Skip to main content

ராமதாஸ் சொன்னதை நான் உதாசீனப்படுத்தினேன்; அன்றிலிருந்து என் மீது சேற்றை வாரி தூற்றி வருகிறார் - திருமாவளவன் பரபரப்பு பேச்சு

Published on 27/03/2019 | Edited on 27/03/2019

 

நடைபெற இருக்கின்ற  சிதம்பரம் மக்களவைத் தொகுதிக்கு திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் போட்டியிடுகிறார்.  இதனையொட்டி சிதம்பரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கூட்டணி கட்சிகளை சேர்ந்த செயல்வீரர்கள் கூட்டம் சிதம்பரத்தில் நடைபெற்றது.

 

v

 

கூட்டத்திற்கு திமுகவின் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தலைமை வகித்தார். கூட்டத்தில் தொல். திருமாவளவன் செயல்வீரர்களிடம் வாக்கு கேட்டு பேசுகையில்,   ’’இது செயல்வீரர்கள் சமயோசிதமாக செயல்படும் நேரம்.   தேர்தல் நேரத்தில் எப்படி செயல்பட போகிறோம் என்ற அட்டவணையை வகுத்துக்கொள்ள வேண்டும்.  கட்சிப்பணி வேறு, தேர்தல் பணி வேறு. கூட்டணிக் கட்சியினரை ஒருங்கிணைத்து செயல்பட்டால்  40க்கு 40 தொகுதிகளிலும் திமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெறும்.

 

v

 

என்னை தைலாபுரம் தோட்டத்திற்கு அழைத்து வாழையிலை விரித்து சாப்பாடு பரிமாறிய ராமதாஸ் திமுக ஒரு துரோக கட்சி அது அழிந்து போக கூடியது. ஆகவே திமுகவில் இருந்து வெளியே வரவேண்டும் என்று என்னை வற்புறுத்தினார்.  அதை நான் உதாசீனப்படுத்தினேன் அன்றிலிருந்து என் மீது வீண் பழி சுமத்தி சேற்றை வாரி தூற்றி வருகிறார்.  ஒளிவு மறைவின்றி திறந்த புத்தகமாக வாழ்ந்து வருகிறேன், திமுகவில் சீட்டு மட்டும்தான் கிடைக்கும் நோட்டு கிடைக்காது என்று எண்ணி சாதி அடிப்படையில் வாக்கு சதவீதத்தை காட்டி பேரம் பேசி கூட்டணி அமைத்துள்ளனர்.  அது வர்த்தக ரீதியான வியாபார கூட்டணி திமுக தலைமையிலான கூட்டணி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மக்களுக்கு எதிரான பல்வேறு போராட்டங்களில் கலந்து கொண்டு உருவான கொள்கை ரீதியான கூட்டணி.  அதிலும் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிபந்தனையற்ற கூட்டணி என்று அறிவித்தது.  நம்மிடம் ஒரே குரல் தான் ஒளிக்க வேண்டும் மோடியை விரட்டியடிக்க வேண்டும் ராகுலை பிரதமர் ஆக்க வேண்டும் என்பதுதான். 

 

v

 

 மோடி மறுபடியும் பிரதமராக வந்தால் இனிமே நாட்டில் தேர்தல் நடக்காது,  மாநில கட்சிகளை ஒழிக்க பிஜேபி அனைத்து வேலைகளையும் செய்துள்ளது. மோடியால் சிறு குறு தொழில்கள் அழிந்துவிட்டது. விவசாயம், விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். கார்ப்பரேட்டுகளின் செல்லப்பிள்ளையாக மோடி திகழ்கிறார். அம்பானி, அதானிக்கு ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போட வெளிநாடு சென்று வருகிறார்.  கார்ப்பரேட் பிரதமராகவே உள்ளார்.  இந்து சமூகத்தின் முதல் எதிரி மோடி ஜாதி வாரியாக மக்களை பிரித்து மொத்த வியாபாரியாக செயல்படுகிறார். 

