Skip to main content

பச்சை வண்ணக்கடலாக பாம்பன்: இனி எல்லாம் பச்சை மயமே: எச்சரிக்கும் அமெரிக்கப் பல்கலைக்கழகம்!

Published on 12/09/2019 | Edited on 12/09/2019

 

 

கடல்வாழ் உயிரினங்களின் உயிர்க்கோள காப்பக மன்னார்வளைகுடாப் பகுதியான ராமேசுவரத்தில் பாம்பன் கடல் பகுதியில் கடல் நீரின் நிறம் பச்சையாக மாறியது மட்டுமில்லாமல், அப்பகுதியில் மீன்களும் இறந்து குவிவதால் மீனவர்கள் மத்தியில் மட்டுமல்லாது பொதுமக்கள் மத்தியிலும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
 

எண்ணற்ற உயிரிகளையும், ஏராளமான கடல்வளத்தையும் உள்ளடக்கியது மன்னார்வளைகுடாப் பகுதி. ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் உள்ள இப்பகுதியிலுள்ள பாம்பன் குந்துகால் சின்னபாலம் கடல் பரப்பு, சிங்கிலி தீவு மற்றும் குருசடை தீவு உள்ளிட்ட பல தீவுகளை உள்ளடக்கிய இக்கடல் பகுதி மிகவும் முக்கியமானது. இங்குள்ள பாம்பன் குந்துகால் பகுதியில் நேற்று மாலை வேளையில், நீல நிறத்திலுள்ள கடல் திடுமென பச்சை வண்ணத்திற்கு மாறி காட்சியளித்தது. அத்துடன் மாசுகள் குவிந்து நுரை மிதந்ததால் சுவாசிக்க வழியின்றி, இப்பகுதியிலுள்ள கிளி, ஓரா மீன்கள் செத்து குவிந்தது. இதனால் பதட்டமடைந்த மீனவர்களும், பொதுமக்களும் அருகிலுள்ள மண்டபம் மத்திய கடல் மீன் ஆராய்ச்சி நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். 


 

சம்பவ இடத்திற்கு வந்த ஆராய்ச்சி நிலையத்தார் பெரிய பெரிய டப்பாக்களில் நீரை சேமித்தவர்கள், இறந்து கிடந்த மீன்களையும் ஆய்வுக்காக எடுத்து சென்றனர். ''இது ஜூலை முதல் செப்டம்பர் வரை கடலில் இயற்கையாக நடக்கக்கூடிய மாற்றமே" என்றனர். எனினும், நேற்று மீன்கள் இறந்த நிலையில் இன்று நண்டுகளும் இறந்து கிடக்க, இதற்காகவே காத்திருக்கும் பறவைகளும் மயங்கி, இறந்து கிடக்கும் மீன்களை உணவிற்கு எடுத்துச் சென்று அக்கம் பக்கத்திலுள்ள குடியிருப்புப் பகுதியில் போடுவதால் நோய் தொற்று அபாயமும் ஏற்பட்டுள்ளது.


 

"கடலில் காணப்படும் ஒரு வகை பாசியான டைடோபிளாங்டன் - ஆல்கே என்ற தாவர நுண்ணுயிர்கள் கடலின் நீல நிறத்தை கிரகித்து பச்சை வண்ணமாக மாற்றுகிறது. கடலில் இந்த பச்சை நிறங்கள் எங்கெங்கு காணப்படுகின்றதோ அதில் அதிகப்படியான வெப்பமும், கார்பன் டை ஆக்சைடும் கண்டிப்பாக இருக்கும். அது ஆபத்தானதும் கூட. இனிவரும் காலங்களில் அனைத்துக்கடல்கள் நீல நிறத்திலிருந்து பச்சை வண்ணமாக மாற சாத்தியம் அதிகம்" என தனது ஆய்வில் எச்சரித்துள்ளது அமெரிக்காவிலுள்ள மசாசூசெட்ஸ் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் என்பதும் நினைவிலிருக்க வேண்டிய ஒன்று.

