Skip to main content

இந்திய இறையாண்மை மீதான தாக்குதல்! இலங்கை அரசுக்கு ராமதாஸ் கண்டனம்

Published on 17/10/2018 | Edited on 17/10/2018
Boat



தமிழக மீனவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்ட விவகாரத்தில் இலங்கை அரசை இந்தியா கடுமையாக எச்சரித்து அந்நாட்டு சிறைகளில் வாடும் தமிழக மீனவர்கள் அனைவரையும் விடுவிக்க வலியுறுத்த வேண்டும் என்று கூறியுள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், மீனவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது இந்திய இறையாண்மை மீதான தாக்குதல் என்றும் கண்டனம் தெரிவித்துள்ளார். 
 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 
 

வங்கக் கடலில் மீன்பிடிக்கச் சென்ற இராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் மீது சிங்களப் படையினர் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தி விரட்டியடித்துள்ளனர். அதுமட்டுமின்றி, எல்லை தாண்டி மீன் பிடிக்க வந்ததாகக் கைது செய்யப்பட்ட தூத்துக்குடி மாவட்ட மீனவர்கள் 8 பேருக்கு இலங்கை நீதிமன்றம் தலா 3 மாதங்கள் சிறை தண்டனையும், ரூ.60 லட்சம் அபராதமும் விதித்துள்ளது. இது கண்டிக்கத்தக்கது.
 

இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையிலான கடல் பரப்பு மிகவும் குறைவானது என்பதால் இரு நாட்டு மீனவர்களும் பரஸ்பரம் எல்லை தாண்டி மீன் பிடிப்பது தவிர்க்க முடியாதது; அதுமட்டுமின்றி கச்சத்தீவையொட்டிய கடல் எல்லையில் மீன்பிடிப்பது தமிழக மீனவர்களின் பாரம்பரிய உரிமையும் ஆகும். ஆனால், இவை எதையுமே மதிக்காத இலங்கை அரசு கச்சத்தீவு பகுதியில் மீன் பிடிக்கும் தமிழக மீனவர்களை சிங்களப் படை மூலம் கைது செய்து சிறைகளில் அடைப்பது, படகுகளை பறிமுதல் செய்வது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டு வருகிறது. இது இருதரப்பு ஒப்பந்தத்திற்கு எதிரானதாகும்.
 

தமிழக மீனவர்களுக்கு எதிராக இத்தகைய கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள அடித்தளம் அமைத்தது இராஜபக்சே அரசு ஆகும். 2012 ஆம் ஆண்டு ஜூன் மாதம் பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்ற ‘‘நீடித்த வளர்ச்சிக்கான இயற்கை வளங்களை எப்படி பாதுகாப்பது?’’ என்ற தலைப்பிலான மாநாட்டில் பேசிய அப்போதைய இலங்கை அதிபர் ராஜபக்ச, ‘‘தமிழக மீனவர்கள் இலங்கை கடல் எல்லையில் புகுந்து மீன் வளங்களையும், கடல் செல்வங்களையும் கொள்ளையடிக்கிறார்கள். அவர்களை பன்னாட்டு கடல் சட்டப்படி கைது செய்து 20 ஆண்டுகள் சிறையில் அடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று எச்சரித்தார். அதன்பிறகு தான் மீனவர்களை கைது செய்து 3 மாதங்கள் சிறையில் அடைப்பது, படகுகளை பறிமுதல் செய்வது போன்ற செயல்களில் இலங்கை ஈடுபட்டு வருகிறது. இதனால் தமிழக மீனவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.
 

வங்கக் கடலுக்கு ஒவ்வொரு முறை மீன்பிடிக்கச் செல்லும் போதும் தமிழக மீனவர்கள் சிங்களப் படையினரால் கைது செய்யப்படுவது வாடிக்கையாகி விட்டது.  தமிழக மீனவர்கள் 3 மாதங்களுக்கு  சிறையில் அடைக்கப்பட்டால் அந்தக் காலத்தில் மீனவர்களின் குடும்பங்கள் வாழ்வாதாரத்தை இழந்து வறுமையில் வாடும். இத்தகைய சூழலில் அவர்களால் ரூ.60 லட்சம் அபராதம் செலுத்துவது எவ்வாறு சாத்தியமாகும்? அவ்வாறு அபராதம் செலுத்தாவிட்டால் கைது செய்யப்பட்ட மீனவர்கள் அனைவரும்  வாழ்நாள் முழுவதும் இலங்கை சிறைகளில் வாட வேண்டும். இது கொடுமையான மனித உரிமை மீறல்.
 

