Skip to main content

“ஜெயலலிதா போலவே கமலும்..” -மக்கள் நீதி மய்ய வட்டாரத்திலிருந்து குமுறல்!

Published on 02/04/2019 | Edited on 02/04/2019

 

“என் வழி தனி வழி என்று சினிமாவில் ரஜினி பேசிய வசனம், நிஜத்தில் கமலுக்குத்தான் பொருந்துகிறது..” என்று குமுறலோடு சொன்னார் சீனிவாசகம். 


விவகாரம் இதுதான் – 

 

k


மக்கள் நீதி மய்யம் விருதுநகர் மேற்கு மாவட்ட பொறுப்பாளர் சீனிவாசகத்தை கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டார் என்று நீக்கிவிட்டது அக்கட்சி. 
அது என்ன கட்சி விரோத நடவடிக்கையாம்?


கடந்த சில நாட்களாகவே கமல் மீதும் கட்சி குறித்தும் அதிருப்தியில் இருந்த சீனிவாசகம், இன்று காலை விருதுநகர்  திமுக மா.செ. கே.கே.எஸ்.எஸ்.ஆர். வீட்டு பக்கம் சென்றார். அவருடைய இந்த நடவடிக்கையை ம.நீ.ம. கட்சியினர் தலைமையிடம் புகாராகச் சொன்னார்கள். ராஜினாமா எழுதிக்கொடுத்து பொறுப்பிலிருந்து விலகுவதற்குத் தயாரான நிலையில்தான்,  திமுகவில் சேர்வதற்கு ஆயத்தமாகியிருக்கிறார். அதற்குமுன்,   ‘இவர் என்ன ராஜினாமா செய்வது? நாமே நீக்கிவிடலாம்’ என்று கட்சித் தலைமை கருதிவிட,  சீனிவாசகத்தின் ராஜினாமா வந்து சேர்வதற்கு முன்பாகவே,  நீக்க அறிவிப்பை வெளியிட்டிருக்கின்றனர்.   

 

a


சீனிவாசகத்தை தொடர்பு கொண்டோம். 
“பணத்துக்காக கே.கே.எஸ்.எஸ்.ஆரை பார்க்க நான் சென்றதாகச் சொல்வது தவறு. அண்ணா காலத்திலிருந்தே  நாங்க திமுக குடும்பம்தான். மு.க.அழகிரி அழைத்தும் நான் செல்லவில்லை. இப்போது  என்ன நடந்தது என்று நானே சொல்கிறேன்.” என்றவர் “விருதுநகர், தென்காசி பாராளுமன்ற தொகுதி வேட்பாளர்களாக முனியசாமியையும் முனிஸ்வரனையும் தன்னிச்சையாக அறிவித்துவிட்டார் கமல். மாவட்ட பொறுப்பாளர்களான எங்களின் அபிப்ராயத்தை கேட்கவே இல்லை.

 

 கமல் இப்படி செயல்பட்டால், பொறுப்பாளர்களால் மாவட்டத்தில் எப்படி செயல்பட முடியும்?  அவர் இப்படி நடந்துகொள்வது யாருக்கும் பிடிக்கவில்லை. நான் படித்தவர்களை மட்டுமே கையில் வைத்துக்கொள்வேன் என்றால், சொந்தப் பணத்தை செலவழித்து  கட்சி வேலை பார்ப்பதற்கு எங்களுக்கு எப்படி  மனசு வரும்?  இன்றுமட்டும் மூன்று பேர் கமல் கட்சியிலிருந்து விலகியிருக்கிறோம். நான் சொல்லாமல் கொள்ளாமல் திமுகவில் போய் சேர்ந்துவிட்டேன். நெல்லை மத்திய மாவட்ட பொறுப்பாளர் செந்தில்குமார், நெல்லை மேற்கு மாவட்ட பொறுப்பாளர் கருணாகர ராஜாவெல்லாம் இரண்டு நாட்களுக்கு முன்பாகவே ராஜினாமா கடிதம் கொடுத்துவிட்டார்கள். 

