
அன்புமணியின் மீது அடுக்கடுக்கான அதிருப்தியை பாமக நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர் சந்திப்புகள் மூலம் வெளிப்படுத்தி வரும் நிலையில் இந்த அதிகாரம் மோதல் மேலும் வலுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் மாவட்ட அளவில் பொதுக்குழுவைக் கூட்டி மாவட்ட தலைவர், மாவட்டச் செயலாளர் உள்ளிட்டவர்களை நியமனம் செய்ய அன்புமணி நிர்வாகிகளுக்கு வலியுறுத்தி உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
நேற்று (13/06/2025) அன்புமணி ராமதாஸ் தலைமையில் பனையூரில் உள்ள அலுவலகத்தில் பாமக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் 100-க்கும் மேற்பட்ட மாவட்டச் செயலாளர்கள் கலந்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இந்த கூட்டத்தில் மாவட்டந்தோறும் பொதுக்குழுக் கூட்டத்தை நடத்த வேண்டும் அந்த பொதுக்குழு மூலமாக மாவட்ட நிர்வாகிகளை தேர்வு செய்து அதற்கான தீர்மானத்தை நிறைவேற்றி தலைமைக்கு அனுப்பி வைக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
பாமகவின் பைலா படி பொதுக்குழு உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு தான் வலிமை. பாமக நிறுவனர் ராமதாஸ் அவராகவே பாமக பொருளாளர், மாவட்டச் செயலாளர் உள்ளிட்டவர்களின் பதவிகளை நீக்கிவிட்டு புதியவர்களை சேர்க்கிறார். ஆனால் மாவட்ட பொதுக்குழு உறுப்பினர்களுக்குதான் நிர்வாகிகளை நீக்கவும் நியமிக்கவும் அதிகாரம் உண்டு. 2026 தேர்தலில் அன்புமணி ராமதாஸ் தலைமையில் தேர்தல் களத்தில் பணியாற்றுவோம் என தீர்மானம் நிறைவேற்றி தலைமைக்கு அனுப்பி வைக்கவும் அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் கட்சி விதிகளின்படி பாமகவை கைப்பற்றும் முனைப்பில் அன்புமணி ராமதாஸ் இறங்கியுள்ளதாக கூறப்படுகிறது.