மீனவர்கள் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக டெல்லியில் கடந்த 22.01.2013 அன்று அப்போதைய இந்திய வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித், இலங்கை வெளியுறவு அமைச்சர் பெரிஸ் ஆகியோர் முன்னிலையில் நடந்த இந்திய&இலங்கை கூட்டு ஆணையத்தின் கூட்டத்தில்,‘‘எல்லை தாண்டி வந்து மீன்பிடிக்கும் மீனவர்கள் மீது எத்தகைய சூழலிலும் பலப்பிரயோகம் செய்யக்கூடாது. மீனவர்களை மனிதாபிமானத்துடன் நடத்தப்படும் போக்கு தொடர வேண்டும்’’ என ஒருமனதாகத் தீர்மானிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து 18.01.2015 அன்று இலங்கை வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீரா டெல்லியில் வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜை சந்தித்து பேசிய போது, இரு நாட்டு மீனவர்களும் எல்லை தாண்டி மீன்பிடிக்கும் விஷயத்தில் மனிதநேய அணுகுமுறை தொடர வேண்டும் என முடிவு செய்யப்பட்டது.  3 மாத சிறைத் தண்டனையும், ரூ.60 லட்சம் அபராதம் விதிப்பதுமா மனிதநேய அணுகுமுறை?
 

இரு தரப்புப் பேச்சுக்களில் எடுக்கப்பட்ட எந்த முடிவையும் மதிக்காமல் தமிழக மீனவர்கள் மீது சிங்கள அரசு அடக்குமுறையை கட்டவிழ்த்து விடுவது ஏற்கத்தக்கதல்ல. இது மீனவர்கள் மீதான அடக்குமுறை மட்டுமல்ல.... இந்திய இறையாண்மை மீது நடத்தப்பட்ட தாக்குதல் ஆகும். கடந்த 30 ஆண்டுகளில் மட்டும் சிங்களப் படையினரால் 800-க்கும் கூடுதலான தமிழக மீனவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். தமிழக மீனவர்களின் 200&க்கும் மேற்பட்ட படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இப்போது தமிழக மீனவர்களுக்கு தலா ரூ.60 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்திய இறையாண்மைக்கு சவால் விடுக்கும் வகையிலான இத்தகைய செயல்களை இந்தியா இன்னும் வேடிக்கைப் பார்க்கப் போகிறதா?
 

தமிழக மீனவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்ட விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் அமைதி காப்பது முறையல்ல. இலங்கை அரசை இந்தியா கடுமையாக எச்சரித்து அந்நாட்டு சிறைகளில் வாடும் தமிழக மீனவர்கள் அனைவரையும் விடுவிக்க வலியுறுத்த வேண்டும்; தமிழக மீனவர்களின் படகுகளை மீட்டுத் தர வேண்டும். இவற்றுக்கெல்லாம் மேலாக மீனவர் சிக்கலுக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார். 

 

 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்!

Published on 09/04/2024 | Edited on 09/04/2024
Tamil Nadu fishermen incident for Sri Lanka Navy 

தமிழகம் மற்றும் புதுவைச் சேர்ந்த மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுவது தொடர்ந்து நிகழ்ந்து வருகின்றது. அதோடு படகுகளைப் பறிமுதல் செய்து அரசுடைமையாக்குவது போன்ற நடவடிக்கைகளையும் இலங்கை அரசு மேற்கொண்டு வருகிறது. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் வெகுவாக பாதிக்கப்படும் சூழலும் நிலவி வருகிறது. இத்தகைய சூழலில் நேற்று காலை (08.04.2024) ராமேஸ்வரத்திலிருந்து 250 மேற்பட்ட விசைப்படகில் மீனவர்கள் மீன்பிடிக்கக் கடலுக்குச் சென்றனர்.

