Skip to main content

கி.பி.10 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சமணத் தீர்த்தங்கரர் சிற்பம் கண்டுபிடிப்பு

Published on 20/08/2019 | Edited on 20/08/2019

 

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே கலையூர் வில்லார் உடையார் ஐயனார் கோயிலில் கி.பி.10 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த உடைந்த நிலையிலான  சமணத் தீர்த்தங்கரர் சிற்பம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

s

 

ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.ராஜகுரு,   திருவாடானை துணை வட்டாட்சியர் சி.ஆண்டி ஆகியோர் கலையூரில் கள மேற்பரப்பாய்வு செய்தபோது, அவ்வூர் வில்லார் உடையார் ஐயனார் கோயிலில் உடைந்த நிலையில் இருந்த சமணத் தீர்த்தங்கரர் சிற்பத்தைக் கண்டுபிடித்தனர்.

 

இது பற்றி தொல்லியல் ஆய்வாளர் வே.ராஜகுரு கூறியதாவது:   ‘’ராமநாதபுரம் மாவட்டத்தில் பெரியபட்டினம், மேலக்கிடாரம், கீழச்சீத்தை, கீழச்சாக்குளம், பசும்பொன், கமுதி, பொக்கனாரேந்தல்,  மேலஅரும்பூர், அருங்குளம், திருப்புல்லாணி, புல்லக்கடம்பன், புல்லுகுடி, புல்லூர், புல்லங்குடி   உள்ளிட்ட இடங்களில் சமண மதம் பரவி இருந்ததற்கான தடயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

 

கலையூரில் கண்டுபிடிக்கப்பட்ட சிற்பம் 2 அடி உயரமும், 1½ அடி அகலமும் உள்ளது.  முழுவதும் கருங்கல்லால் ஆனது. இச்சிற்பத்தில் அசோகமரத்தின் வளைந்த கிளைகளின் கீழ் பிரபாவளி என்னும் ஒளிவட்டம் உள்ளது. அசோகமரத்தின் கிளைகள் அழகாக செதுக்கப்பட்டுள்ளன. பிரபாவளியின் உள்ளே அமர்ந்த நிலையில் சமண தீர்த்தங்கரர் சிற்பம் இருந்திருக்கவேண்டும். தீர்த்தங்கரர் உருவம் இருந்த பகுதி முழுவதும் உடைத்து சிதைக்கப்பட்டுள்ளது.

 

s

 

தீர்த்தங்கரரின் இரு பக்கமும் சாமரம் வீசும் இரு இயக்கர்களின்  சிற்பங்கள் இருக்கும். இதில் பிரபாவளியின் வலப்பக்கத்தில் இயக்கனின் தலை மட்டும் உள்ளது. இடதுபக்கம் இருந்த இயக்கன் சிற்பமும் தீர்த்தங்கரரின் கீழ்ப்பகுதியும் உடைத்து தனியாக்கப்பட்டுள்ளது. பிரபாவளியின் மேல்பகுதியில் சந்திராதித்தம், நித்தியவிநோதம். சகல பாசனம் ஆகியவற்றைக் குறிக்கும் முக்குடை என்ற அமைப்பு உள்ளது. முக்குடை என்பது சமண சமயச் சின்னம் ஆகும். இச்சிற்பத்தின் அமைப்பைக் கொண்டு இது சமண சமயத்தின் 24வது தீர்த்தங்கரரான மகாவீரரின் சிற்பமாக இருக்கும் என ஊகிக்கலாம். மேலும் இதன் காலம் கி.பி.10ஆம் நூற்றாண்டாக கருதலாம்.

 

இக்கோயில் வளாகத்தில் மணற்பாறையில் செதுக்கப்பட்ட பூரணி, பொற்கலையுடன் காட்சி தரும் சிறிய அளவிலான ஐயனார் சிற்பம் ஒன்று மிகவும் தேய்ந்த நிலையில் உள்ளது. இது சுமார் 500 ஆண்டுகள் பழமையானதாக இருக்கலாம்.   சைவ, வைணவ சமயங்களின் மறுமலர்ச்சிக் காலத்தில், சமண மதம் வலுவிழந்து, அதைப் பின்பற்றுவோர் இல்லாத நிலையில் பிற மதத்தினரால் தீர்த்தங்கரரின் சிற்பம் உடைக்கப்பட்டிருக்கலாம்.