 

n

 

கஜா புயல் சமயத்தில் பொள்ளாச்சிகாரரான மகேந்திரன் என்பவர் கட்சிக்குள் வந்தார்.  அவரும் அருணாச்சலமும்தான் கட்சியில் குளறுபடி செய்பவர்கள். ஜெயலலிதா எப்படி சசிகலா கைக்குள் இருந்தாங்களோ, அதே மாதிரி மகேந்திரன், அருணாச்சலம் பிடியில் கமல் இருக்கிறார். 

 


கடந்த பிப்ரவரி மாதம் மக்கள் நீதி மய்யம் இரண்டாம் ஆண்டு தொடக்கவிழா பொதுக்கூட்டம் பாளையங்கோட்டையில் நடத்தினோம். அந்தக் கூட்டத்துக்கு தலைமை தாங்கிய பொருளாளர் சுகாவும், வரவேற்று பேசிய நெல்லை மத்திய மாவட்ட பொறுப்பாளர் செந்தில்குமாரும் இப்போது கட்சியில் இல்லை.  இத்தனைக்கும் சுகா கமலுக்கு நீண்டகால நண்பர். தூத்துக்குடியில் சேகர் என்ற பொறுப்பாளர் விலகிவிட்டார். சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களிலும் பொறுப்பாளர்கள் விலகிவிட்டார்கள். கட்சி நடவடிக்கை பிடிக்காமல்,  கமல் கூடாரமே காலியாகிக் கொண்டிருக்கிறது. 

 

m


தென்மாவட்டங்கள் என்று சொல்லப்படும் எட்டு மாவட்டங்கள் சேர்ந்து 65 லட்ச ரூபாய் செலவழித்து பாளையங்கோட்டையில் கூட்டம் நடத்தினோம். அன்றைக்கு எங்களை மேடையேற்றி இருக்க வேண்டாமா? அட, மேடையில் எங்கள் பெயரைக் கூட கமல் சொல்லவில்லை. கூட்டம் முடிந்ததும், இரவு 12 மணிக்கு ஒரு விஐபிகூட டின்னர் சாப்பிட்டார் கமல். எங்களில் யாரையும் கூப்பிடவில்லை. நாங்களெல்லாம் கூட்டம் நடந்த இடத்தில், திறந்தவெளியில் சாப்பிட்டுக் கொண்டிருந்தோம். அவரோ, ஒரு பெரிய ஹோட்டலில் அந்த விஐபிக்கு முக்கியத்துவம் தந்து, அவரோடு சாப்பிட்டுக் கொண்டிருந்தார். பணம் போனது பெரிதல்ல. மரியாதையும் இல்லையென்றால்? நாங்களெல்லாம் கிறுக்கனுங்களா?” என்றவர், தொடர்ந்து பேசமுடியாமல் அழுதேவிட்டார்.   


‘மனிதன் உணர்ந்துகொள்ள இது மனித அரசியல் அல்ல! அதையும் தாண்டி புனிதமானது!’ என்று கமல்ஹாசன் பாடுவாரோ என்னவோ?
 

சார்ந்த செய்திகள்

Next Story

“அரசியல் கேள்விக்கெல்லாம் பதில் சொல்லமாட்டேன்!”- ரஜினிகாந்த்

Published on 14/03/2024 | Edited on 14/03/2024
Rajinikanth has said that he will not answer political questions

வேட்டையன் படப்பிடிப்பிற்காக சென்னையிலிருந்து ஹைதராபாத் சென்றிருந்த நடிகர் ரஜினிகாந்த், படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பினார்.ரஜினிகாந்த் நடிப்பில் அடுத்து வெளிவரும் திரைப்படமான வேட்டையன் படப்பிடிப்பு, ஹைதராபாத் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடந்து வருகிறது.

அடுத்தகட்ட படப்பிடிப்பில் கலந்துகொள்ள, சென்னையிலிருந்து விமானம் மூலம் கடந்த 9ஆம் தேதி ஹைதராபாத் புறப்பட்டார். 75 சதவீத படப்பிடிப்பு நிறைவுற்ற நிலையில், அங்கிருந்து விமானம் மூலம் சென்னை திரும்பினார்.

