
தமிழகத்திலிருந்து மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவதும் வலைகள் பறிக்கப்படுவதும் தொடர்ந்து அவ்வப்போது நிகழ்ந்து வருகிறது. அண்மையில் புதுக்கோட்டை மீனவர் ராஜ்கிரண் இலங்கை கடற்படை கப்பல் மோதி இறந்த நிலையில் பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு உடல் பெறப்பட்டது. இது தொடர்பாக தற்போது வரை சர்ச்சை நீடித்து வருகிறது.
ராமநாதபுரம் நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 42 பேரை இலங்கை கடற்படையினர் சிறை பிடித்துள்ளதாக இன்று தகவல்கள் வெளியாகியது. எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி 6 விசைப்படகுகள் மற்றும் அதில் மீன் பிடித்துக்கொண்டிருந்த 42 மீனவர்களை இலங்கை கடற்படை சிறை பிடித்து உள்ளதாகத் தகவல் வெளியாகியது. சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களுக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுத் தனிமைப்படுத்தப்பட்டு வரும் நடவடிக்கையில் இலங்கை அரசு ஈடுபட்டுள்ளது.
இந்நிலையில் ராமேஸ்வரத்தில் உள்ள அனைத்து மீனவர் சங்கங்கள் சார்பில் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த அவசர ஆலோசனைக் கூட்டத்தில், 42 மீனவர்களை விடுதலை செய்யக்கோரி இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் அறிவிக்கப் போவதாகவும், நாளை ராமேஸ்வரம் பேருந்து நிலையத்தின் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் மீனவர் சங்கங்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.