Skip to main content

பயங்கரவாத தொடர்பு- 3 பேருக்கு பிப்ரவரி 6 ஆம் தேதி வரை சிறை!

Published on 23/01/2020 | Edited on 23/01/2020

சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட களியக்காவிளை எஸ்.எஸ்.ஐ. வில்சன் கொலையில் தொடர்புடைய அப்துல் சமீமுக்கு பணம் பரிமாற்றம் செய்தது தொடர்பாகவும், தாங்கள் சார்ந்துள்ள இயக்கத்திற்கு ஆட்கள் சேர்க்க உதவியாகவும் செயல்பட்ட மூன்று நபர்களை கைது செய்துள்ளது ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை.

 
கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை காவல் நிலைய சிறப்பு சார்பு ஆய்வாளர் வில்சன் தீவிரவாதக்கும்பலால் சமீபத்தில் படுகொலை செய்யப்பட்டார். இது உலகளவில் எதிரொலிக்க இந்தியாவிலுள்ள என்.ஐ.ஏ., ரா, உள்ளிட்ட நாட்டிலுள்ள அனைத்து சிறப்பு புலனாய்வு அமைப்புகள் அனைத்தும் நாட்டின் இறையாண்மைக்கு எதிராக செயல்படுபர்களுக்கு எதிராக தீவிர தேடுதல் வேட்டையை துவங்க, அவர்களுக்கு உறுதுணையாக அந்தந்த மாநில காவல்துறையும் சிறப்பாக செயல்பட்டு வந்தது. இந்நிலையில், சுட்டுப்படுகொலை செய்யப்ப்பட்ட எஸ்.எஸ்.ஐ. கொலையில் தொடர்புடையவர்களுக்கு நிதி கொடுத்தவர்களும், இந்தியாவின் இறையாண்மைக்கு எதிராக மதரஸாக்களில் தீவிரவாத பயிற்சி அளிக்க திட்டம் தீட்டிய மூன்று நபர்களை ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை கைது செய்துள்ளது.

ramanathapuram district illegal activities police arreted three persons court custody order

 
"தேவிபட்டினம் புஹாரியா பள்ளி மைதானம் அருகில், என்.ஐ.ஏ. தொடர்புடைய வழக்கிலுள்ளவர்கள் அங்கிருந்த இளைஞர்களிடம் பேசிக்கொண்டிருப்பதாக வந்த ரகசிய தகவலின் அடிப்படையில் வழக்கமான ரோந்துப்பணியில் இருந்த நான் சக போலீசார் சகிதம் அங்கு சென்ற போது நால்வர் அங்கிருந்தனர். எங்களைப் பார்த்ததுமே தப்பியோடிய முயற்சித்தனர். அதில் மூவரை மட்டுமே பிடிக்க முடிந்தது. அவர்களிடம் விசாரணை செய்ததில் தப்பியோடிய நபர் தேவிபட்டிணம் அன்பு பக்ருதீன் மகனான சேக் தாவூத் என்றும், மீதமுள்ளோர்  நத்தம் கீழக்கரையை சேர்ந்த கமால் மகன் புறாக்கனி (எ) பிச்சைக்கனி, விழுப்புரம் மணல்மேட்டை சேர்ந்த முகமது அமீர், கடலூர் கோண்டூரை முகமது அலி என்பது தெரியவந்தது. 


மேற்படி இவர்கள் கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை சிறப்பு சார்பு ஆய்வாளர் வில்சன் கொலையில் தொடர்புடைய அப்துல் சமீமுக்கு பணம் பரிமாற்றம் செய்ததும், தாங்கள் சார்ந்துள்ள இயக்கத்திற்கு ஆட்கள் சேர்க்க உதவியாக முகமது ரிபாஸ் குறித்து விவாதித்ததும் தெரிந்தது. மேலும் ஜனநாயகத்திற்கு எதிராக ஆட்களை திரட்டி தேவிபட்டினம், கீழதில்லையேந்தல் மதரஸாக்களில் பயிற்சி அளிப்பது குறித்து விவாதித்திக்கொண்டிருந்ததும் தெரிந்தது" என தேவிபட்டினம் காவல் நிலைய எஸ்.ஐ.ஜெகதீஸ்வரன் புகாரளிக்க இவர்கள் மூவர் மீதும் நாட்டின் இறையாண்மைக்கு எதிராக செயல்பட்டதாக 9 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த தேவிபட்டினம் போலீஸார் மூவரையும் கைது செய்து ராமநாதபுரம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அதைத் தொடர்ந்து நீதிபதி ஜெனிட்டா மூவரையும் பிப்ரவரி 6- ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதையடுத்து போலீசார் மூவரையும் மதுரை மத்திய சிறையில் அடைத்தனர். 