 

 பொள்ளாச்சியில் நடந்த சம்பவத்திற்கு குற்றம்சாட்டபட்டவர்கள் இந்த சாதியை சார்ந்தவர்கள் என்று  நான்  ஒருபோதும் கூறியது இல்லை.  இதனை எதிர்த்து திமுக, இடதுசாரி, விடுதலை சிறுத்தைகள் கட்சி போராடுகிறது. சில யோக்கி சீலர்கள் கண்டுகொள்வதில்லை.  இந்தத் தேர்தலில் மதவாதமா,  ஜனநாயகமா என்று முடிவு செய்ய வேண்டும்.  சாதி வெறி தூண்டல்களில் சிக்க வேண்டாம்.  எக்காலத்திலும் சாதியவாதம் மதவாதம் உள்ள பிஜேபியுடன் விடுதலை சிறுத்தைகள் கட்சி கூட்டணியில் இருக்காது. என்னை சாதியைச் சொல்லி மட்டுமே குற்றம் சுமத்த முடியும் வேறு எந்த குற்றத்தையும் சொல்ல முடியாது. 

 

 கடந்த 2009 தேர்தலை விட தற்போது பிரகாசமாக உள்ளது.  சமூக வலைதளங்களில் பரவும் அவதூறு பிரச்சாரத்திற்கு தொண்டர்கள் பதில் சொல்ல வேண்டாம். தேசத்தின் தீங்கு மோடியை அகற்ற அனைவரும் கொள்கை ரீதியில் செயல்பட வேண்டும்’’ என்றார். 

 

 கூட்டத்தில் திமுக நகர செயலாளர் செந்தில்குமார், ஒன்றிய செயலாளர்கள் மாமல்லன், முத்துபெருமாள். காங்கிரஸ் மாவட்டத் தலைவர் நகர் பெரியசாமி, சிபிஎம் மாவட்ட செயலாளர் ஆறுமுகம், மாவட்ட செயற்குழு ரமேஷ்பாபு, ராமச்சந்திரன்.  சிபிஐ மாநில நிர்வாகி மணிவாசகம், மதிமுக மாவட்ட செயலாளர் குணசேகரன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் அறவாழி, சிதம்பரம் தொகுதி பொறுப்பாளர் வன்னியரசு, டி வி கே கட்சியின் மாவட்ட செயலாளர் முடிவண்ணன், மாநில நிர்வாகி ரமேஷ். மனிதநேய ஜனநாயக கட்சி முகமது இக்பால், மனிதநேய மக்கள் கட்சி முகமது இமான். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ரகுமான் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் செயல்வீரர்கள் கலந்து கொண்டனர். இதே போல் புவனகிரி, காட்டுமன்னார்கோயில் சட்டமன்ற தொகுதிக்குஉட்பட்ட செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.
 

சார்ந்த செய்திகள்

Next Story

ஓடும் பேருந்தில் இருக்கையுடன் தூக்கி வீசப்பட்ட நடத்துநர்; அன்புமனி கண்டனம்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Anbumani condemns conductor being thrown with his seat in   moving govt bus

