Skip to main content

இ-பாஸ் மூலம் கடத்தப்பட்ட போதைப்பொருட்கள்., செம்மரக்கட்டைகள்... பொறிவைத்து பிடித்த போலீசார்!

Published on 22/05/2020 | Edited on 22/05/2020

 

ramanathapuram district e pass police investigation


இறந்தவரின் உடல் வேறொரு இடத்திலிருக்கின்றது. அதனைக் கொண்டு வரவேண்டுமென நடித்து இ- பாஸ் பெற்று போதைப் பொருட்களையும், செம்மரக்கட்டைகளையும் கடத்திய சர்வதேச போதைக் கும்பலுடன் தொடர்புடைய ஒன்பது நபர்களைப் பொறி வைத்து பிடித்துள்ளனர் ராமநாதபுரம் மாவட்டப் போலீசார்.
 


ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனை காவல் துணைச்சரகத்திற்குட்பட்ட பகுதிகளில் பெருமளவில் கள்ளக்கடத்தல் நடைப்பெற்று வருவதாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வருண்குமார் அறிமுகப்படுத்தியிருந்த பிரத்யேக எண்ணிற்குத் தகவல் வர, திருவாடனை டி.எஸ்.பி. புகழேந்தி கணேஷ் தலைமையில் தனிப்பிரிவு போலீஸார் எட்டு போலீஸ் குழுக்களாகப் பிரித்து அமைக்கப்பட்டு தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். 
 

ramanathapuram district e pass police investigation


இதனடிப்படையில் திருவாடனை கிழக்குக்கடற்கரை சாலையிலுள்ள வீரசங்கிலி மடத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஒன்றரை டன் செம்மரக்கட்டைகளைக் கைப்பற்றிய போலீசார், கட்டைகளைப் பதுக்கிய இருவரைக் கைது செய்து விசாரித்தனர். அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் ஆர்.எஸ்.மங்கலம் அருகில் கடத்தலுக்காகப் பதுக்கி வைக்கப்பட்டிருந்த போதைப் பவுடர்கள், போதை மாத்திரைகள் மற்றும் வலி நிவாரண பேஸ்ட் உள்ளிட்டவைகளையும், கடத்தலுக்குப் பயன்பட்ட கார் ஆட்டோ மற்றும் இரண்டு சக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்ததுடன் கடத்தல்காரர்கள் பயன்படுத்திய சுமார் 20- க்கும் மேற்பட்ட செல்பேசிகள், லட்சக்கணக்கான பணம், போதைப் பொருட்களை எடை பார்க்கும் இயந்திரம், அதை பேக்கிங் செய்யும் இயந்திரம் என அனைத்தையும் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்ட நிலையில் பத்திரிகையாளர் உட்பட 7 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 


"ஊரடங்குக் காலத்தில் இறந்தவரின் உடலைக் கொண்டு வருவதாகக் கூறி இ- பாஸ் எனப்படும் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்லும் வகையிலான அனுமதி சீட்டினையும், மாநிலம் விட்டு மாநிலம் செல்லும் அனுமதி சீட்டினையும் பத்திரிகையாளர் போர்வையில் குறுக்கு வழியில் பெற்று, அதனைக் கொண்டு கோவாவில் இருந்து பெங்களூருக்கும், அங்கிருந்து கோவை, மதுரை வழியாக ராமநாதபுரம் வந்தும் போதைப் பொருட்களையும், செம்மரக்கட்டைகளையும் கடத்தி வந்துள்ளனர். 
 

ramanathapuram district e pass police investigation


கடத்தப்பட்ட பொருட்களை நாட்டுப்படகுகள் மூலம் திருவாடனையிலிருந்து தொண்டி வழியாக கடல் மார்க்கமாக இலங்கை வழியாக ஆஸ்திரேலியாவிற்கு அனுப்பவிருந்த நிலையில் பிடிப்பட்டுள்ளனர். பிடிப்பட்ட சரக்குகளின் மதிப்பு ஏறக்குறைய ரூபாய் 5 கோடிக்கும் மிகாமல் இருக்கும், இந்த விசாரணையின் இறுதியில் சில முக்கிய பிரமுகர்கள், இ- பாஸ் கொடுத்த அரசு அதிகாரிகள் மற்றும் சில பத்திரிகையாளர்களும் சிக்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது." என்கின்றனர் விசாரணை அதிகாரிகள்.
 

http://onelink.to/nknapp


மாவட்ட எஸ்.பி.வருண்குமாரோ, "குறுக்கு வழியில் விரைவாகப் பணம் சம்பாதிக்கலாம் என்ற எண்ணத்தில் இளைஞர்கள் இதுபோன்ற சமூக விரோத செயல்களில் ஈடுபட்டுள்ளனர். இது போல் யாரும் ஈடுபட வேண்டாமென" அறிவுறுத்தினார். 

இந்தப் போதைக் கடத்தல் வழக்கில் சிக்கியுள்ள ஆளுங்கட்சி ஆதரவான தொலைக்காட்சியில் பணிபுரியும் பத்திரிகையாளரின் சேவையைப் பாராட்டி குடியரசு தினத்தன்று சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன் பாராட்டுச் சான்றிதழ் வழங்கியது குறிப்பிடத்தக்கது.



