Skip to main content

“நீ தாத்தாவா இருக்கலாம்; ஆனா என்னோட தோழன்டா!” - கண்கலங்க வைக்கும் நண்பர்களின் நெகிழ்ச்சி சம்பவம்!

Published on 17/08/2021 | Edited on 17/08/2021

 

Ramanathapuram District, Kannirajapuram High School Students Reunion

 

1985-86-ல் பத்தாம் வகுப்பு படித்த மாணவ, மாணவியர்கள் மீண்டும் சந்தித்த நிகழ்வு ரொம்பவே நெகிழ்ச்சியாக நடந்து முடிந்துள்ளது. ஒவ்வொருவரின் பேச்சு, குரலை வைத்து அடையாளம் கண்ட நிகழ்வும் நடந்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டம், கன்னிராஜபுரம், அரசு உயர்நிலைப்பள்ளியில் தான் இந்த நிகழ்வு நடைபெற்றது.

 

மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனை இசிஜி ஆபரேட்டர் வில்சன் புஷ்பராகம், “நம்மோடு 35 வருடங்களுக்கு முன்பு 10ம் வகுப்பு படித்த தோழர்களும் தோழிகளும் ஒருமுறை அனைவரையும் ஒன்றாகக் கூடி சந்திக்க வேண்டும் என்று தொடர்பில் இருந்த நண்பர்களிடம் சொல்லிக் கொண்டிருந்தவர், அதற்காக பழைய மாணவர்கள் அனைவரின் செல்பேசி எண்களைத் தேடிக் கண்டறிந்து பள்ளிப் பருவ நண்பர்கள் மீண்டும் சந்திக்கும் இந்த நிகழ்வை ஒருங்கிணைத்தார்” என்று அந்த பழைய மாணவர்கள் சந்திப்பில் பங்கேற்ற ஒருவர் நம்மிடம் தெரிவித்தார். மேலும், “இந்த தேடலுக்காக சில மாதங்கள் ஆனது” என்றும் தெரிவித்தார். 

 

இவர்களோடு படித்த பலர் வணிகர்களாகவும், ஆசிரியர்களாகவும் தமிழகம் முழுவதும் பரவியுள்ளனர். பலர் கரோனா ஊரடங்கால் தொழில் செய்ய முடியாமல் சொந்த ஊர்களுக்கு வந்திருந்தனர்.

 

ஒன்றிணையும் நாள் வந்தது.. ஒருங்கிணைப்பாளர்கள் தர்மராஜ், கார்மேகம், ஜெர்மினியான்ஸ், தாமஸ் ஆகியோர் சந்தோஷ மனநிலையில், “யாரெல்லாம் வருவாங்களோ, வந்தாலும் நமக்கு அடையாளம் தெரியுமா? ஆளே மாறி இருப்பாங்களே. பள்ளியை விட்டு போன பிறகு இதுவரை பார்க்காதவங்க நிறையப் பேர் இருக்காங்களே, எப்படி அடையாளம் கண்டு அழைப்பது. அவங்களா தன்னை அறிமுகம் செய்வாங்களா” என்று நெஞ்சு படபடப்போடு வழிமேல் விழிவைத்து காத்திருந்தனர்.

 

மற்றொரு பக்கம் கடல் மீன்களோடு மதிய உணவு தயாராகிக் கொண்டிருந்தது. கரோனா கட்டுப்பாடுகள் நடைமுறையில் இருப்பதால் படித்த பள்ளியில் இல்லாமல் கடலோரத்தில் ஒரு தோப்பில் தான் இந்த நிகழ்வு நடக்கிறது.

 

ஒவ்வொருவராக வரவர அவர்களில் சிலர் அடையாளம் தெரிந்து கொண்டு பெயர் சொல்லி அழைக்கும் போதே.. ஆனந்தக் கண்ணீரும் வந்துவிட்டது. “டேய் எப்படிடா இருக்கே” என்று சில பெண்கள் பழைய தோழர்களாகவே அழைத்தனர். “ஏய் என்னப்பா பெரிய ஆளாகி பேரன்களையும் பார்த்துட்டோம்; நீ டேய்னு அழைக்கிறேனு” கேட்க.. “நீ தாத்தாவா இருந்தாலும் எனக்கு தோழன் தான்டா” என்ற அந்த பேச்சுகளை ரசித்தனர். 

 

சிலரது சிரிப்பு, மாறாத சில வார்த்தைகளுமே அவர்களை அடையாளம் காட்டியது. 35 பேர் இந்த மீள் சந்திப்புக்கு வந்திருந்தனர். பலர் தங்கள் குழந்தைகள், பேரக்குழந்தைகளுடன் வந்திருந்தனர். “நாம 35 வருசத்துக்குப் பிறகு ஒன்று கூடி இருக்கிறோம். அதனால குலுக்கல் முறையில தங்கக் காசும், வெள்ளிக்காசும் தரப்போறேன்” என்று தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் பணிபுரியும் சாம்நியூபிகின் நண்பர்களை உற்சாகப்படுத்தி, இரு தங்கக்காசுகளும், இரு வெள்ளிக்காசுகளும் பரிசாக வழங்கினார். 