அதன்படி ராமேஸ்வரம் மீனவர்கள் கச்சத்தீவு அருகே மீன்பிடித்து விட்டு இன்று (09.04.2024) அதிகாலை 3 மணியளவில் மீனவர்கள் கரைக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர். இந்நிலையில் அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் ராமேஸ்வரம் மீனவர்கள் மீது ராட்சத மின் விளக்கு ஒளியை வீசியுள்ளனர். மேலும் ஒலிபெருக்கி மூலம்,‘இங்கிருந்து வெளியேறுங்கள். இல்லையென்றால் உங்களைக் கைது செய்வோம்’ என எச்சரிக்கை செய்துள்ளனர். அதன் பின்னர் மீனவர்களின் பல லட்சம் மதிப்புள்ள படகுகள், மின் பிடி வலைகள் மற்றும் ஜி.பி.எஸ். கருவிகளையும் சேதப்படுத்தியுள்ளனர்.

அதே சமயம் இரும்பு கம்பியைக் கொண்டு மீனவர்கள் மீது தாக்குதல் இலங்கை கடற்படையினர் நடத்தியதாகவும், மீனவர்களின் வலைகளை அறுத்து வீசி சேதப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. இந்த தாக்குதல் சம்பவத்தில் ஒரு மீனவருக்குத் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. மற்றொரு மீனவருக்குத் தோள் மற்றும் இடுப்புப் பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் காயம் அடைந்த 2 மீனவர்களும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இலங்கை கடற்படையினர் ராமேஸ்வரம் மீனவர்களை மீன்பிடிக்க விடாமல் தாக்குதல் நடத்திய சம்பவம் மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

“கச்சத்தீவை இந்தியாவுக்கு திரும்ப வழங்குவது சாத்தியமற்றது” - இலங்கை அமைச்சர் திட்டவட்டம்

Published on 05/04/2024 | Edited on 05/04/2024
Sri Lankan Minister says Sri Lanka's marine resources are being destroyed by Indian fishermen

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது . இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. தமிழகத்தைப் பொறுத்தவரை தி.மு.க, அ.தி.மு.க, நாம் தமிழர், பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள், தங்களது வேட்பாளர்களை அறிவித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. 

அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தொடங்கியுள்ளன. இத்தகைய சூழலில் கச்சத்தீவு விவகாரத்தை பா.ஜ.க. தற்போது கையிலெடுத்து காங்கிரசையும், தி.மு.க.வையும் கடுமையாக விமர்சித்து வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் காங்கிரஸ் மற்றும் திமுக, ‘10 ஆண்டுகால ஆட்சியில் கச்சத்தீவை மீட்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது?’ என பா.ஜ.க தலைமையிலான மத்திய அரசிடம் கேள்வி எழுப்பி வருகிறது. 

இந்த நிலையில், கச்சத்தீவை திரும்ப வழங்க முடியாது என்று இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இது குறித்து இலங்கை அமைச்சர் டக்ளஸ் கூறுகையில், “இந்திய மீனவர்கள் படகுகளைப் பயன்படுத்தி இலங்கை கடற்பரப்புக்குள் சட்டவிரோதமாக மீன்பிடிக்க வருகின்றனர். இந்திய மீனவர்களால் இலங்கையின் கடல் வளம் அழிக்கப்படுகிறது. 

இந்தியாவில் தேர்தல் காலங்களில் கச்சத்தீவு பற்றிய கோரிக்கைகள் மற்றும் எதிர் உரிமைகோரல்களின் சத்தம் கேட்பது அசாதாரணமானது அல்ல. இலங்கை மீனவர்கள் அந்தப் பகுதிக்குள் நுழைய முடியாது என்பதையும், அந்த வளமான பகுதியில் இலங்கை எந்த உரிமையையும் கோரக்கூடாது என்பதையும் உறுதிப்படுத்துவதற்காக இந்தியா செயல்படுகிறது என்று நான் நினைக்கிறேன். இந்தியா - இலங்கை ஒப்பந்தத்தின் மூலம் கிடைக்கப்பெற்ற கச்சத்தீவை இந்தியாவுக்கு திரும்ப வழங்குவது என்பது சாத்தியமற்றது. எனவே, கச்சத்தீவை திரும்ப வழங்க முடியாது. கச்சத்தீவை திரும்ப வழங்குவதாக இருந்தால் இலங்கையின் கடல்வளம் முற்றிலுமாக சூறையாடப்படும்” என்று கூறினார்.