Skip to main content

பாலியல் தொல்லைக் கொடுத்த மாமனாரைக் கொலை செய்த மருமகள் கைது!

Published on 21/08/2021 | Edited on 21/08/2021

 

ramanathapuram district father in law incident daughter in law police investigation

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் அருகே கேழல் கிராமத்தைச் சேர்ந்த வினோத் ராஜனுக்கும் (வயது 27),  கனிமொழிக்கும் (வயது 25) கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இந்த நிலையில் நான்கு ஆண்டுகள் கடந்தும் குழந்தைகள் இல்லாமல் விரக்தியில் இருந்து உள்ளனர். இதையடுத்து, மருமகள் கனிமொழிக்கு, மாமனார் முருகேசன் வீட்டில் ஆளில்லாத நேரத்தில் பாலியல் தொல்லைக் கொடுத்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதுப் பற்றி கனிமொழி தனது கணவரிடம் பலமுறை கூறியும் அவர், இதைக் கண்டுக் கொள்ளவில்லை. 

 

இதனால் கனிமொழியிடம் அவரது மாமனாரின் பாலியல் சீண்டல்கள் நாளுக்கு நாள் அத்துமீறியதையடுத்து அவரை கொலை செய்வது என முடிவு செய்துள்ளார். அதன் தொடர்ச்சியாக, கடந்த 20 நாட்களுக்கு முன்பு, மாமனார் சாப்பாட்டில் விஷம் வைத்து கொடுத்துள்ளார். அதைச் சாப்பிட்ட மாமனாருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, அவர் பரமக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில், மறுநாளே சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். யாருக்கும் எதுவும் சந்தேகம் வராததால், அவரது இறுதிச் சடங்குகள் நடந்து முடிந்தது. உணவில் விஷம் வைத்து கொலை செய்த மருமகள் அதனை யாரிடமும் தெரிவிக்காமல் தொடர்ந்து மறைத்து வந்துள்ளார்.

 

மாமனாரை கொலை செய்ததால் கனிமொழி மிகுந்த மன அழுத்தத்தில் இருந்துள்ளார். இந்த நிலையில், கீழக்குளம் கிராம நிர்வாக அலுவலரிடம் சரணடைந்து நடந்த விவரங்களைக் கூறினார். அதைத் தொடர்ந்து, கிராம நிர்வாக அலுவலர் கொடுத்தப் புகாரின் அடிப்படையில் கீழத்தூவல் காவல்துறையினர் கனிமொழியை கைது செய்து தீவிர விசாரணை நடத்தினர். 

 

அப்போது காவல்துறையிடம் கனிமொழி அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது, "எனக்கு மூன்று ஆண்டுகளாக மாமனார் பாலியல் தொல்லைக் கொடுத்து வந்தார். எத்தனையோ முறை கண்டித்தும் அவர் கேட்கவில்லை; என்னிடம் அத்துமீறி நடந்தார். இதுப் பற்றி கணவரிடம் கூறினேன். அவரும் இதனை கண்டுக் கொள்ளவில்லை. இதனால் இனி மேலும் பொறுக்க முடியாததால் மாமனாருக்கு சாப்பாட்டில் விஷம் வைத்துக் கொடுத்தேன். நடந்த சம்பவத்தை நான் யாரிடமும் சொல்லாமல் மறைத்தேன். ஆனால் எனக்கு மனசு கேட்கவில்லை. இதனால் சரணடைந்தேன்". இவ்வாறு அவர் வாக்குமூலத்தில் கூறியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

தீ விபத்து; பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
incident for hotel near Patna Railway Station Bihar

பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள ஹோட்டலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைக்கும் பணியிலும், மீட்புப் பணியிலும் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் சிக்கிய 12 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக முதற்கட்டமாக அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவம் பாட்னாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்த தீ விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்ததாகவும், 7 பேர் பலத்த காயமடைந்துள்ளனர் என பாட்னா போலீஸ் எஸ்.எஸ்.பி. ராஜீவ் மிஸ்ரா தெரிவித்திருந்தார்.

இது குறித்து பாட்னா தீயணைப்புத் துறை போலீஸ் டிஜி, ஷோபா ஓஹட்கர் கூறுகையில், “தீயணைப்புத் அணைக்கும் மேற்கொண்டோம். இதுபோன்ற நெரிசலான பகுதிகளில் விபத்துகளை தடுக்க தொடர்ந்து சிறப்பு கவனம் செலுத்தி வருகிறோம். இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க நாங்கள் தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். சிலிண்டர் வெடித்ததால் இந்த தீ விபத்து நடந்தது. இருப்பினும் தற்போது தீ முற்றிலும் அணைக்கப்பட்டது” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பாட்னா சட்டம் மற்றும் ஒழுங்கு போலீஸ் டிஎஸ்பி கிருஷ்ணா முராரி கூறுகையில், “இந்த தீ விபத்தில் 5 முதல் 6 பேர் வரை இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 30க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். அதில் பலத்த காயம் அடைந்த 7 பேர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார். 

Next Story

சிகிச்சையின் போது இளைஞர் பலி; விசாரணைக் குழு அமைக்க முடிவு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Youth treatment incident decision to set up an investigation team

புதுச்சேரி மாநிலம், முத்தியால்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் செல்வநாதன். மார்க்கெட் கமிட்டி ஊழியராக பணிபுரிந்து வரும் செல்வநாதனுக்கு ஹேமச்சந்திரன், ஹேமராஜன் என இரண்டு மகன்கள் இருந்தனர். 26 வயதான ஹேமச்சந்திரன், தனியார் நிறுவனத்தில் டிசைனராக பணிபுரிந்து வந்தார். இத்தகைய சூழலில் உடல் பருமனாக இருந்த ஹேமச்சந்திரன், சுமார் 150 கிலோவுக்கு மேல் இருந்துள்ளார். இதனால், மன உளைச்சலில் இருந்த ஹேமச்சந்திரன் உடல் எடையை குறைக்க சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் மருத்துவ ஆலோசனை பெற்று வந்தார். அங்கு அவரது உடல் பருமனை குறைப்பதற்காக, அறுவை சிகிச்சை மூலம் கொழுப்பு நீக்க சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, ஹேமச்சந்திரன் கடந்த 22 ஆம் தேதி (22.04.2024) மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அதன் பின்னர் அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை தொடங்கிய 15 நிமிடங்களிலேயே, மாரடைப்பு ஏற்பட்டு நேற்று (24.04.2024) ஹேமச்சந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து, ஹேமச்சந்திரன் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது பெற்றோர்கள் புதுச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்தப் புகாரின் பேரில், போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உடல் பருமனைக் குறைக்க சிகிச்சை மேற்கொண்ட 26 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், உடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் மரணமடைந்ததை தமிழக மருத்துவம் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் உறுதி செய்துள்ளார். மேலும் இளைஞர் உயிரிழந்தது குறித்து குழு அமைத்து விசாரணை செய்யப்படும் என இளைஞரின் பெற்றோரிடம் தொலைபேசியில் பேசிய அமைச்சர் மா. சுப்ரமணியன் உறுதியளித்துள்ளார். அதே சமயம் மகனை இழந்த பெற்றோருக்கு தனது ஆறுதலை அமைச்சர்  மா. சுப்ரமணியன் தெரிவித்தார். இந்த விசாரணைக் குழு விரைவில் இளைஞரின் மரணம் குறித்து சம்பந்தப்பட்ட மருத்துவமனையில் விசாரணை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.