Skip to main content

ரூ.25000 கோடி முதலீட்டை இழந்த தமிழகம்: ஊழல் பினாமி ஆட்சி அகற்றப்பட வேண்டும்: ராமதாஸ்

Published on 04/04/2018 | Edited on 04/04/2018
eps ops


ரூ.25000 கோடி முதலீட்டை தமிழகம் இழந்திருக்கிறது. ஊழலில் திளைக்கும் பினாமி அரசு உடனடியாக அகற்றப்பட்டால் மட்டுமே தமிழகம் தொழில்துறையில் முன்னேறும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 
 

தமிழ்நாட்டிற்கு கடந்த ஓராண்டில் வந்திருக்க வேண்டிய ரூ.25,000 கோடி மதிப்புள்ள வாகன உற்பத்தித் துறை சார்ந்த முதலீடுகள் ஆந்திரத்துக்கு சென்றுள்ளன. இந்த முதலீட்டாளர்களைக் கவர ஆந்திர அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது என்பது ஒருபுறமிருக்க, தமிழகத்தில் முதலீடு செய்வதற்கு விரும்பிய நிறுவனங்களை தமிழக ஆட்சியாளர்கள் விரட்டியடித்தனர் என்பது தான் இதற்கு காரணமாகும்.
 

உலகின் மிகப்பெரிய இருசக்கர வாகனத் தயாரிப்பு நிறுவனமான ஹீரோ மோட்டாகார்ப் ரூ.1600 கோடி முதலீட்டில் ஆண்டுக்கு 18 லட்சம் ஊர்திகளைத் தயாரிக்கும் ஆலையை தமிழகம் அல்லது கர்நாடகத்தில் அமைக்கத் திட்டமிட்டது. இதுதொடர்பாக தமிழக அரசுடன் நடத்திய பேச்சுக்களில் முன்னேற்றம் ஏற்படாத நிலையில், புதிய ஆலையை ஆந்திராவில் அமைக்க முடிவு செய்த அந்த நிறுவனம், சித்தூர் மாவட்டம் ஸ்ரீ சிட்டிக்கு அருகிலுள்ள மதனபள்ளம் என்ற ஊரில் இடத்தைத் தேர்வு செய்து கடந்த வாரத்தில் அடிக்கல் நாட்டு விழாவையும் நடத்தி முடித்திருக்கிறது. அங்கு அந்த ஆலைக்கு தேவையான உதிரி பாகங்களைத் தயாரித்து வழங்க ரூ.1600 கோடியில் பல்வேறு சிறு தொழிற்சாலைகளும் அமைக்கப்பட உள்ளன. இவற்றின் மூலம் நேரடியாக 15,000 பேருக்கு வேலைவாய்ப்புக் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

 

Chandrababu Naidu


 

உண்மையில் ஹீரோ மோட்டார் வாகனத் தயாரிப்பு ஆலை சென்னைக்கு அருகில் திருப்பெரும்புதூரிலோ அல்லது ஓசூரிலோ அமைக்கப்பட்டிருக்க வேண்டும். மாறாக இந்த ஆலை ஆந்திராவுக்கு சென்றதற்கு முதல் காரணம் தமிழகத்தில் புதிய தொழிற்சாலைகளுக்கு அனுமதி கொடுப்பதில் காட்டப்படும் அலட்சியம் மற்றும் அதற்காக நடத்தப்படும் பேரங்கள் தான். இரண்டாவது காரணம் புதிய தொழிற்சாலைகளை  தமது மாநிலத்திற்கு அழைத்து வருவதில் ஆந்திர அரசு காட்டும் ஆர்வமும், வழங்கும் சலுகைகளும் தான். ஹீரோ நிறுவன ஆலை தமிழகத்திலோ, தமிழகம் ஒத்துவராத நிலையில் கர்நாடகத்துக்கோ செல்லும் வாய்ப்பு இருந்த நிலையில், அந்த நிறுவன உரிமையாளர் பவன் முன்ஜால் வீட்டுக்கு சென்று விருந்து சாப்பிட்ட ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, அப்போது நடத்திய 30 நிமிட பேச்சுக்களில் அந்த ஆலையை தமது மாநிலத்திற்கு கொண்டு சென்று விட்டார். அதனால் தமிழகம் நல்ல முதலீட்டை இழந்தது.
 

