Rajini Pays Tribute to Vijayakanth

நடிகரும் தேமுதிக நிறுவனத் தலைவரும், முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான, விஜயகாந்த் உடல் நலக்குறைவு காரணமாகச் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். விஜயகாந்தின் மருத்துவ பரிசோதனையில், அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதால் வெண்டிலேட்டர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், விஜயகாந்த் நேற்று (28-12-2023) காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவரது மறைவு மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

இவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் எனப் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவரது உடல் சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அங்கு தொண்டர்கள், ரசிகர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கூட்டம் கூட்டமாக வந்து அஞ்சலி செலுத்தி வந்தனர். இதையடுத்து அவரது உடல் சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு அரசியல் கட்சித் தலைவர்களும், பொதுமக்களும், தேமுதிக நிர்வாகிகளும், திரையுலகப் பிரபலங்களும் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வந்தனர்.

Advertisment

இதனைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் அஞ்சலி செலுத்த திரண்டதால் அவரது அலுவலகத்தில் இருந்து விஜயகாந்த்தின் உடல், தீவுத்திடலுக்கு எடுத்து செல்லப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. மதியம் 1 மணிக்கு மேல் தீவுத்திடலில் இருந்து இறுதி ஊர்வலம் புறப்பட்டு பூந்தமல்லி சாலை வழியாக கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கண்ணீர் மல்க விஜயகாந்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் விஜயகாந்த்தின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார்ரஜினிகாந்த்.இதற்கு முன்பு கன்னியாகுமரியில் இருந்து சென்னை வந்தபோது பத்திரிகையாளர்களை சந்தித்த ரஜினிகாந்த், “அன்பு நண்பர் விஜயகாந்த்தை இழந்தது மிகப்பெரிய துரதிர்ஷ்டம். அவர் மன உறுதியுள்ள, அசாத்திய மனிதர். எப்படியும் உடல் தேறி வந்து விடுவார் என்று நினைத்தோம்; ஆனால் தேமுதிக பொதுக்குழுவில் விஜயகாந்த்தை பார்க்கும் போது, எனக்கு கொஞ்சம் நம்பிக்கை குறைந்து விட்டது. உடல் நல்ல ஆரோக்கியமாக இருந்திருந்தால் தமிழக அரசியலில் மிகப்பெரிய சக்தியாக இருந்திருப்பார். தமிழ் மக்களுக்கு நிறைய நல்லது செய்திருப்பார். அந்த பாக்கியத்தை தமிழ் மக்கள் தற்போது இழந்திருக்கோம். விஜயகாந்த்தின் ஆத்மா சாந்திடைய வேண்டும்” என்று வருத்ததுடன் பேசினார்.

Advertisment