ஓடும் பேருந்தில், நடத்துநர் இருக்கையுடன் தூக்கி வீசப்பட்டதற்கு பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருச்சி திருவரங்கத்தில் இருந்து கே.கே.நகருக்கு சென்று கொண்டிருந்த அரசு நகரப் பேருந்து, வளைவு ஒன்றில் திரும்பும் போது, நடத்துநர் அமர்ந்திருந்த இருக்கை கழன்று வெளியில் விழுந்துள்ளது. இருக்கையுடன் நடத்துநரும் வெளியில் தூக்கி வீசப் பட்டுள்ளார். நல்வாய்ப்பாக பேருந்துக்கு பின்னால் வேறு வாகனங்கள் வரவில்லை என்பதால், நடத்துனர்  லேசான காயங்களுடன் உயிர்த் தப்பியுள்ளார். காயமடைந்த ஓட்டுநர் விரைவில் நலம் பெற எனது விருப்பங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சென்னை அமைந்தகரை பகுதியில் கடந்த பிப்ரவரி  6-ஆம்  தேதி  மாநகரப் பேருந்தின் தளம் உடைந்து  ஏற்பட்ட ஓட்டை வழியாக பெண் பயணி ஒருவர் சாலையில் விழுந்து காயமடைந்தார்.  அதனால் ஏற்பட்ட அதிர்ச்சி விலகும் முன்பாகவே  திருச்சியில்  பேருந்தின் இருக்கை கழன்று  நடத்துநர்  தூக்கி வீசப்பட்டுள்ளார்.  பேருந்தின் டயர் தனியாக கழன்று ஓடுவது, பேருந்தின் மேற்கூறை  தனியாக கழன்று காற்றில் பறப்பது போன்ற நிகழ்வுகளும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. தினமும் 2 கோடி மக்கள் பயணிக்கும் அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளை  திமுக அரசு எவ்வளவு மோசமாக பராமரிக்கிறது என்பதற்கு இதை விட மோசமான எடுத்துக் காட்டு இருக்க முடியாது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகங்களில் உள்ள 20,926 பேருந்துகளில் 1500 பேருந்துகள் 15 ஆண்டுகளுக்கும் மேலாக இயக்கப்பட்டு வருகின்றன என்பதை  தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கரே  ஒப்புக் கொண்டிருக்கிறார்.  15 ஆண்டுகளைக் கடந்த பேருந்துகளை இயக்குவதே சட்ட விரோதம் ஆகும். இதைத் தவிர 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட  பேருந்துகள்  12 ஆண்டுகளுக்கும் மேலாக இயக்கப்பட்டு வருகின்றன.  திமுக  ஆட்சிக்கு வந்த பிறகு விரல் விட்டு எண்ணக் கூடிய அளவில் தான் புதிய பேருந்துகள் வாங்கப்பட்டுள்ளன.

புதிய பேருந்துகள் வாங்கப்படாததால், காலாவதியான பேருந்துகள் அதிக எண்ணிக்கையில் இயக்கப்படுவதும்,   அவற்றை பராமரிப்பதற்கும், உதிரி பாகங்கள் வாங்குவதற்கும் கூட போதிய நிதி ஒதுக்கப்படாததுதான்  இத்தகைய அவல நிலை  ஏற்படுவதற்கு காரணம் ஆகும்.  இத்தகைய அவல நிலைக்கு திமுக தலைமையிலான திராவிட மாடல் அரசுதான் பொறுப்பேற்க வேண்டும்.

அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கான மகிழுந்துகள் அவர்கள் விரும்பும் நேரத்தில் மாற்றப்படுகிறது. முதலமைச்சரின் வாகன அணிவகுப்பில் வரும் மகிழுந்துகள்  கருப்பு வண்ணத்தில் இருக்க வேண்டும் என்பதற்காக, ஏற்கெனவே வாங்கப்பட்டு சில மாதங்கள் மட்டுமே ஆன மகிழுந்துகள்  ஓரங்கட்டப்பட்டு, கோடிக்கணக்கில் செலவு செய்து 6 புதிய மகிழுந்துகள்  வாங்கப்படுகின்றன. ஆனால், பொதுமக்கள் பணம் கொடுத்து பயணம் செய்யும்  பேருந்துகள் மட்டும்  15 ஆண்டுகளைக் கடந்து இயக்கப்படுகின்றன. இது என்ன கொடுமை?