ஹீரோ நிறுவனம் மட்டும் தான் என்றில்லாமல் ரூ.11,000 கோடி முதலீட்டிலான கியா மகிழுந்து ஆலை,  ரூ.1800 கோடி முதலீட்டில் அப்பல்லோ டயர்ஸ், ரூ.350 கோடியில் அசோக் லேலண்ட் வாகன ஆலை,  டி.வி.எஸ் நிறுவனத்தின் சுந்தரம் பிரேக்ஸ் நிறுவனம், பாரத் போர்ஜ் நிறுவனம், சில தென் கொரிய நிறுவனங்கள் என மொத்தம் ரூ.25,000 கோடி முதலீடுகள் கடந்த ஓராண்டில் ஆந்திராவில் செய்யப்பட்டு உள்ளன. இவை அனைத்துமே தமிழகத்திற்கு வந்திருக்க வேண்டியவை. இவற்றில் பெரும்பாலான நிறுவனங்களின் தொழிற்சாலைகள் ஏற்கனவே தமிழகத்தில் அமைந்துள்ளன. அதனால் அவற்றின் விரிவாக்கமோ, கூடுதல் தொழிற்சாலையோ தமிழகத்தில் தான் அமைந்திருக்க வேண்டும். ஆனால்,  ஆட்சியாளர்கள் கேட்கும் கையூட்டை கொடுக்க முடியாமல் பல நிறுவனங்கள் தமிழகத்தை விட்டு ஓடுகின்றன.
 

தமிழ்நாட்டில் ஒரு நிறுவனம் ரூ.1000 கோடி முதலீடு செய்ய முன்வந்தால் தங்களுக்கு ரூ.400 கோடி கையூட்டு வழங்க வேண்டும் என்றும், அதற்கு இணையான அளவுக்கு சலுகைகள் வழங்குவதாகவும் தமிழக ஆட்சியாளர்கள் பேரம் பேசுகின்றனர். நேர்மையான பன்னாட்டு நிறுவனங்கள் இதற்கு தயாராக இல்லை என்பதால் தமிழகத்திலிருந்து வேறு மாநிலங்களுக்கு செல்கின்றன. மாறாக, ஆந்திர மாநிலத்தில் முதலீடு செய்ய ஒரு நிறுவனம் விருப்பம் தெரிவித்தால் அந்த நிறுவனத்தின் நிர்வாகிகளை முதலமைச்சர் சந்தித்து பேசுகிறார். முதல் சந்திப்பிலேயே ஆந்திரத்தில் முதலீடு செய்வதை சம்பந்தப்பட்ட நிறுவனங்கள்  உறுதி செய்கின்றன. சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு மானிய விலையில் நிலம், மானியக் கட்டணத்தில் மின்சாரம், சரக்கு மற்றும் சேவை வரியில் மாநில அரசின் பங்கு ரத்து உள்ளிட்ட சலுகைகளை ஆந்திர அரசு வழங்குகிறது. இது சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் முதலீட்டு மதிப்பில் 25% முதல் 50% வரை  என்பதால் அந்த நிறுவனங்கள் மகிழ்ச்சியாக ஆந்திரத்தில் தொழில் தொடங்க ஒப்புக்கொள்கின்றன.
 

சுருக்கமாக கூற வேண்டுமானால், ஒரு நிறுவனம் தமிழகத்தில் ரூ.1000 கோடியில் தொழில் தொடங்க நினைத்தால் அதற்காக ரூ.1300 கோடி முதல் ரூ.1400 கோடி வரை செலவழிக்க வேண்டும். ஆனால், ஆந்திரத்தில் இதற்காக ரூ.500 கோடி முதல் ரூ.750 கோடி வரை செலவழித்தால் போதுமானது. பெரிய நிறுவனங்கள் தமிழகத்தை விட்டு, ஆந்திரத்தில் தொழில் தொடங்க முக்கியக் காரணம் இது தான்.
 

ஆந்திராவின் ராயலசீமா பகுதியை மோட்டார் வாகன உற்பத்தி மண்டலமாக மாற்ற தீர்மானித்துள்ள சந்திரபாபு நாயுடு, அதற்காக அதிரடியாக முதலீடுகளை ஈர்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். கடந்த ஓராண்டில் மட்டும் மோட்டார் வாகன உற்பத்தித் துறையில் ரூ.25000 கோடி முதலீட்டை ஈர்த்துள்ள ஆந்திரம் அடுத்தக்கட்டமாக சுசுகி நிறுவனத்துடன் பேச்சு நடத்தி வருகிறது. ஆனால், தமிழ்நாட்டில் கடந்த இரு ஆண்டுகளில் மோட்டார் வாகனத்துறையில் ரூ.1500 கோடி முதலீடுகளை மட்டுமே ஈர்த்திருக்கிறது.

