Skip to main content

நடுக்கடலில் ஐஸ் பெட்டியை பிடித்துக் கொண்டு உயிருக்கு போராடிய முதியவர் 

Published on 16/06/2020 | Edited on 16/06/2020
Fishermen

 

ராமேஸ்வரம் தங்கச்சிமடத்திலிருந்து கடந்த 13ந் தேதி ஹெட்ரோ என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் ரெஜின் பாஸ்கர் (வயது 40), மலர், (வயது 41) கல்லூரி மாணவன் ஆனந்த் (வயது 22) ,ஜேசு (வயது 60) ஆகிய நான்கு பேரும் 2 மாதங்களுக்கு பிறகு மீன்பிடிக்க கடலுக்குள் சென்றுள்ளனர். மூன்று நாட்களாகியும் கரை திரும்ப வில்லை. 
 

இதனையடுத்து சக மீனவர்கள் தேடிப்பார்த்தும் காணாமல் போன மீனவர்களை மீட்கமுடியவில்லை. இதனால் ராமேஸ்வரம் துறைமுகப் பகுதியில் பதட்டம் ஏற்பட்டது. இந்த நிலையில் 16ந் தேதி புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் துறைமுகத்திலிருந்து 200க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்று மீண்டும் இரவு கரை திரும்பும் நேரத்தில் நடுக்கடலில் படகு மூழ்கியதால் ஆபத்தான நிலையில் ஐஸ் பெட்டியை பிடித்துக் கொண்டு உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ஜேசு என்ற மீனவரை கோட்டைபட்டிணம் மீனவர் அபூமன்சூர் மீட்டு முதலுதவி செய்து கோட்டைப்பட்டினம் அழைத்து வந்து கடலோர காவல்படை குழும உதவி ஆய்வாளர் ராஜ்குமார் மற்றும் மீன்வளத்துறை அதிகாரியிடம் ஒப்படைத்தனர்.


அவரை மீட்டு அதிகாரிகள் உடனடியாக மணமேல்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை கொடுத்து வருகின்றனர். மேலும் படகில் வந்த மூன்று பேரின் நிலைகுறித்து தகவல் இல்லாததால் உறவினர்களிடையே அச்சம் நீடித்துவருகிறது.


இந்த நிலையில் 3 நாட்களாக உணவு ஏதுமின்றி ஐஸ் பெட்டியை பிடித்துக் கொண்டு உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ஜேசு உயிருடன் மீட்கப்பட்டாலும் அவரால் எதையும் சரியாக சொல்ல முடியாத நிலையில் இருந்தார். அதனால் மணமேல்குடி அரசு மருத்துவமனையில் முதலுதவிச் சிகிச்சை அளித்து தொடர்ந்து அவருக்கு புதுக்கோட்டை மாவட்ட மனநலப் பிரிவு அலுவலர் கார்த்திக் தெய்வநாயகம் காணொலி மூலம் ஜேசுவுக்கு மனநல அறிவுறைகள் வழங்கப்பட்ட பிறகு ஓரளவு தெளிவடைந்துள்ளார். அதன் பிறகு தன்னுடன் வந்தவர்கள் கடலில் மூழ்கிவிட்டார்களா என்று தெரியவில்லை என்று மீண்டும் அழுதுள்ளார். தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  

 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

“கச்சத்தீவை இந்தியாவுக்கு திரும்ப வழங்குவது சாத்தியமற்றது” - இலங்கை அமைச்சர் திட்டவட்டம்

Published on 05/04/2024 | Edited on 05/04/2024
Sri Lankan Minister says Sri Lanka's marine resources are being destroyed by Indian fishermen

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது . இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. தமிழகத்தைப் பொறுத்தவரை தி.மு.க, அ.தி.மு.க, நாம் தமிழர், பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள், தங்களது வேட்பாளர்களை அறிவித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. 

அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தொடங்கியுள்ளன. இத்தகைய சூழலில் கச்சத்தீவு விவகாரத்தை பா.ஜ.க. தற்போது கையிலெடுத்து காங்கிரசையும், தி.மு.க.வையும் கடுமையாக விமர்சித்து வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் காங்கிரஸ் மற்றும் திமுக, ‘10 ஆண்டுகால ஆட்சியில் கச்சத்தீவை மீட்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது?’ என பா.ஜ.க தலைமையிலான மத்திய அரசிடம் கேள்வி எழுப்பி வருகிறது. 

இந்த நிலையில், கச்சத்தீவை திரும்ப வழங்க முடியாது என்று இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இது குறித்து இலங்கை அமைச்சர் டக்ளஸ் கூறுகையில், “இந்திய மீனவர்கள் படகுகளைப் பயன்படுத்தி இலங்கை கடற்பரப்புக்குள் சட்டவிரோதமாக மீன்பிடிக்க வருகின்றனர். இந்திய மீனவர்களால் இலங்கையின் கடல் வளம் அழிக்கப்படுகிறது. 

