படுபவர். 

 

தன் தாயாரின் உடல் நிலை சரியில்லை என்று சொந்த ஊருக்குச் சென்றவர் வயதான தன் தாயாருடன் தங்கி அவருக்கு வைத்தியம் பார்த்துக் கொண்டிருந்தார். அந்தச் சமயம் ஃபோனில் என்னிடம் வெகுநேரம் பேசினார். தன் தாயாரின் உடல்நிலை தேறும்வரை சென்னை திரும்பமாட்டேன் என்று உறுதியாகச் சொன்னார். சில நாட்களுக்கு முன்பு அந்தத் தாயாரை இழந்தார். தாயாரின் உடல்நிலையில் அக்கறை காட்டிய அவர் தன் உடல்நிலையில் அக்கறைக் காட்டத் தவறியிருக்கிறார். 

 

Ad

 

தனக்கு ஒரு வாரம் முன்பு வந்த காய்ச்சலுக்கு மருத்துவமனை செல்லாமல் வைத்தியம் பார்த்துக் காய்ச்சல் கட்டுப்பட்டதால் பேசாமல் இருந்து விட்டார். நேற்று மீண்டும் காய்ச்சல் ஏற்பட்டு மூச்சுத் திணறலும் ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட இன்று காலை நம்மைப் பிரிந்துவிட்டார். நெருங்கிப் பழகிய நண்பர் என்பதால் மனம் ஸ்தம்பித்து அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்ல வார்த்தைகள் தேடித் தவிக்கிறேன்." எனத் தெரிவித்துள்ளார். 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'நமது அம்மா' நாளிதழில் இருந்து மருது அழகுராஜ் விலகல்! 

Published on 29/06/2022 | Edited on 29/06/2022

 

Maruthu Alaguraj withdraws from 'Namadu Amma' daily!

 

'நமது அம்மா' நாளிதழின் ஆசிரியர் மருது அழகுராஜ் அப்பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். 

 

அ.தி.மு.க.வில் உட்கட்சிப் பூசல் தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னை உயர்நீதிமன்றம் டெல்லியில் உள்ள உச்சநீதிமன்றம் மற்றும் இந்திய தலைமை தேர்தல் ஆணையம் என எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமை பதவிக்காக மாறி மாறி மனுத்தாக்கல் செய்துள்ளனர். மேலும், இரு தரப்பு ஆதரவாளர்களும் செய்தியாளர்களைச் சந்தித்து குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர். 

 

இந்த நிலையில், அ.தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ நாளேடான 'நமது அம்மா' நாளிதழின் நிறுவனர் பொறுப்பில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் சமீபத்தில் நீக்கப்பட்டது அவரது ஆதரவாளர்களை அதிர்ச்சி அடைய செய்தது. இந்நிலையில், 'நமது அம்மா' நாளிதழின் ஆசிரியர் மருது அழகுராஜ் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "நதிகாக்கும் இரு கரைகள்" என்னும் என் போன்றோரது நம்பிக்கை, சுயநலத்தால் தகர்ந்து விட்ட நிலையில் நமது அம்மா நாளிதழ் ஆசிரியர் பொறுப்பிலிருந்து விலகிக் கொள்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார். 

 

 

Next Story

குமுதம் ஆசிரியர் ப்ரியா கல்யாணராமன் காலமானார்! 

Published on 22/06/2022 | Edited on 22/06/2022

 

Kumutham editor Priya Kalyanaraman has passed away!

 

குமுதம் வார இதழின் ஆசிரியர் ப்ரியா கல்யாணராமன் (வயது 55) மாரடைப்பு காரணமாக, சென்னையில் உள்ள இல்லத்தில் காலமானார். இவரது மறைவுக்கு தி.மு.க.வின் தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி, அ.ம.மு.க.வின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். 

 

குமுதம் வார இதழில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஆசிரியராகப் பணியாற்றியவர் ப்ரியா கல்யாணராமன். இவரது இயற்பெயர் ராமச்சந்திரன். நாகப்பட்டினம் மாவட்டம், சிக்கலைச் சேர்ந்தவர் ப்ரியா கல்யாணராமன். அவரது மனைவி ராஜ சியாமளா. இவரும் எழுத்தாளர் ஆவார். மறைந்த ப்ரியா கல்யாணராமனுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். 

 

குமுதம் வார இதழில் தனது 21 வயதிலேயே பத்திரிகையாளராக வாழ்க்கையைத் தொடங்கினார். குமுதம் நிறுவனர் எஸ்.ஏ.பி.யால் பத்திரிகை உலகத்துக்கு அடையாளம் காட்டப்பட்டவர் ப்ரியா கல்யாணராமன் என்பது குறிப்பிடத்தக்கது.