 

ramadoss


 

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்தியாவின் ஒட்டுமொத்த வாகன ஏற்றுமதியில் 53.41% தமிழகத்திலிருந்து செய்யப்பட்டு வந்தது. அதனால் ஆசியாவின் டெட்ராய்ட் என்ற பெருமை தமிழகத்திற்கு கிடைத்தது. ஆனால், அந்தப் பெருமையை தமிழகம் வேகமாக இழந்து கொண்டிருக்கிறது. கண்களுக்கு எட்டிய தொலைவு வரை தமிழகத்திற்கு வாகனத்துறை முதலீடுகள் வருவதற்கு வாய்ப்புகள் தென்படவில்லை.
 

தமிழகத்தின் இந்த அவலநிலைக்குக் காரணம் தலைவிரித்தாடும் ஊழல் தான். ஊழலில் திளைக்கும் பினாமி அரசு உடனடியாக அகற்றப்பட்டால் மட்டுமே தமிழகம் தொழில்துறையில் முன்னேறும். ஊழல் அரசு அகற்றப்பட்டு, தொழில் வளர்ச்சியை ஊக்குவிக்கும் அரசு அமையும் காலம் தொலைவில் இல்லை. இவ்வாறு கூறியுள்ளார். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அதிமுக கொடி யாருக்கு; மோதிக்கொண்ட ஓபிஎஸ் - இபிஎஸ் அணியினர்

Published on 20/05/2023 | Edited on 20/05/2023

 

salem admk flag issue between ops eps team 
கோப்பு படம்

 

சேலத்தில் நேற்று 4 இடங்களில் ஓபிஎஸ் அணியினர் சார்பாக நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் ஓபிஎஸ் அணியின் முக்கியத் தலைவர்களான வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் மற்றும் ஜே.சி.டி.பிரபாகர் ஆகியோர் கலந்துகொள்ள இருப்பதாக  அறிவிக்கப்பட்டு இருந்தது. இதற்காக ஓபிஎஸ் அணியின் சேலம் மாவட்டச் செயலாளர் தினேஷ் தலைமையில் அதிமுக கொடிகளை நிர்வாகிகள் கட்டி இருந்தனர்.

 

இந்நிலையில், சேலத்தில் உள்ள திருமண மண்டபத்தின் முன்பும் ஏராளமான கொடிகள் கட்டப்பட்டிருந்தன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இபிஎஸ் அணியின் அதிமுக மாநகர் மாவட்டச் செயலாளர் வெங்கடாசலம், பாலசுப்பிரமணியம் எம்எல்ஏ ஆகியோர் தலைமையில் அப்பகுதியில் திரண்ட நிர்வாகிகள், அங்கிருந்த அதிமுக கொடிகளை கட்டிக் கொண்டிருந்த தினேஷிடம், ‘நாங்கள் தான் உண்மையான அதிமுக என்று தேர்தல் ஆணையமே அங்கீகரித்துள்ளது. கட்சிக்கு எவ்வித  தொடர்பும் இல்லாத நீங்கள் எப்படி அதிமுகவின் கொடியை கட்டலாம்’ என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் இந்த வாக்குவாதம் கைகலப்பாக மாறியது.

 

இதற்கிடையில் அங்கிருந்த சிலர் கொடிகளைப் பிடுங்கி வீசினர். இதனால் இரு தரப்புக்கும் மோதல் உருவாகும் நிலை ஏற்பட்டது. இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் இரு தரப்பையும் சமாதானம் செய்தனர். இதைத் தொடர்ந்து அதிமுக மாவட்டச் செயலாளர் வெங்கடாசலம் போலீசில் புகார் ஒன்றையும் அளித்தார். அதில் கட்சிக்கு சம்பந்தம் இல்லாதவர்கள் எங்கள் கட்சிக் கொடிகளை பயன்படுத்தக் கூடாது என்று தெரிவித்திருந்தார். இதையடுத்து சாலைகளில் இருந்த அதிமுக கொடிகள் அகற்றப்பட்டன.

 

எடப்பாடி பழனிசாமியின் சொந்தத் தொகுதியான எடப்பாடியில் ஓபிஎஸ் அணியின் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதனால் கூட்டம் நடைபெறும் இடத்தில் அதிமுகவின் பேனர்கள், போஸ்டர்கள்  மற்றும் கொடிகள் கட்டி இருப்பதை  கண்ட இபிஎஸ் அணியினர் அங்கு வைக்கப்பட்டு இருந்த பிளக்ஸ் மற்றும் போஸ்டர்களை கிழித்தனர். சாலைகளில் கட்டப்பட்டு இருந்த அதிமுக கொடிகளையும் அகற்றினர். இந்த பரபரப்பான சூழ்நிலையில் நேற்று மாலை ஓபிஸ் அணியினரின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் வைத்தியலிங்கம், புகழேந்தி, மனோஜ் பாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