 

சார்ந்த செய்திகள்

Next Story

பள்ளிக்கரணை ஆணவக்கொலை சம்பவத்தில் மீண்டும் அதிர்ச்சி; உயிரை மாய்த்த காதலி

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
nn

சென்னையில் சில மாதங்களுக்கு முன்பு காதல் திருமண எதிர்ப்பால் இளைஞர் ஒருவர் ஓட ஓட வெட்டி ஆணவக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில் கொலையான இளைஞனின் காதல் மனைவியும் உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை பள்ளிக்கரணை பகுதியைச் சேர்ந்தவர் பிரவீன். இங்குள்ள ஜல்லடையான்பேட்டை ஷர்மிளா என்ற பெண்ணை கடந்த சில வருடங்களாக பிரவீன் காதலித்து வந்துள்ளார். கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னர் பிரவீன்-சர்மிளா இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுடைய காதலுக்கு இரு வீட்டார் தரப்பிலும் எதிர்ப்புகள் எழுந்த நிலையில் எதிர்ப்பை மீறி இந்தத் திருமணமானது நடைபெற்றது.

காதல் திருமணத்தை தொடர்ந்து அதே பகுதியில் அவர்கள் வசித்து வந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி ஷர்மிளாவின் சகோதரன் தினேஷ் மற்றும் நண்பர்கள் சேர்ந்து இரவு அந்தப் பகுதியில் இளைஞர் பிரவீன் அமர்ந்திருந்தபோது அவரை சரமாரியாக பயங்கர ஆயுதங்களைக் கொண்டு தாக்கினர். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட இளைஞர் பிரவீன் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். போலீசார் விசாரணையில் நடந்தது ஆணவக் கொலை என்பது உறுதியானது. கொலையில் ஈடுபட்ட பெண்ணின் சகோதரர் தினேஷ் உட்பட நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். இந்தச் சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

nn

இதனையடுத்து, மேலும் அதிர்ச்சி தரும் விதமாக பிரவீனின் காதல் மனைவி ஷர்மிளாவும் உயிரிழந்துள்ளார். காதல் கணவன் கொலை செய்யப்பட்டதால் ஷர்மிளா மன உளைச்சலில் இருந்த நிலையில் தற்கொலைக்கு முயன்றுள்ளார். உடனடியாக மீட்கப்பட்டு ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் கடந்த 9 நாட்களாக கோமா நிலையில் சிகிச்சை பெற்றுவந்த ஷர்மிளா, சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும் தன்னுடைய காதல் கணவன் கொல்லப்பட்டது குறித்தும், தன்னுடைய தற்கொலை முடிவு குறித்தும் ஷர்மிளா கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளார். அதில், 'அவன் இல்லாத லைஃப் எனக்கு வேண்டாம். நானும் அவன் கூடவே போறேன்' என உருக்கமாக எழுதியுள்ளதோடு கொலைக்கு காரணமானவர்களின் பெயர்களையும் ஷர்மிளா குறிப்பிட்டுள்ளார்.

ஆணவக் கொலை செய்யப்பட்டு இளைஞர் உயிரிழந்த சம்பவத்தில் காதலியும் தற்கொலை செய்துகொண்டது அங்கு பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Next Story

4 கோடி ரூபாய் சிக்கிய விவகாரம்; ஹோட்டல் ஊழியர்கள் காவல் நிலையத்தில் ஆஜர்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
 4 crore rupees issue; Hotel staff present at police station

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19.04.2024 அன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு முடிந்தது. வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

முன்னதாக தமிழகத்தில் தேர்தல் பரப்புரைகள் தீவிரமாக சென்று கொண்டிருந்த நேரத்தில் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 06.04.2024 அன்று இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்ற ரூ.4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. 6 பைகளில் கட்டுக்கட்டாக இருந்த 500 ரூபாய் நோட்டுகளைப் பறக்கும் படையினர் அதிரடியாகப் பறிமுதல் செய்தனர்.

இதையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்தப் பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் பகீர் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது. இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சம்பவத்தில் ரொக்கமாக நான்கு கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக நயினார் நாகேந்திரன் ஆஜராகி பதிலளிக்கும்படி காவல்துறை தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் நயினார் நாகேந்திரன் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில் விசாரணைக்கு ஆஜராக பத்து நாட்கள் அவகாசம் வேண்டும் என நயினார் நாகேந்திரன் தரப்பில் காவல்துறைக்கு பதில் கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது.

நெல்லையில் நான்கு கோடி ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டது தொடர்பாக நயினார் நாகேந்திரனின் ஹோட்டலில் பணியாற்றிய  ஊழியர்கள் மற்றும் உறவினர்களுக்கு காவல்துறை சார்பில் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பட்டிருந்தது. தாம்பரம் காவல் நிலையத்தில் ஆஜராகி இது தொடர்பாக விளக்கம் அளிக்க உத்தரவிடப்பட்டிருந்தது. இந்நிலையில் நயினார் நாகேந்திரனின் ஹோட்டலில் பணியாற்றிய இரண்டு ஊழியர்கள் தற்போது தாம்பரம் காவல் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜராகி உள்ளனர். ராஜேந்திரனின் உறவினர் ஆஜராகவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் நயினார் நாகேந்திரனின் உறவினர் முருகன் என்பவரிடம் இன்று மாலை விசாரணை நடத்த தாம்பரம் போலீசார் முடிவு செய்திருப்பதாகவும்  தகவல்கள் வெளியாகி உள்ளது.