Ramajayam  case; 12 people consent to fact-finding test

Advertisment

தமிழ்நாடு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம் கொலைவழக்கு தொடர்பாக விசாரணை செய்து வந்த சிறப்பு புலனாய்வு குழுவினர் தமிழகத்தில் பிரபல ரவுடிகள் 13 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை செய்ய முடிவெடுத்தனர். அது தொடர்பாக அவர்கள் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

மோகன் ராம், சாமி ரவி, தினேஷ், நரைமுடி கணேசன், சத்யராஜ், கலைவாணன், மாரிமுத்து, தீலீப் என்கிற லட்சுமி நாராயணன், ராஜ்குமார், சுரேந்தர், சண்முகம் , சிவா (எ) குணசேகரன் ஆகியோருடன் கடலூர் சிறையிலிருந்த செந்தில் ஆகிய 13 பேரும் கடந்த 1 ஆம் தேதி திருச்சி குற்றவியல் நீதிமன்றம் எண் 6ல் நீதிபதி சிவக்குமார் முன்னிலையில் ஆஜராகினர்.

சிறப்பு புலனாய்வு குழுவின் எஸ்.பி. தான் இது தொடர்பான மனுவை தாக்கல் செய்ய முடியும் என எதிர்த்தரப்பு வழக்கறிஞர்கள் கோரிக்கை வைத்த நிலையில், அந்த வழக்கை நவம்பர் 7 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து சிறப்பு புலனாய்வு குழு எஸ்.பி மனு தாக்கல் செய்தார். வழக்கின் விசாரணை 7 ஆம் தேதி அன்று விசாரிக்கப்பட்டது. அதில் ஆஜரான 13 பேரின் வழக்கறிஞர்கள் சிறப்பு புலனாய்வு குழுவினர் உண்மை கண்டறியும் சோதனை தொடர்பாக எந்த ஒரு முறையான அறிக்கையையும் பிரமாணப் பத்திரத்தில் தாக்கல் செய்யவில்லை. எனவே இது முறையாக பின்பற்றப்பட வாய்ப்பில்லை. என்னென்ன நடைமுறைகள் பின்பற்றப்படுகிறது என்பது தொடர்பாக அவர்கள் விளக்கம் அளிக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்தனர்.

Advertisment

அதனையடுத்து வழக்கை 14 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து நீதிபதி சிவக்குமார் உத்தரவிட்டார். அதனையடுத்து வழக்கு நான்கு தினங்கள் முன்பு விசாரணைக்கு வந்தது. அதில் சத்யராஜ், லெட்சுமி நாரயணன், சாமி ரவி, ராஜ்குமார், சிவா (எ) குணசேகரன், சுரேந்தர், கலைவாணன், மாரிமுத்து ஆகியோர் திருச்சி குற்றவியல் நீதிமன்றம் எண் 6ல், நீதிபதி சிவக்குமார் முன்பு ஆஜராகி உண்மை கண்டறியும் சோதனைக்கு ஒப்புக்கொண்டனர். தென்கோவன் (எ) சண்முகம் சோதனைக்கு சம்மதம் தெரிவிக்கவில்லை.

மேலும், இந்த வழக்கில் மோகன் ராம், நரைமுடி கணேசன், தினேஷ், செந்தில் ஆகியோர் நேரில் ஆஜராகாத நிலையில் அவர்களை வரும் 17 ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.

இதனைத்தொடர்ந்து நால்வரும் நீதிபதி முன்பு இன்று ஆஜராகினர். உண்மை கண்டறியும் சோதனைக்கு நான்கு பேரும் ஒப்புதல் தெரிவித்தனர். மேலும் மருத்துவர் மற்றும் வழக்கறிஞர் உடன் இருக்க வேண்டும் என நிபந்தனை விதித்தனர். இதன் பின் அவர்களின் வழக்கறிஞர்கள் சம்மத மனுக்களைத்தாக்கல் செய்தனர்.

Advertisment

இதனைத்தொடர்ந்து வழக்கு விசாரணையை21 ஆம் தேதிக்கு நீதிபதி சிவக்குமார் ஒத்திவைத்தார். 21 ஆம் தேதி 12 பேரும் மருத்துவப் பரிசோதனை செய்துகொண்டு அதற்கான சான்றுகளுடன் ஆஜராக வேண்டும் என்றும் அன்றே உண்மை கண்டறியும் சோதனைக்கு உத்தரவு வழங்கப்படும் என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.