கைதானவர்களிடமிருந்து ஜிகாத், ஜனநாயகம் ஒரு சூப்பர் ஆகிய இஸ்லாமிய மார்க்க புத்தகங்களும், 3 செல்போன்களும் பறிமுதல் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தப்பியோடிய சேக் தாவூத்தை வலைவீசி தேடி வருகின்றனர். 


 

சார்ந்த செய்திகள்

Next Story

ஆயுதக் கிடங்காக இருந்த அரண்மனையைப் பாதுகாக்க தொன்மைப் பாதுகாப்பு மன்றம் கோரிக்கை!

Published on 19/03/2024 | Edited on 19/03/2024
Antiquities Protection Forum request to protect the palace which was a weapons warehouse

ராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணியில், சேதுபதி மன்னர் வரலாற்றில் முக்கிய இடம் பிடித்த அரண்மனையை பாதுகாக்கவேண்டும் என திருப்புல்லாணி சுரேஷ் சுதா அழகன் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளி, தொன்மைப் பாதுகாப்பு மன்றம் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. 2010 முதல் செயல்பட்டு வரும் இம்மன்றத்தின் தலைவராக, தலைமை ஆசிரியர் ரெ.புரூணா ரெத்னகுமாரி உள்ளார். இம்மன்ற மாணவர்கள் 55 பேர் மன்றச் செயலர் வே.ராஜகுரு, பட்டதாரி ஆசிரியர் கௌரி ஆகியோர் தலைமையில் அரண்மனையை பார்வையிட்டனர். 

அப்போது அரண்மனை பற்றி வே.ராஜகுரு கூறியதாவது, “டச்சுக்காரர்கள், கி.பி.1759-ல், கீழக்கரையில் ஒரு நெசவுத் தொழிற்சாலையை அமைத்துக்கொள்ள செல்லமுத்து சேதுபதியிடம் அனுமதி பெற்று, நாளடைவில் அதை ஒரு கோட்டையாக மாற்ற முயற்சி செய்த போது போர்ப்பதற்றம் ஏற்பட்டது. பாதுகாப்புக்காக திருப்புல்லாணியில் ஒரு கோட்டை கட்ட முடிவு செய்த நேரத்தில், செல்லமுத்து சேதுபதி இறந்துவிட்டார். இரண்டு வயதில் முத்துராமலிங்க சேதுபதி மன்னரான போது, அவருடைய தளவாய் தாமோதரம் பிள்ளை இந்த அரண்மனையைக் கட்டியுள்ளார். கி.பி.1767-ல் கொண்ட உடன்பாட்டுக்குப்பின் சேதுபதிகள் டச்சுக்காரர்களுடன் இணக்கமாயினர்

ஆங்கிலேயர்கள் கி.பி.1772-ல் சேதுநாட்டை கைப்பற்றியபிறகு, அவர்களின் ஆதிக்கத்தை அகற்ற, வெளியுலகுக்குத் தெரியாத மறைவான காட்டுப் பகுதியில் இருந்த இந்த அரண்மனையை ஆயுதத் தொழிற்சாலையாகவும், ஆயுதக் கிடங்காகவும் முத்துராமலிங்க சேதுபதி பயன்படுத்தியுள்ளார்.

தெற்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் இதற்கு இரு வாசல்கள் உள்ளன. இதன் உள்ளே சதுர வடிவக் கட்டடங்கள் நான்கு உள்ளன. ஒவ்வொரு கட்டடத்தின் மூலையிலும் கதவு உள்ள நான்கு அறைகளும், நீண்ட நான்கு தாழ்வாரங்களும் என மொத்தம் 16 அறைகளும் 16 தாழ்வாரங்களும் உள்ளன. ஒவ்வொரு கட்டடத்தின் நடுவிலும் ஒரு குளம் உள்ளது. இதிலிருந்து கதவு ஜன்னல்களை பிரித்தெடுத்துவிட்டதனால் ஆங்காங்கு மேற்கூரை மற்றும் சில பகுதி சுவர்கள் இடிந்த நிலையில் உள்ளன. கட்டடங்களில்  மரங்கள் வளர்ந்துள்ளன.