இந்தியாவில் தேர்தல் காலங்களில் கச்சத்தீவு பற்றிய கோரிக்கைகள் மற்றும் எதிர் உரிமைகோரல்களின் சத்தம் கேட்பது அசாதாரணமானது அல்ல. இலங்கை மீனவர்கள் அந்தப் பகுதிக்குள் நுழைய முடியாது என்பதையும், அந்த வளமான பகுதியில் இலங்கை எந்த உரிமையையும் கோரக்கூடாது என்பதையும் உறுதிப்படுத்துவதற்காக இந்தியா செயல்படுகிறது என்று நான் நினைக்கிறேன். இந்தியா - இலங்கை ஒப்பந்தத்தின் மூலம் கிடைக்கப்பெற்ற கச்சத்தீவை இந்தியாவுக்கு திரும்ப வழங்குவது என்பது சாத்தியமற்றது. எனவே, கச்சத்தீவை திரும்ப வழங்க முடியாது. கச்சத்தீவை திரும்ப வழங்குவதாக இருந்தால் இலங்கையின் கடல்வளம் முற்றிலுமாக சூறையாடப்படும்” என்று கூறினார். 

Next Story

‘தேர்தலை புறக்கணிக்கப்போகிறோம்’ - தொடர் போராட்டம் அறிவித்துள்ள மீனவ மக்கள்!

Published on 03/04/2024 | Edited on 03/04/2024
The fishermen have declared a continuous protest and they are going to ignore the election

மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட சீர்காழி அடுத்துள்ள கீழ மூவர்க்கரை மீனவகிராம மக்கள் தங்களுக்கான அடிப்படை வசதிகளை செய்து தராததை கண்டித்து தேர்தலைப் புறக்கணித்து கடலில் இறங்கி போராட்டம் ஈடுபடப் போவதாக அறிவித்திருப்பது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கீழ மூவக்கரை மீனவர் கிராமம் உள்ளது. இங்கு சுமார் 800-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்களைக் கொண்ட  கீழமூவர்கரை மீனவர் கிராமத்தில் அடிப்படை வசதிகளான ரேஷன் கடை, சமுதாயக்கூடம், மீன் ஏல கூடம், மீன் வலை பின்னும் கூடம் உள்ளிட்ட எந்தவித அடிப்படை வசதிகளும் ஏற்படுத்தி தரவில்லை என குறைகளைகூறி கோஷங்களை எழுப்பி போராட்டம் நடத்தி வருகின்றனர். 

இந்த போராட்டத்தில் உள்ள அந்த மக்கள் கூறுகையில், “கடலில் தூண்டில் வளைவு அமைத்துத் தரவேண்டும் என கடந்த 20 வருடங்களுக்கு மேலாக கோரிக்கை விடுத்து வருகிறோம். இதுவரை எந்த அரசும் செவிகொடுத்து கேட்கவில்லை. மேலும், ஒவ்வொரு முறையும் பல்வேறு கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்கள் தங்களது கிராமத்திற்கு வாக்கு சேகரிக்க மட்டுமே வருகின்றனர். வெற்றி பெற்ற பின்பு கிராமத்தை திரும்பி கூட பார்ப்பதில்லை. அதனால், பாராளுமன்றத் தேர்தலை புறக்கணிக்கப்பதாக ஒருமனதாக முடிவெடுத்து போஸ்டர் அடித்து சுற்றுவட்டார கிராமங்களில் ஓட்டி ஆதரவு கேட்டுள்ளோம்” என்கின்றனர்.

இந்நிலையில்,  இன்று (03-04-24) மீனவர் கிராம தலைவர் தலைமையில் கிராம மக்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. தங்களது கிராமத்திற்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து தரப்படாததைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும், அதில் முதல் கட்டமாக  நாளை மீனவ கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் உள்ளிட்ட அனைவரும் கடலில் இறங்கி கையில் கருப்புக் கொடியுடன் போராட்டத்தில் ஈடுபடுவது எனவும் முடிவு செய்துள்ளனர். அதனைத் தொடர்ந்து தங்களது ரேஷன் கார்டு, ஆதார் கார்டு உள்ளிட்டவைகளை அரசிடம் திரும்ப ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும், வரும் பாராளுமன்றத் தேர்தலை புறக்கணித்து அனைவரும் வாக்களிக்காமல் தங்களது வீட்டிலேயே இருக்கப் போவதாகவும்  கூட்டத்தில் முடிவு செய்துள்ளனர். தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட ஆயுத்தம் ஆகி வருவதால் மீனவ கிராமத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.