தமிழக நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம், கடந்த 2012- ஆம் ஆண்டு மார்ச் 29- ஆம் தேதி அன்று கல்லணை சாலையில் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு உயிரிழந்த நிலையில் கிடந்தார்.
இந்த கொலை வழக்கில் குற்றவாளிகள் யாரும் கண்டுபிடிக்காத நிலையில், இந்த வழக்கு சென்னை குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுத் துறை காவல்துறை இயக்குநர் ஷாகில் அக்தர் மேற்பார்வையில் காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார், காவல் துணைக் கண்காணிப்பாளர் மதன், சி.பி.ஐ. டி.எஸ்.பி. ஹரி மற்றும் பல்வேறு பிரிவு போலீஸார் அடங்கிய சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டு விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.
முதல்கட்டமாக, ராமஜெயம் கொலை செய்யப்பட்ட இடம் மற்றும் அவர் வீட்டிலிருந்து நடைப்பயணமாக வந்த இடம், அவரை விடியற்காலையில் நடைப்பயிற்சியின் போது பார்த்த நபர்களிடம் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்தியது. இந்த வழக்கு தொடர்பாக நேரிலோ அல்லது செல்போனில் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளனர்.
அதற்கான தொலைபேசி எண்களையும் அறிவித்துள்ளது. அதன்படி, 90806- 16241, 94981- 20467, 70940- 12599 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மொத்தம் 45 பேர் கொண்ட குழுவில் எஸ்.பி. மேற்பார்வையில் 3 டி.எஸ்.பி.க்கள் மற்றும் 5 இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.