இதன் மேலே செல்வதற்கு படிக்கட்டுகள் இருப்பதும், மேலே வீரர்கள் நின்று காவல் காக்கும் இடம் இருப்பதும், உள்ளே குளங்கள் உள்ளதும் இது ஆயுதத்  தொழிற்சாலையாக இருந்துள்ளதை உறுதிப்படுத்துகின்றன. இதேபோன்ற ஒரு ஆயுத தொழிற்சாலை அரண்மனை ரெகுநாதபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் இருந்து அழிந்துள்ளது. அதன் அடிப்பகுதியையும், ஒரு பகுதி சுற்றுச்சுவரையும் இப்போதும் அங்கு காணலாம். இவ்வாறு அவர் கூறினார். தங்கள் ஊர் வரலாற்று பெருமை சொல்லும் இந்த அரண்மனையை நினைவுச் சின்னமாக அறிவித்து அரசு பாதுகாக்க வேண்டும் என தொன்மைப் பாதுகாப்பு மன்றத்தினர் கேட்டுக் கொண்டனர்.

Next Story

ரூ. 112 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்; ராமநாதபுரத்தில் பரபரப்பு

Published on 11/03/2024 | Edited on 11/03/2024
Rs. 112 Crore cannabis seized  to Sri Lanka

தமிழக கிழக்கு கடற்கரை கிராமப் பகுதிகளைக் குறிவைத்து அந்தப் பகுதிகள் மூலம் இலங்கைக்கு கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் கடத்தல் நடப்பதும் அதேபோல இலங்கையில் இருந்து கடல் மார்க்கமாக தங்கம் உள்ளிட்ட பொருட்கள் கடத்தப்பட்டு வருவதும் வழக்கமாகிவிட்டது.

இந்த நிலையில் தான், புதுக்கோட்டை மாவட்ட எல்லைப் பகுதிகள் வழியாக இலங்கைக்கு கஞ்சா கடத்த இருப்பதாகக் கிடைத்த தகவலின் பேரில், திருச்சி மற்றும் ராமநாதபுர சுங்கத்துறை நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் (CIU) சோதனையில் ஈடுபட்டபோது மீமிசல் வெளிவயல் உப்பளம் அருகே நேற்று இரவு ராமநாதபுரம் மாவட்டம் எஸ்.பி.பட்டினத்தைச் சேர்ந்த அமீர் சுல்தான் என்பவரது இறால் பண்ணையில் இருந்து ரூ. 110 கோடி மதிப்புள்ள 100 கிலோ கஞ்சா ஆயில் (அசிஸ்), மற்றும் ரூ.2 கோடி மதிப்புள்ள 874 கிலோ கஞ்சா மூட்டைகள் உட்பட மொத்தமாக ரூ.112 கோடி மதிப்பிலான போதைப் பொருள் வைத்திருந்ததைக் கண்டுபிடித்து பறிமுதல் செய்து ராமநாதபுரம் சுங்கத்துறை அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர்.

மேலும் இந்த கடத்தல் தொடர்பாக எஸ்.பி.பட்டினத்தைச் சேர்ந்த இருவரையும் மீமிசல் அரசனகரிபட்டினம் பகுதியைச் சேர்ந்த இறால் பண்ணை காவலாளி முஜிபுர் ரஹ்மான் உட்பட மூன்று பேரையும் பிடித்து வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். தொடர் விசாரணையில், இந்த போதைப் பொருட்கள் எங்கிருந்து வாங்கப்பட்டது? யாருக்கு விற்பனை செய்யப்படுகிறது? இலங்கைக்கு எந்த வழியாக யார் கொண்டு செல்ல இருந்தது என்பதும் மேலும் வேறு கஞ்சா பதுக்கல் குடோன்கள் எங்கெல்லாம் உள்ளது என்றும் விசாரணையில் தெரிய வரும் என்கின்றனர்.

மேலும், தலைமறைவாக உள்ள போதைப் பொருட்களின் உரிமையாளரைத் தேடி வருவதாக திருச்சி மத்திய நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சுமார் 112 கோடி மதிப்பிலான போதைப் பொருட்களை மத்திய சுங்கத்துறை போலீசார் அதிரடியாக பறிமுதல் செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.