Skip to main content

மெல்லக் கொல்லும் இறால் பண்ணைகள்..!

Published on 15/04/2019 | Edited on 15/04/2019

 

    தடைச்செய்யப்பட்ட வேதிப்பொருட்களாலும், விதிமுறைக்கு புறம்பான செயல்களாலும் எங்களை மெதுவாகக் கொல்கின்றது இறால் பண்ணைகள் என மாவட்ட ஆட்சியருக்கு மனு அனுப்பி உயிரைக் கையில் பிடித்தபடி காத்திருக்கின்றனர் தாமோதரண் பட்டிண கிராம மக்கள்.

 

t

   

" ராமநாதபுரம் மாவட்டத்தின் நெற்களஞ்சியம் என்று சொல்லக்கூடிய திருவாடானை தாலுகா வட்டாணம் ஊராட்சிக்கு உட்பட்ட கடற்கரை கிராமமே தாமோதரன் பட்டிணம்.! இந்த கிராம மக்களின் பிரதான தொழில் மீன்பிடி. இக்கிராமத்தின்  மூன்று  பகுதியில் விவசாய விளை நிலங்கள் உள்ளது. கிழக்கு பக்கம் கடல் உள்ளது. சுவையான குடிநீர் நிறைந்த ஊரணி  பசுமையான வயல் வெளிகள், மரங்கள் என பசுமையாக காட்சியளிக்கும் இக்கிராமம் வெகு விரைவில் பாலைவனமாக மாறபோவது மட்டுமன்றி மக்கள் வாழ தகுதியற்ற இடமாக மாற போவதும் உறுதி. இதற்கு இங்கு செயல்பட்டு வரும் இறால் பண்ணைகளே காரணம்." என மாவட்ட நிர்வாகத்திற்கு எதிராகப் போர்க்கொடி உயர்த்தி வருகின்றனர் இவ்வூர் மக்கள்.

 

t

 

 பொதுவாக இறால் பண்ணைகள் மக்கள் குடியிருப்புகளுக்கு அருகிலோ விவசாய விளை  நிலங்கள் அருகிலோ செயல்பட அனுமதிப்பது மிகப்பெரிய சட்ட விதிமீறல். பொதுவாக இறால் பண்ணை கழிவு நீரை சுத்திகரிப்பு செய்யாமல் கடலுக்குள் வெளியேற்ற கூடாது. அடுத்து  இங்கு செயல்படும் இறால் பண்ணையோ உவர்நீர் இறால் பண்ணை. இதில்  60 சதவீதம் கடல் நீரும் 40 சதம் நல்ல தண்ணீரும் இருக்கும். இதில் இறால் வளர்ச்சி கூடுதலாக இருக்க வேண்டும் என்பதற்காக. குளோரோ பெனிகால், குளோரோ பார்ம், நியோமைனஸ், நேட்ரோயூரான்ஸ் போன்ற தடை செய்யப்பட்ட வேதிபொருட்களை பண்ணை உரிமையாளர்கள் லாப நோக்கத்திற்காக பயன்படுத்துகின்றனர்.

 

இது ஆபத்தானது இந்த வேதிப் பொருள் கலந்த கழிவு நீர் நிலத்தில் தேங்கும் பொழுது அது நம் குடிநீர் நிலைகளில் கலக்கும் அபாயம் உள்ளது. அது கிட்னி பாதிப்பு கேன்சர் பாதிப்புகளை ஏற்படுத்தும். இந்த கிராமத்தை பாழ்படுத்திவரும் இறால் பண்ணையை உடன் தடை செய்திட கோரி மனுக்களை உள்ளூர் விஏஓ தொடங்கி மந்திரி, மாவட்ட ஆட்சியர் வரை கொடுத்துப் பார்த்தோம். பலனில்லை. விரைவில் போராட்டம் நடைபெறும் என்கின்றனர்" கிராமத்தினை சேர்ந்தப் போராட்டக்குழுவினர். இதனால் இங்கு பரப்பரப்பு நிலவி வருகின்றது.

 

சார்ந்த செய்திகள்