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் உள்ள 6 ஆண்டுகளைக் கடந்த பேருந்துகள் அனைத்தும் உடனடியாக மாற்றப்பட்டு அவற்றிற்கு மாற்றாக புதிய பேருந்துகள் வாங்கி இயக்கப்பட வேண்டும்.  பழைய பேருந்துகளைப் பராமரிக்கவும்,  உதிரி பாகங்கள் வாங்கவும் அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு அரசு  போதிய நிதி ஒதுக்கீடு  செய்ய வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.

Next Story

“டிஎன்பிஎஸ்சி குரூப் 2 நேர்முகத் தேர்வு ரத்து வரவேற்கத்தக்கது” - ராமதாஸ்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
“Cancellation of TNPSC Group 2 Interview is welcome says Ramadoss

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 நேர்முகத் தேர்வு ரத்து வரவேற்கத்தக்கது என்றும் நிலையான தேர்வு அட்டவணை, கூடுதல் சீர்திருத்தம் தேவை என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் குரூப் 2 பணிகளுக்கு இனி நேர்முகத்தேர்வுகள் நடத்தப்படாது என்பது உள்ளிட்ட பல்வேறு சீர்திருத்தங்களை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்திருக்கிறது. தேர்வர்கள் நலன் கருதியும், தேர்வுகளை விரைவுபடுத்தவும் அறிவிக்கப்பட்டுள்ள இச்சீர்திருத்தங்கள் வரவேற்கத்தக்கவை.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தை காலத்திற்கும், தேவைக்கும் ஏற்ற வகையில் மாற்ற வேண்டும்; அதற்காக பல்வேறு சீர்திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறது. பா.ம.க. வலியுறுத்திய சில சீர்திருத்தங்களை தேர்வாணையம்   செயல்படுத்தியுள்ள போதிலும், தேர்வாணையத்தை நவீனப்படுத்துவதற்கு இவை மட்டும் போதுமானதல்ல.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் அனைத்து பணிகளுக்கும் நேர்முகத் தேர்வு கூடாது என்பது தான் பா.ம.க.வின் நிலைப்பாடு. இதை கடந்த ஐந்தாண்டுகளாக பா.ம.க.வின் நிழல் நிதிநிலை அறிக்கை மூலம் வலியுறுத்தி வருகிறோம். ஆள்தேர்வில் நடைபெறும் முறைகேடுகளுக்கு முதன்மைக் காரணம் நேர்முகத் தேர்வுகள் தான். அவை அகற்றப்பட்டால் தான் நேர்மையான முறையில் பணியாளர்களைத் தேர்ந்தெடுக்க முடியும். அப்போது தான் ஏழை, நடுத்தர மக்களுக்கும் வேலை கிடைக்கும்.

மத்திய அரசுப் பணிகளை பொறுத்தவரை குரூப் ஏ, குரூப் பி அரசிதழ் பதிவு பணிகள் தவிர மற்ற அனைத்து பணிகளுக்கும் நேர்காணல் முறை ரத்து செய்யப்பட்டு விட்டது. ஆந்திர மாநிலம் அதை விட அடுத்தக்கட்டத்திற்கு சென்று மாவட்ட துணை ஆட்சியர், காவல்துறை துணை கண்காணிப்பாளர் உள்ளிட்ட முதல் தொகுதி பணிகளுக்குக் கூட நேர்காணலை ரத்து செய்து விட்டது. ஆந்திராவைப் பொறுத்தவரை அரசு பணிகளுக்கு நேர்காணல் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டு விட்டது. ஆந்திரத்தைப் போலவே தமிழ்நாட்டிலும் முதல் தொகுதி பணிகளுக்கும் நேர்முகத் தேர்வை நிரந்தரமாக நீக்க வேண்டும்.