 

திருப்புல்லாணி அருகே கோரைக்குட்டம், பொக்கனாரேந்தல் ஆகிய பகுதிகளிலும் இது போன்ற சமணத் தீர்த்தங்கரர்களின் உடைந்த சிற்பங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவை இரண்டும் தலை இல்லாதவை. இதில்  பொக்கனாரேந்தலில் உள்ள சிற்பம் மலைமேல் சாத்துடையார் என்ற  ஐயனார் கோயில் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது ஆகும். இவ்வாறு அவர் கூறினார்.

சார்ந்த செய்திகள்

Next Story

ஆயுதக் கிடங்காக இருந்த அரண்மனையைப் பாதுகாக்க தொன்மைப் பாதுகாப்பு மன்றம் கோரிக்கை!

Published on 19/03/2024 | Edited on 19/03/2024
Antiquities Protection Forum request to protect the palace which was a weapons warehouse

ராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணியில், சேதுபதி மன்னர் வரலாற்றில் முக்கிய இடம் பிடித்த அரண்மனையை பாதுகாக்கவேண்டும் என திருப்புல்லாணி சுரேஷ் சுதா அழகன் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளி, தொன்மைப் பாதுகாப்பு மன்றம் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. 2010 முதல் செயல்பட்டு வரும் இம்மன்றத்தின் தலைவராக, தலைமை ஆசிரியர் ரெ.புரூணா ரெத்னகுமாரி உள்ளார். இம்மன்ற மாணவர்கள் 55 பேர் மன்றச் செயலர் வே.ராஜகுரு, பட்டதாரி ஆசிரியர் கௌரி ஆகியோர் தலைமையில் அரண்மனையை பார்வையிட்டனர். 

அப்போது அரண்மனை பற்றி வே.ராஜகுரு கூறியதாவது, “டச்சுக்காரர்கள், கி.பி.1759-ல், கீழக்கரையில் ஒரு நெசவுத் தொழிற்சாலையை அமைத்துக்கொள்ள செல்லமுத்து சேதுபதியிடம் அனுமதி பெற்று, நாளடைவில் அதை ஒரு கோட்டையாக மாற்ற முயற்சி செய்த போது போர்ப்பதற்றம் ஏற்பட்டது. பாதுகாப்புக்காக திருப்புல்லாணியில் ஒரு கோட்டை கட்ட முடிவு செய்த நேரத்தில், செல்லமுத்து சேதுபதி இறந்துவிட்டார். இரண்டு வயதில் முத்துராமலிங்க சேதுபதி மன்னரான போது, அவருடைய தளவாய் தாமோதரம் பிள்ளை இந்த அரண்மனையைக் கட்டியுள்ளார். கி.பி.1767-ல் கொண்ட உடன்பாட்டுக்குப்பின் சேதுபதிகள் டச்சுக்காரர்களுடன் இணக்கமாயினர்

ஆங்கிலேயர்கள் கி.பி.1772-ல் சேதுநாட்டை கைப்பற்றியபிறகு, அவர்களின் ஆதிக்கத்தை அகற்ற, வெளியுலகுக்குத் தெரியாத மறைவான காட்டுப் பகுதியில் இருந்த இந்த அரண்மனையை ஆயுதத் தொழிற்சாலையாகவும், ஆயுதக் கிடங்காகவும் முத்துராமலிங்க சேதுபதி பயன்படுத்தியுள்ளார்.

தெற்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் இதற்கு இரு வாசல்கள் உள்ளன. இதன் உள்ளே சதுர வடிவக் கட்டடங்கள் நான்கு உள்ளன. ஒவ்வொரு கட்டடத்தின் மூலையிலும் கதவு உள்ள நான்கு அறைகளும், நீண்ட நான்கு தாழ்வாரங்களும் என மொத்தம் 16 அறைகளும் 16 தாழ்வாரங்களும் உள்ளன. ஒவ்வொரு கட்டடத்தின் நடுவிலும் ஒரு குளம் உள்ளது. இதிலிருந்து கதவு ஜன்னல்களை பிரித்தெடுத்துவிட்டதனால் ஆங்காங்கு மேற்கூரை மற்றும் சில பகுதி சுவர்கள் இடிந்த நிலையில் உள்ளன. கட்டடங்களில்  மரங்கள் வளர்ந்துள்ளன.