 

தங்கக்காசுகள் இராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் ராஜகுரு, பார்வதிக்கும், வெள்ளிக்காசுகள் சக்திவேல், தமிழரசிக்கும் வழங்கப்பட்டன. சென்னை, மதுரை போன்ற பல ஊர்களிலிருந்து வந்தவர்கள் 35 ஆண்டுகளுக்குப் பின்னர் தங்கள் பள்ளிப் பருவ நண்பர்களை உணர்ச்சிப் பெருக்கோடு சந்தித்துப் பேசி மகிழ்ந்தனர். நம்மில் சிலர் நோய்வாய்ப்பட்டு இறந்துள்ளனர். அவர்களையும் இப்ப நினைத்துப் பார்க்கிறோம். இனிமேல் ஒவ்வொரு வருசமும் சந்தித்தால் நல்லா இருக்கும் என்று கூடிப் பேசி கலைந்து சென்றனர். இத்தனை வருசத்துக்குப் பிறகு சந்திச்ச இந்த மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை என்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

''குசும்ப பாருங்க... வாட்ஸ் அப்பில் இப்படியெல்லாம் பரப்புகிறார்கள்''-ஓபிஎஸ் ஆதங்கம்

Published on 12/04/2024 | Edited on 12/04/2024
They are spreading all this on WhatsApp" - OPS

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தொடங்கியுள்ளன.

இந்நிலையில் பரப்புரையில் ஈடுபட்ட ஓ.பன்னீர்செல்வம் தன்னுடைய சின்னத்தை திராட்சை கொத்து என பலர் வாட்ஸ் அப்பில் தவறாக பரப்புவதாக குற்றச்சாட்டையும், ஆதங்கத்தையும் வெளிப்படுத்தியுள்ளார்.

ராமநாதபுரத்தில் திறந்தவெளி வேனில் பிரச்சாரம் மேற்கொண்ட ஓ.பன்னீர்செல்வம் பேசுகையில், ''நான் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடுகிறேன். சுயேட்சை வேட்பாளராக போட்டியிடுபவர்கள் மூன்று சின்னங்களைக் குறிப்பிட வேண்டும். நான் மூன்று சின்னங்களைக் குறிப்பிட்டு கொடுத்திருந்தேன். இப்பொழுது நிறைய பன்னீர்செல்வங்கள் வந்து விட்டார்கள். என்னுடன் சேர்த்து ஆறு பன்னீர்செல்வம். மற்ற ஐந்து பேரும் நான் என்னென்ன சின்னம் எழுதிக் கொடுத்தேனோ அதே சின்னத்தை எழுதி கொடுத்திருக்கிறார்கள். ஒரு குழப்ப சூழ்நிலையை உருவாக்க வேண்டும் என்று அப்படி செய்துள்ளார்கள். இப்பொழுது என்ன செய்திருக்கிறார்கள் என்றால், குசும்பு பாருங்க, ஓபிஎஸ் சின்னம் வாளி என வாட்ஸ் அப்பில் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஓபிஎஸ் சின்னம் திராட்சை கொத்து என வாட்ஸ் அப்பில் பரப்புகிறார்கள்.

நான் எழுதிக் கொடுத்த மூன்று சின்னங்களையும் ஓபிஎஸ் சின்னம் ஓபிஎஸ் சின்னம் என்று செல்லில் இன்று பறக்கவிட்டு வருகிறார்கள். இது எவ்வளவு கீழ்த்தரமான அரசியல். ஒரு சின்னத்தை இரண்டு வேட்பாளர்கள் கேட்டால் குலுக்கள் முறையில் கொடுப்பார்கள். சின்னம் ஒதுக்குவது குறித்து நேரம் காலம் ஒதுக்கப்பட்டது. உங்களுடைய வாழ்த்துக்களால், ஆசிர்வாதத்தால் நீங்கள் தந்த வரத்தினால் முக்கனிகளில் ஒன்றான பலாப்பழம் சின்னம் கிடைத்துள்ளது. அது உங்களால் தான் கிடைத்தது. உங்கள் ஆசியால் எனக்கு இந்தச் சின்னம் கிடைத்தது''என்றார்.

Next Story

தனுஷ்கோடிக்கு செல்ல சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை!

Published on 01/04/2024 | Edited on 01/04/2024
Ban for tourists to go to Dhanushkodi

தனுஷ்கோடிக்கு செல்ல சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை விதித்து ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தனுஷ்கோடி தமிழகத்தின் முக்கியத்துவம் வாய்ந்த சுற்றுலாத் தலமாக விளங்கி வருகிறது. இந்நிலையில் தனுஷ்கோடி பகுதியில் நேற்று (31.03.2024) மாலை 6 மணியளவில் தனுஷ்கோடி 3வது சட்டம் முதல் அரிச்சல்முனை வரை உள்ள தெற்கு மன்னார் வளைகுடா பகுதியில் 6 மீட்டர் முதல் 10 மீட்டர் வரை கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. அதன் தொடர்ச்சியாக ராட்சத அலைகளும் எழுந்துள்ளன.

இதன் காரணமாக தேவலயாம், சாலையோரங்களில் உள்ள கடைகளிலும் கடல் நீர் உட்புகுந்தன. கடல் ஓரங்களில் வைக்கப்பட்டிருந்த லட்சக்கணக்கான மதிப்பிலான மீன் பிடி வலைகள் மணலில் புதைந்து சேதமடைந்துள்ளன. எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக தனுஷ்கோடிக்கு செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தனுஷ்கோடியில் தற்போது சூறைக்காற்றுடன் 5 அடி உயரம் வரை கடல் அலைகள் எழுவதால் மறு உத்தரவு வரும் வரை சுற்றுலாப் பயணிகள் தனுஷ்கோடி கடலுக்குச் செல்ல தடை விதித்து ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.