 

சார்ந்த செய்திகள்

Next Story

திடீர் திடீரென கரையொதுங்கும் மர்மப் பொருட்கள்; அதிர்ச்சியில் மீனவ கிராமம்

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Mysterious objects that suddenly wash ashore; A fishing village in shock

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கடற்கரையில் மர்ம பொருள் ஒன்று ஒதுங்கியது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ளது கீழமூவர்க்கரை மீனவ கிராமம். இந்தக் கிராமத்தின் கடற்கரையை ஓட்டி சிவப்பு நிறத்தில் சுமார் 15 அடி உயரம் கொண்ட மர்ம பொருள் ஒன்று கரை ஒதுங்கியது. இதனைக் கண்ட அந்தப் பகுதி மக்கள் இது என்னவாக இருக்கும் என்ற அச்சத்தில் பூம்புகார் கடலோர காவல் குழும போலீசாருக்கு உடனடியாக தகவல் கொடுத்தனர். இதனையடுத்து உடனடியாக அங்கு வந்த போலீசார் அப்பொருளை ஜேசிபி மூலம் கரைக்கு கொண்டு வந்தனர். அதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் அந்தப் பொருள் கடலில் 'தடை செய்யப்பட்ட பகுதி' என்பதை உணர்த்துவதற்காக மிதக்க விடும் 'போயம்' என்ற கருவி என்பது தெரியவந்தது.

இதேபோல சில மாதங்களுக்கு முன்பு மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழிக்கு அருகே உள்ள நாயக்கர்குப்பம் மீனவ கிராமத்தில் 'அபாயம் தொட வேண்டாம்' என ஆங்கில எழுத்துக்களில் வாசகங்கள் இடம் பெற்ற உருளை ஒன்று ஒதுங்கியது. அதுவும் அந்த நேரத்தில் மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அது ஆபத்து நேரங்களில் நீர்மூழ்கி கப்பல்களில் இருந்து வண்ணப் புகையை உமிழ்ந்து சமிக்கைகளை செய்வதற்கு பயன்படுத்தப்படும் சிலிண்டர் என்பது தெரிய வந்தது குறிப்பிடத்தகுந்தது.

Next Story

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்!

Published on 09/04/2024 | Edited on 09/04/2024
Tamil Nadu fishermen incident for Sri Lanka Navy 

தமிழகம் மற்றும் புதுவைச் சேர்ந்த மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுவது தொடர்ந்து நிகழ்ந்து வருகின்றது. அதோடு படகுகளைப் பறிமுதல் செய்து அரசுடைமையாக்குவது போன்ற நடவடிக்கைகளையும் இலங்கை அரசு மேற்கொண்டு வருகிறது. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் வெகுவாக பாதிக்கப்படும் சூழலும் நிலவி வருகிறது. இத்தகைய சூழலில் நேற்று காலை (08.04.2024) ராமேஸ்வரத்திலிருந்து 250 மேற்பட்ட விசைப்படகில் மீனவர்கள் மீன்பிடிக்கக் கடலுக்குச் சென்றனர்.

அதன்படி ராமேஸ்வரம் மீனவர்கள் கச்சத்தீவு அருகே மீன்பிடித்து விட்டு இன்று (09.04.2024) அதிகாலை 3 மணியளவில் மீனவர்கள் கரைக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர். இந்நிலையில் அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் ராமேஸ்வரம் மீனவர்கள் மீது ராட்சத மின் விளக்கு ஒளியை வீசியுள்ளனர். மேலும் ஒலிபெருக்கி மூலம்,‘இங்கிருந்து வெளியேறுங்கள். இல்லையென்றால் உங்களைக் கைது செய்வோம்’ என எச்சரிக்கை செய்துள்ளனர். அதன் பின்னர் மீனவர்களின் பல லட்சம் மதிப்புள்ள படகுகள், மின் பிடி வலைகள் மற்றும் ஜி.பி.எஸ். கருவிகளையும் சேதப்படுத்தியுள்ளனர்.

அதே சமயம் இரும்பு கம்பியைக் கொண்டு மீனவர்கள் மீது தாக்குதல் இலங்கை கடற்படையினர் நடத்தியதாகவும், மீனவர்களின் வலைகளை அறுத்து வீசி சேதப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. இந்த தாக்குதல் சம்பவத்தில் ஒரு மீனவருக்குத் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. மற்றொரு மீனவருக்குத் தோள் மற்றும் இடுப்புப் பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் காயம் அடைந்த 2 மீனவர்களும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இலங்கை கடற்படையினர் ராமேஸ்வரம் மீனவர்களை மீன்பிடிக்க விடாமல் தாக்குதல் நடத்திய சம்பவம் மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.