
நாட்டின் 18 வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் கடந்த 2024 ஆண்டு ஏப்ரல் - மே மாதங்களில் நாடு முழுவதும் நடைபெற்றது. இந்த தேர்தலில் தமிழகத்தில் அதிமுக கூட்டணியில் தேமுதிக போட்டியிட்டது. இது தொடர்பாக அதிமுக தலைமை அலுவலகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 30ஆம் தேதி அக்கட்சியின் பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தலைமையில், தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் முன்னிலையில் தேமுதிகவிற்கு ஐந்து பாராளுமன்ற தொகுதிகள் ஒரு ராஜ்யசபா இடம் என கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்நிலையில் தமிழ்நாட்டில் 6 நாடாளுமன்ற மாநிலங்களை உறுப்பினர்களின் பதவிக்காலம் ஜூன் 24ஆம் தேதியுடன் முடிவடைய உள்ளது. ஒரு மாநிலங்களவை உறுப்பினர் இடத்தை தேமுதிகவிற்கு அதிமுக வழங்க வேண்டும் என தேமுதிக சார்பில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வந்தது. கடந்த 30/05/2025 அன்று சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் தேமுதிகவின் பொருளாளர் சுதீஷ் சந்திப்பு மேற்கொண்டிருந்தார். இதனால் தேமுதிகவுக்கு மாநிலங்களவை உறுப்பினர் இடம் ஒதுக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவி இருந்தது.

இந்நிலையில் இன்று (01/06/2025) சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், அதிமுக சார்பில் ராஜ்யசபா தேர்தலில் முன்னாள் எம்எல்ஏ இன்பதுரை மற்றும் செங்கல்பட்டு மாவட்ட அவை தலைவர் தனபால் போட்டியிடப் போவதாக தெரிவித்துள்ளார். அதிமுகவிற்கு இரண்டு மாநிலங்களவை உறுப்பினர் பதவிகள் இருக்கும் நிலையில் இரண்டிலும் அதிமுகவே போட்டி போடுவதாக இதன் மூலம் தெரிய வருகிறது.
ஏற்கனவே தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் 'தங்களுக்கு மாநிலங்களவை உறுப்பினர் இடம் ஒன்றை ஒதுக்குவது அதிமுகவின் கடமை' என தெரிவித்திருந்த நிலையில் அதற்கு மாறாக அதிமுக இரண்டு இடங்களையும் தன்னுடைய கட்சிக்கு ஒதுக்கியுள்ளது.
கே.பி.முனுசாமியின் இந்த அறிவிப்பில் தேமுதிகவுக்கு 2026 ஆம் ஆண்டு ராஜ்யசபா தேர்தலில் சீட்டு வழங்கப்படும் என்றும், அதிமுக-தேமுதிக கூட்டணி நல்ல முறையில் தொடர்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.