“படப்பிடிப்பு நன்றாகப் போய்க்கொண்டிருக்கிறது..” என்று மீடியாக்களிடம் ரஜினிகாந்த் தெரிவித்தபோது, நாடாளுமன்றத் தேர்தல் குறித்து கேள்வி எழுப்பினார்கள். அதற்கு  “அரசியல் கேள்விக்கெல்லாம் பதில் சொல்லமாட்டேன்..” என்று கூலாகச் சொல்லிவிட்டு கிளம்பினார். 

Next Story

“கலைஞரின் தாஜ்மஹால் என்று சொல்லலாம்” - நடிகர் ரஜினிகாந்த்!

Published on 26/02/2024 | Edited on 26/02/2024

 

சென்னை கடற்கரை காமராஜர் சாலையில் சென்னைப் பல்கலைக் கழகத்தின் எதிரில், தமிழகத்தின் முன்னாள் முதல்வரான பேரறிஞர் அண்ணா 1969 பிப்ரவரி 3 ஆம் நாள் மறைந்த பின் அவருக்கு நினைவிடம் அமைக்கப்பட்டது. மேலும் தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், திமுக முன்னாள் தலைவருமான கலைஞர் தனது 95வது வயதில் கடந்த 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 7 ஆம் நாள் மறைந்த பின்னர் அண்ணா நினைவிடம் அருகிலேயே நல்லடக்கம் செய்யப்பட்டது. இதனையடுத்து தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கடந்த 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 21 ஆம் தேதி (24.8.2021) சட்டமன்றப் பேரவை விதி 110 ன்கீழ் வெளியிட்ட அறிவிப்பின் படி நினைவிடம் கட்டும் பணிகள் நடைபெற்று வந்தன. அதே சமயம் அண்ணா நினைவிடமும் புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்றன.

மேலும் அண்ணா, கலைஞர் ஆகியோரின் இரண்டு நினைவிடங்களும் 8.57 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளன. இந்த நினைவிடங்களின் முகப்பு வாயிலில் பேரறிஞர் அண்ணா நினைவிடம், முத்தமிழறிஞர் கலைஞர் நினைவிடம் எனும் பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளன. கலைஞர் சதுக்கத்திற்கு கீழே ‘கலைஞர் உலகம்’ என்ற அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளன. இந்த நினைவிடங்களில் அண்ணா சிலை, திருவாரூர் - சென்னை ரயில் பயண ஒலி-ஒளிக் காட்சி, சாதனை விளக்கப் புகைப்படத் தொகுப்புகள், கலைஞர் பொன்மொழிகள் கலைஞர் சிலை ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், அண்ணாவின் புதுப்பிக்கப்பட்ட நினைவிடத்தையும், கலைஞரின் புதிய நினைவிடத்தையும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (26.11.2024) மாலை 7 மணி அளவில் திறந்து வைத்தார். பின்னர் அண்ணா மற்றும் கலைஞர் சிலைகள் மற்றும் நினைவிடங்களில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் சட்டமன்றப் பேரவை தலைவர் மு. அப்பாவு, நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் உள்ளிட்ட தமிழக அமைச்சர்கள், சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி, ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன், வி.சி.க. தலைவர் தொல். திருமாவளவன், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் கே.எம். காதர் மொகிதீன், பா.ம.க. சட்டமன்ற கட்சித் தலைவர் ஜி.கே. மணி, மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் எம்.எச். ஜவாஹிருல்லா, நடிகர் ரஜினிகாந்த், கவிஞர் வைரமுத்து, தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

Lets call it an kalaignar Taj Mahal says actor Rajinikanth

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் ரஜினிகாந்த், “கலைஞரின் நினைவிடம் மிகவும் அருமை. ரொம்ப அற்புதம். இதனை கலைஞரின் நினைவிடம் என்று சொல்வதை விட, கலைஞரின் தாஜ்மஹால் என்று சொல்லலாம். அவ்வளவு அருமையாக உள்ளது” எனத் தெரிவித்தார்.