 

அப்போது இபிஎஸ் அணியை சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் கூட்டம் நடைபெற்ற திருமண மண்டபத்தில் நுழைந்து அதிமுக கொடியை அங்கிருந்து அகற்றினர். பின்னர் இபிஎஸ் அணியை சேர்ந்தவர்கள் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட  29 பேரை கைது செய்து திருமண மண்டபத்தில் அடைத்தனர். கூட்டம் முடிந்த நிலையில் இபிஎஸ் அணியைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்டோர் அதிமுக கட்சிக் கொடியை நீங்கள் எப்படி பயன்படுத்தலாம் என ஓபிஎஸ் அணியினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து ஒருவருக்கு ஒருவர் கைகலப்பில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பாதுகாப்புக்கு இருந்த போலீசார் அவர்களைத் தடுத்து நிறுத்தி சமாதானம் செய்து அங்கிருந்து கலைந்து போகச் செய்தனர். இச்சம்பவம் சேலம் அதிமுகவினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

 

Next Story

புறக்கணித்த இபிஎஸ் - ஓபிஎஸ்; டெல்லிக்கு ஓடிப் போன ஐபிஎஸ் - காயத்ரி ரகுராம் தாக்கு 

Published on 02/02/2023 | Edited on 02/02/2023

 

gayathri raghuram  talk about annamalai erode byelection

 

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் திமுக தனது கூட்டணிக் கட்சியான காங்கிரசுக்கு அத்தொகுதியை ஒதுக்கியுள்ளது. காங்கிரஸ் கட்சியின் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை வேட்பாளராக அறிவித்து திமுக கூட்டணிக் கட்சிகள் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தி வருகிறது.

 

அதே சமயம் அதிமுகவின் ஒற்றைத் தலைமை பிரச்சனை தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் உள்ள நிலையில், அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி தரப்பிலிருந்து தென்னரசுவும், ஓ.பன்னீர்செல்வம் தரப்பிலிருந்து செந்தில் முருகனும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளனர். இதில் அதிமுகவின் கூட்டணிக் கட்சியான பாஜக தனது ஆதரவு நிலைப்பாட்டை இன்னும் தெரிவிக்காத நிலையில், எடப்பாடி பழனிசாமி அணி இடைத்தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதாகத் தெரிவித்துள்ளது. ஆனால் பன்னீர்செல்வம் அந்தத் தொகுதியில் பாஜக போட்டியிட்டால் எங்கள் வேட்பாளரை வாபஸ் வாங்கி விடுவோம் எனத் தெரிவித்திருக்கிறார். 

 

இதனிடையே, சமீபத்தில் பாஜகவிலிருந்து விலகிய காயத்ரி ரகுராம் தனது ட்விட்டர் பக்கத்தில், “ஈரோடு இடைத்தேர்தலில் பாஜக கூட்டணியின்றி இபிஎஸ் அதிமுக போட்டியிடுகிறது. பாஜகவிடம் கேட்காமல் வேட்பாளரை அறிவிக்கிறார் ஓபிஎஸ். சில தமிழ்ப் படங்களைப் பார்த்துவிட்டு பத்திரிகையாளர் சந்திப்பில் வெறும் பஞ்ச் டயலாக்குகள் மட்டுமே கொடுக்கிறார் ஐ.பி.எஸ். அது காமெடி மாறி வருகிறது. 2024 தேர்தலில் கூட்டணி இல்லாமல் பாஜக தனித்து போட்டியிடும் என்பது முதல் பஞ்ச் டயலாக். 25 இடங்களில் வெற்றி பெறுவார் என்பது இரண்டாவது பஞ்ச் டயலாக். ஈரோடு இடைத்தேர்தல் மூலம் கூட்டணி கட்சி என்ன செய்ய முடியும் என்று காட்டிய பிறகு, இப்போது பேனர் பிரச்சனைக்காக டெல்லிக்கு ஓடிப் போன ஐ.பி.எஸ். இப்பவே இடைத்தேர்தலில் தனித்து போட்டியிட ஐபிஎஸ் தனது பலத்தையும் வளர்ச்சியையும் காட்ட கூட்டணிக் கட்சி வாய்ப்பு அளித்துள்ளது. ஆனால் அவரால் வேட்பாளரை அறிவிக்க முடியவில்லை. தமிழ்நாட்டில் பாஜகவுக்கு பெரிய வீழ்ச்சி” எனக் குறிப்பிட்டுள்ளார்.