இதன் மேலே செல்வதற்கு படிக்கட்டுகள் இருப்பதும், மேலே வீரர்கள் நின்று காவல் காக்கும் இடம் இருப்பதும், உள்ளே குளங்கள் உள்ளதும் இது ஆயுதத்  தொழிற்சாலையாக இருந்துள்ளதை உறுதிப்படுத்துகின்றன. இதேபோன்ற ஒரு ஆயுத தொழிற்சாலை அரண்மனை ரெகுநாதபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் இருந்து அழிந்துள்ளது. அதன் அடிப்பகுதியையும், ஒரு பகுதி சுற்றுச்சுவரையும் இப்போதும் அங்கு காணலாம். இவ்வாறு அவர் கூறினார். தங்கள் ஊர் வரலாற்று பெருமை சொல்லும் இந்த அரண்மனையை நினைவுச் சின்னமாக அறிவித்து அரசு பாதுகாக்க வேண்டும் என தொன்மைப் பாதுகாப்பு மன்றத்தினர் கேட்டுக் கொண்டனர்.

Next Story

ரூ. 112 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்; ராமநாதபுரத்தில் பரபரப்பு

Published on 11/03/2024 | Edited on 11/03/2024
Rs. 112 Crore cannabis seized  to Sri Lanka

தமிழக கிழக்கு கடற்கரை கிராமப் பகுதிகளைக் குறிவைத்து அந்தப் பகுதிகள் மூலம் இலங்கைக்கு கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் கடத்தல் நடப்பதும் அதேபோல இலங்கையில் இருந்து கடல் மார்க்கமாக தங்கம் உள்ளிட்ட பொருட்கள் கடத்தப்பட்டு வருவதும் வழக்கமாகிவிட்டது.

இந்த நிலையில் தான், புதுக்கோட்டை மாவட்ட எல்லைப் பகுதிகள் வழியாக இலங்கைக்கு கஞ்சா கடத்த இருப்பதாகக் கிடைத்த தகவலின் பேரில், திருச்சி மற்றும் ராமநாதபுர சுங்கத்துறை நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் (CIU) சோதனையில் ஈடுபட்டபோது மீமிசல் வெளிவயல் உப்பளம் அருகே நேற்று இரவு ராமநாதபுரம் மாவட்டம் எஸ்.பி.பட்டினத்தைச் சேர்ந்த அமீர் சுல்தான் என்பவரது இறால் பண்ணையில் இருந்து ரூ. 110 கோடி மதிப்புள்ள 100 கிலோ கஞ்சா ஆயில் (அசிஸ்), மற்றும் ரூ.2 கோடி மதிப்புள்ள 874 கிலோ கஞ்சா மூட்டைகள் உட்பட மொத்தமாக ரூ.112 கோடி மதிப்பிலான போதைப் பொருள் வைத்திருந்ததைக் கண்டுபிடித்து பறிமுதல் செய்து ராமநாதபுரம் சுங்கத்துறை அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர்.

மேலும் இந்த கடத்தல் தொடர்பாக எஸ்.பி.பட்டினத்தைச் சேர்ந்த இருவரையும் மீமிசல் அரசனகரிபட்டினம் பகுதியைச் சேர்ந்த இறால் பண்ணை காவலாளி முஜிபுர் ரஹ்மான் உட்பட மூன்று பேரையும் பிடித்து வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். தொடர் விசாரணையில், இந்த போதைப் பொருட்கள் எங்கிருந்து வாங்கப்பட்டது? யாருக்கு விற்பனை செய்யப்படுகிறது? இலங்கைக்கு எந்த வழியாக யார் கொண்டு செல்ல இருந்தது என்பதும் மேலும் வேறு கஞ்சா பதுக்கல் குடோன்கள் எங்கெல்லாம் உள்ளது என்றும் விசாரணையில் தெரிய வரும் என்கின்றனர்.

மேலும், தலைமறைவாக உள்ள போதைப் பொருட்களின் உரிமையாளரைத் தேடி வருவதாக திருச்சி மத்திய நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சுமார் 112 கோடி மதிப்பிலான போதைப் பொருட்களை மத்திய சுங்கத்துறை போலீசார் அதிரடியாக பறிமுதல் செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.