Skip to main content

விவாதமான பேச்சு : அழைப்பிதழில் ரஜினி பெயரே இல்லை!

Published on 13/08/2019 | Edited on 13/08/2019

இந்திய குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடு எழுதிய “கவனித்தல், கற்றல், தலைமைதாங்குதல் என்ற தலைப்பில், தனது இரண்டுகால பணிகளை தொகுத்து புத்தகமாக வெளியிட்டார். சென்னையில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் இந்த புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு சிறப்பு விருந்தினராக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்துகொண்டார்.
 

rajnikanth

 

 

இதில் கலந்துகொண்ட நடிகர் ரஜினிகாந்த், “வெங்கையா நாயுடுவை 25 ஆண்டுகளாக எனக்குத் தெரியும். ஐதராபாத் நகரில் நண்பர் ஒருவரின் மூலமாக முதல்முதலில் அவரை சந்தித்துப் பேசினேன். அதன்பிறகு பெங்களூருவில் ஒருமுறை 2 மணிநேரம் சந்தித்துப் பேசும் வாய்ப்புகிடைத்து. அப்போதுதான் எனக்கு ஒருவிஷயம் புரிந்தது. அவர் தப்பித்தவறி அரசியல்வாதி ஆகிவிட்டார். அவர் ஓர் ஆன்மீகவாதி” என்று குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடுவை புகழ்ந்து பேசினார்.
 

அதோடு, காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து பறிக்கப்பட்டது குறித்து பேசிய நடிகர் ரஜினிகாந்த், “காஷ்மீரை இரண்டாகப் பிரித்த நடவடிக்கை மிகவும் சிறப்பானது. இதை மேற்கொண்டதற்காக அமித்ஷாவிற்கு வாழ்த்துகள். அமித்ஷாவும், பிரதமர் மோடியும் அர்ஜுனனும், கிருஷ்ணனும் போன்றவர்கள். இதில் யார் அர்ஜுனன், யார் கிருஷ்ணன் என்பது நமக்குத் தெரியாது. அவர்களுக்கு மட்டும்தான் தெரியும்” என்று பேசினார். நடிகர் ரஜினிகாந்தின் இந்தப் பேச்சு, விவாதத்துக்குள்ளானது.
 

இந்நிலையில், குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடுவின் புத்தக வெளியீட்டு விழாவிற்காக முதலில் அச்சடிக்கப்பட்ட அழைப்பிதழ், தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த அழைப்பிதழ் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரின் சார்பில், அனைவருக்கும் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. அதில், கவர்னர் பன்வாரிலால் புரோகித், முதல்வர் எடப்பாடி பழனிசாமி. வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன், இஸ்ரோ விஞ்ஞானி கஸ்தூரிரங்கன், துக்ளக் குருமூர்த்தி உள்ளிட்டோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. ஆனால், ரஜினிகாந்தின் பெயர் அதில் இடம்பெறவில்லை.
 

“ரஜினியின் முக்கியத்துவம் அறிந்தே, கடைசிநேரத்தில் அவரை புத்தக வெளியீட்டு விழாவிற்கு அழைத்திருக்கிறார்கள். அவரது வருகைக்கு முன்னுரிமை கொடுப்பதில் மோடியும், அமித்ஷாவுமே தீவிரம் காட்டினார்கள்” என்கிறது பா.ஜ.க. தரப்பு.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

4 கோடி ரூபாய் பறிமுதல் சம்பவம்; தமிழக டிஜிபி அதிரடி உத்தரவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 4 Crore Seizure Incident; Tamilnadu DGP action order

இந்தியாவின் 18 ஆவது மக்களவை தேர்தல் களைகட்டி வருகிறது. முதல்கட்டமாக தமிழகத்தில் தேர்தல் நடைபெற்ற போது சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து திருநெல்வேலிக்குச் செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்றதாக சுமார் ரூ. 4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். அப்போது திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்தப் பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.

இந்தச் சம்பவம் தொடர்பாக நயினார் நாகேந்திரன் ஆஜராகி பதிலளிக்கும்படி காவல்துறை தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் நயினார் நாகேந்திரன் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில், விசாரணைக்கு ஆஜராக பத்து நாட்கள் அவகாசம் வேண்டும் என நயினார் நாகேந்திரன் தரப்பில் காவல்துறைக்குப் பதில் கடிதம் கொடுக்கப்பட்டிருந்தது. அதேசமயம் இந்தப் பணத்தை நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன், இவரின் நண்பர்களான ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகிய மூவரும் கொடுத்து அனுப்பியதாகத் தெரிவித்திருந்தனர். இதனடிப்படையில் போலீசார் முருகன், ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இதனையடுத்து இவர்கள் 23.04.2024 அன்று தாம்பரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி இருந்தனர். இந்நிலையில் நான்கு கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பான இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.