நாளை புதிய நாடாளுமன்றக் கட்டடம் திறக்கப்பட இருக்கும் நிலையில் தமிழகத்திலிருந்து சென்ற ஆதீனத்திடம் பிரதமர் மோடி ஆசி பெற்றதோடு செங்கோலையும் பெற்றுக் கொண்டார்.
தொடர்ந்து பிரதமர் இல்லத்தில் நடைபெற்ற நிகழ்வில் ஆதீனங்கள் கலந்து கொண்டனர். அப்பொழுது பேசிய பிரதமர் மோடி, ''உங்கள் அனைவரையும் வணங்கி வாழ்த்துகிறேன். நீங்கள் எனது இல்லத்திற்கு வந்திருப்பது எனக்கு அதிர்ஷ்டம். சிவபெருமானின் ஆசிர்வாதத்தால் சிவ பக்தர்களை தரிசனம் செய்யும் வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது. புனித செங்கோலுக்கு உரிய மரியாதை அளித்து கௌரவமான பதவியை வழங்கி இருந்தால் நன்றாக இருந்திருக்கும். ஆனால் செங்கோல் ஆனந்த பவனில் வாக்கிங் ஸ்டிக்காக வைக்கப்பட்டிருந்தது. எங்கள் அரசாங்கம் செங்கோலை ஆனந்த பவனில் இருந்து வெளியே கொண்டு வந்துள்ளது'' என்றார்.
இந்நிலையில் புதிய நாடாளுமன்றத்தில்செங்கோல் வைக்கப்படுவதற்கு பிரதமருக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், 'இந்திய நாட்டின் புதிய பாராளுமன்றக் கட்டடத்தில் ஜொலிக்கப் போகும் தமிழர்களின் ஆட்சி அதிகாரத்தின் பாரம்பரிய அடையாளம் - செங்கோல். #தமிழன்டா... பெருமை சேர்த்த மதிப்பிற்குரிய பாரதப் பிரதமருக்கு என் மனமார்ந்த நன்றி' எனத்தெரிவித்துள்ளார்.