Skip to main content

100 மீட்டர் உள்வாங்கிய ராமேஸ்வரம் கடற்பகுதி!

Published on 15/05/2022 | Edited on 15/05/2022

 

Rameswaram beach which is 100 meters deep

 

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இடி, மின்னலுடன் கனமழை பெய்து வருகிறது. தமிழகத்தில் மேலும் 4 நாட்களுக்கு மிதமான மற்றும் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வரும் 18ஆம் தேதி வரை தமிழ்நாடு புதுச்சேரியில் பல இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 15, 16 ஆகிய தேதிகளில் கோவை, திருப்பூர், தேனி, தென்காசி, திண்டுக்கல், நீலகிரி, கன்னியாகுமரி, திருநெல்வேலியில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. 17, 18 ஆகிய நாட்களில் திண்டுக்கல், திருப்பூர், கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்நிலையில் ராமநாதபுரம் கடல் பகுதி 100 மீட்டர் அளவிற்கு உள்வாங்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 100 மீட்டர் தூரத்தில் கடல் உள்வாங்கியதால் பவளப்பாறைகள், சாமி சிலைகள் காணப்படுகிறது. அக்னி தீர்த்த கடற்கரையில் கடலுக்குள்ளே இருந்த பழைய சுவாமி சிலைகள், பவளப்பாறைகள் வெளியில் தெரிகிறது. ராமேஸ்வரம், தனுஷ்கோடி, முகுந்தராயர் சத்திரம், அரிசல்முனை பகுதிகளில் வழக்கத்தைவிட காற்றின் வேகம் அதிகரித்துள்ளதால் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. அதேபோல் இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் கன்னியாகுமரியில் சூரிய உதயத்தைக் காண திரிவேணி சங்கமத்திற்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்திருந்தனர். ஆனால் மழை காரணமாக சூரிய உதயத்தை பார்க்க முடியாமல் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கூகுள் மேப்பால் வழிமாறிய வடநாட்டு சாமியார்கள்; அதிர்ச்சியில் உறைந்த மணமேட்டுப்பட்டி

Published on 10/03/2024 | Edited on 10/03/2024
Northern preachers who were diverted by Google Maps; The public surrounded

தமிழகத்தில் குழந்தைகளை கடத்துவதற்காக வட மாநிலங்களில் இருந்து கும்பல்கள் கிளம்பி உள்ளதாக சமூக வலைத்தளங்களில் வெளியான தகவல்களை அடுத்து தமிழகத்தின் பல பகுதிகளில் ஆங்காங்கே வடமாநிலத்தவர்கள் தாக்கப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.

சென்னை திருவண்ணாமலையின் செய்யாறு திண்டுக்கல் மாவட்டம் கொம்பேறிபட்டி, நாகை, கிருஷ்ணகிரி ராயக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் குழந்தைகள் கடத்த வந்ததாக வட மாநிலத்தவர்கள் தாக்கப்பட்ட சம்பவங்கள் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. வதந்திகளை நம்ப வேண்டாம் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்ட போதிலும் இதுபோன்ற சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.

இந்தநிலையில் ராமேஸ்வரத்திற்கு சுவாமி தரிசனத்திற்கு வந்திருந்த வடமாநில சாமியார்கள் கூகுள் மேப் மூலம் சேலத்துக்கு செல்ல முயன்ற நிலையில் அவர்கள் வழி தவறி கிராமம் ஒன்றில் புகுந்துள்ளனர். இதனால் குழந்தைகள் கடத்த வந்த நபர்கள் என தகவல்கள் வெளியாகி பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ராமேஸ்வரத்தில் இருந்து சேலத்திற்கு கூகுள் மேப் உதவியுடன் வடமாநில சாமியார்கள் பயணித்தபோது தவறுதலாக விராலிமலை-மணப்பாறை சாலையில் உள்ள மணமேட்டுப்பட்டி கிராமத்திற்குள் புகுந்துள்ளனர். கிராமத்துக்குள் வந்த அவர்கள் வழி தெரியாமல் அந்த வழியில் இருந்த சிறுவர்களிடம் வழி கேட்டுள்ளனர். இதனைப் பார்த்த அந்த கிராமப் மக்கள் கும்பலாக வந்துள்ள சாமியார்களை கண்டு அதிர்ந்து குழந்தைகளை கடத்த வந்தவர்கள் என நினைத்து அவர்களை மடக்கிப் பிடித்தனர். பின்னர் அவர்களை போலீசில் ஒப்படைத்தனர். வடமாநில சாமியார்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் ராமேஸ்வரம் சென்று விட்டு திரும்பி வந்தது தெரிய வந்தது. பின்னர் அவர்கள் பத்திரமாக சேலத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த சம்பவம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Story

கடல் சார் உயர் இலக்கு படை தொடக்கம்!

Published on 08/03/2024 | Edited on 08/03/2024
Launch of Marine High Target Force

இந்தியாவிலேயே முதன்முறையாக மன்னார் வளைகுடா மற்றும் பால்க் ஜலசந்தியில் உள்ள கடல் வளங்கள் மற்றும் கடல் பல்லுயிர்களைப் பாதுகாக்க இந்தியாவின் முதல் கடல்சார் உயர் இலக்கு படை இராமநாதபுரம் மாவட்டத்தில் தொடங்கப்பட்டுள்ளது. இதற்கான தொடக்க விழா சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. இத்திட்டத்தை  தமிழ்நாடு வனத்துறை அமைச்சர் மா. மதிவேந்தன் காணொளிக் காட்சி மூலம் தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து அமைச்சர் மதிவேந்தன் பேசுகையில், “இந்த கடல்சார் உயர் இலக்கு படை பவளப்பாறைகள், கடல் புல், பிற கடல் தாவரங்கள் மற்றும் கடல் உயிரினங்கள் போன்ற மதிப்புமிக்க கடல் பல்லுயிர்களின் பாதுகாப்பில் ஒரு புதிய அத்தியாயம் உருவாவதற்கான தொடக்கமாக அமையும்” என்றார்.

மேலும் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறையின் அரசு கூடுதல் தலைமைச் செயலாளர்  சுப்ரியா சாஹு  இந்நிகழ்வு பற்றி குறிப்பிடுகையில், “கடல் பல்லுயிர் பெருக்கத்தை பிரத்தியேகமாக கையாள்வதற்கான நீலப் படையை (Blue cadre) உருவாக்க இத்தனித்துவமான முயற்சி உதவியாக இருக்கும். கடல் மற்றும் கடலோர சூழலியலை சிறப்பான முறையில் பாதுகாக்க இந்த உயர் இலக்கு படை தமிழ்நாடு வனத்துறையின் திறனை அதிகரிக்க உறுதுணையாக அமையும்” எனத் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் முதன்மை தலைமை வனப் பாதுகாவலரும், வனத்துறைத் தலைவருமான சுப்ரத் மொஹபத்ரா, முதன்மை தலைமை வனப் பாதுகாவலரும், தலைமை வன உயிரினக் காப்பாளருமான ஸ்ரீனிவாஸ் ஆர். ரெட்டி, கூடுதல் முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் (வன உயிரினம்) வி. நாகநாதன் மற்றும் இராமநாதபுரம் வன உயிரினக் காப்பாளர் பகான் ஜகதீஷ் சுதாகர் ஆகியோர் பங்கேற்றனர்.