Ramadoss-Anbumani meet after Conflict

பா.ம.க.வின் நிறுவனர் ராமதாஸுக்கும், அவரின் மகன் அன்புமணிக்கும் இடையே கட்சிக்குத் தலைமை தாங்குவது, வழிநடத்துவது தொடர்பாகக் கடுமையான பனிப்போர் நிலவி வருகிறது. இதற்கிடையே விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தை அடுத்துள்ள தைலாபுரம் தோட்டத்தில் ராமதாஸ் கடந்த 29ஆம் தேதி செய்தியாளர்களைச் சந்தித்து, அன்புமணி மீது கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்தார். இது தமிழக அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியது.

அதனைத் தொடர்ந்து 01/06/2025 அன்று தைலாபுரம் தோட்டத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த பாமக நிறுவனர் ராமதாஸ், ''என்னை யாரும் இயக்க முடியாது. சுதந்திரம் கிடைத்துள்ளது என்று அன்புமணி சொல்வது அவருடைய கருத்து. அன்புமணி விகாரம் குறித்து பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம். இது எல்லா கட்சிகளிலும் நடக்கும் ஒன்றுதான்'' என தெரிவித்திருந்தார். இத்தகைய பரபரப்பான அரசியல் சூழலில் பாமக நிர்வாகிகள் குறிப்பாக பாமககவுரவத் தலைவர் ஜி.கே.மணி ஆகியோர் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்டனர். அதேநேரம் அன்புமணி ஆதரவு மாவட்ட செயலாளர்கள் ராமதாஸ் நீக்கி வந்தார்.

இந்நிலையில் தைலாபுரம் தோட்டத்தில் அன்புமணி, ராமதாஸுடன் சந்திப்பு மேற்கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த மாதம் நடைபெற்ற முழு சித்திரை நிலவு மாநாட்டிற்குப் பிறகு ஏற்பட்ட இந்த முரணுக்கு பிறகு ராமதாஸும், அன்புமணியும் இன்று சந்திக்க உள்ளனர். இந்த சந்திப்பில் சமரசம் ஏற்பட்டு பாமகவில் நிலவி வந்த அதிகார மோதல் முடிவுக்கு வருமா என்றஎதிர்பார்ப்பில் உள்ளனர் பாமகவினர்.