2 ஏ தொகுதியில் இதுவரை இருந்து வந்த நகராட்சி ஆணையர், தலைமைச் செயலக உதவி பிரிவு அதிகாரி ஆகியவை தொகுதி 2 க்கு மாற்றப்பட்டு விட்டன. இவை தவிர 2 ஏ தொகுதியில் உள்ள அனைத்து பணிகளும் சாதாரணமானவை தான். அப்பணிகளுக்காக முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு என இரு தேர்வுகளை நடத்த வேண்டிய தேவையில்லை. எனவே, 2 ஏ தொகுதி பணிகளுக்கு  இனி ஒரே தேர்வை நடத்துவதற்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் முன்வர வேண்டும்.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் எதிர்கொள்ளும் மிகக் கடுமையான விமர்சனம் தேர்வு முடிவுகளை குறித்த காலத்தில் வெளியிடுவதில்லை என்பது தான். தொகுதி 1, தொகுதி 2 பணிகளுக்கான தேர்வு நடைமுறைகளை பல நேரங்களில் 30 மாதங்கள் வரை ஆகின்றன. இதனால் தேர்வர்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். இந்த நிலையை மாற்றி குறித்த நேரத்தில் முடிவுகளை வெளியிட வேண்டும்.

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடிமைப்பணி அதிகாரிகளை தேர்தெடுப்பதற்கான போட்டித் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. லட்சக்கணக்கான மாணவர்கள் பங்கேற்கும் அத்தேர்வுகளின் முடிவுகள் அறிவிக்கை வெளியான நாளில் இருந்து ஓராண்டுக்குள் வெளியிடப்படுகின்றன. அடுத்தத் தேர்வுக்கு தேர்வர்கள் தயாராவதற்காக இத்தகைய ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குடிமைப்பணி தேர்வுக்கான முடிவுகள் ஒரு முறை கூட தாமதமாக வெளியிடப்பட்டதில்லை. மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தைப் பின்பற்றி ஒவ்வொரு தொகுதி பணிக்கும் எந்த மாதத்தில் அறிவிக்கை வெளியிடப்படும்? எந்த மாதத்தில் தேர்வு நடைபெறும்? எந்த மாதத்தில் முடிவுகள் வெளியாகும்? என்ற விவரங்கள் அடங்கிய நிலையான தேர்வு அட்டவணையை  தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமும்  வெளியிட வேண்டும்.

முதல் தொகுதி பணிகளுக்கான அறிவிக்கை பிப்ரவரி மாதம் வெளியிடப்பட்டு, ஏப்ரல் மாதத்தில் முதல்நிலைத் தேர்வு, ஜூலை மாதத்தில் முதன்மைத் தேர்வு நடத்தப்பட்டு, திசம்பர் மாதத்தில் இறுதி முடிவுகள் வெளியிடப்பட வேண்டும். இரண்டாம் தொகுதி பணிகளுக்கான அறிவிக்கை மார்ச் மாதம் வெளியிடப்பட்டு, மே மாதத்தில் முதல்நிலைத் தேர்வு, ஆகஸ்ட் மாதத்தில் முதன்மைத் தேர்வு நடத்தப்பட வேண்டும். ஒவ்வொரு ஆண்டும்  இரண்டு முறை தொகுதி 4 பணிகளுக்கான அறிவிக்கைகள் வெளியிடப்பட்டு, மார்ச், செப்டம்பர் மாதங்களில் தேர்வுகளை நடத்தி முறையே மே, நவம்பர் மாதங்களில் முடிவுகளை வெளியிட வேண்டும்.

பொறியியல் பணிகள், வேளாண் பணிகள், புள்ளியியல் பணிகள் உள்ளிட்ட முதல் 4 தொகுதிகளுக்குள் வராத பணிகளுக்கான அறிவிக்கைகள் ஆகஸ்ட் மாதத்தில் வெளியிடப்பட்டு, அடுத்த 5 மாதங்களில் தேர்வுகள் நடத்தி, முடிவுகளை வெளியிட வேண்டும். இதற்கேற்ற வகையில் தேர்வு நடைமுறையில் சீர்திருத்தங்களைச் செய்ய தமிழ்நாடு அரசுப் பணியாளர்  தேர்வாணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.