Skip to main content

ரஜினி மன்ற நிர்வாகி திடீர் மரணம்!

Published on 12/03/2020 | Edited on 12/03/2020

ரஜினி அரசியல் வருகை குறித்து நாளுக்கு நாள் பரபரப்பு அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் இன்று (12.03.2020) ரஜினியின் பத்திரிகையாளர் சந்திப்பு தமிழகம் முழுவதும் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
 

இந்த நிலையில் திருச்சி அடுத்த மணப்பாறையில் டீக்கடை ஒன்றில் டீ மாஸ்டராக பணிபுரிந்தவர் பாபா முருகேஷ். இவர் மணப்பாறை நகர ரஜினி மக்கள் மன்றம் துணைச் செயலாளராக பதவி வகித்தார். இவருக்கு வயது 52. மிகத் தீவிரமான ரஜினி ரசிகர். ரஜினியின் அரசியலை ஆர்வமாக எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கிறார்.

Rajini makkal mandram leader incident in trichy

இந்த நிலையில் இன்று ரஜினியின் பேட்டிக்கு பிறகு இவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு இறந்ததாக பரபரப்பு தகவல் வெளியானது. இதுகுறித்து மணப்பாறை ரஜினி மன்ற நகர செயலாளர் கணேசனிடம் பேசினோம்.
 

கணேசன் நம்மிடம், "இன்று அதிகாலை பாபா முருகேசன் திருச்சியில் உள்ள அவரது வீட்டிலிருந்து வேலைக்கு செல்வதற்காக மணப்பாறைக்கு டூவீலரில் சென்று கொண்டிருந்த போது கேர் கல்லூரி அருகே நாய் குறுக்கே வந்ததால் நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார். உடல் முழுவதும் காயமான நிலையில் திருச்சி அரசு மருத்துவமனையில் அவசர பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
 

மருத்துவமனையில் ரஜினியின் பேட்டியை செல்போனில் நேரலையாக பார்த்த பாபா முருகேசன் அதிர்ச்சி அடைந்து மாரடைப்பு ஏற்பட்டு இறந்திருக்கிறார் என்று மருத்துவர்கள் சொன்னார்கள். இதைக் கேள்விப்பட்ட திருச்சி மாவட்ட ரஜினி ரசிகர்கள் அனைவரும் வருத்தம் அடைந்து உள்ளோம்.
 

பாபா முருகேசன் தன் வாழ்நாள் ஆசையாக தலைவர் ரஜினியுடன் சேர்ந்து புகைப்படம் எடுக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு இருந்தார். ஆனால் கடைசி வரை அவருடைய ஆசை நிறைவேறாமல் போனது.
 

சில நாட்களுக்கு முன்பு தலைவர் ரஜினியை பார்க்க முடியாமல் போனால் ஒரு வேலை எனக்கு இறப்பு ஏற்பட்டால் ரஜினி மன்றத்தின் கொடியை என் உடல் மீது போர்த்தி என்னை அடக்கம் செய்ய வேண்டும்" என்றார்.
 

பாபா முருகேசனுக்கு 24 வயதில் ஒரு மகன் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ரஜினியின் அரசியல் பிரவேசம் பத்திரிகையாளர் சந்திப்பு பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் ரஜினி மன்றத்தின் நிர்வாகி விபத்தில் சிக்கி மாரடைப்பில் இறந்த இந்த சம்பவம் மன்ற நிர்வாகிகள் இடையே பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

திருச்சி ரயில் நிலையத்தில் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல்!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Arbitrary seizure of money at Trichy railway station!

திருச்சி ரயில் நிலையத்தில் போலீஸார் மேற்கொண்ட சோதனையில் ரூ. 1.44 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் ரயில்வே போலீஸார் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். காரைக்குடியில் இருந்து திருச்சி நோக்கி வந்த ரயிலில் போலீஸார் மேற்கொண்ட சோதனையில், இளைஞர் ஒருவர் கட்டுக்கட்டாக பணத்தாள்களை வைத்திருந்தார். அவரிடம் போலீஸார் விசாரித்தபோது,. அவர் மதுரை அவனியாபுரம் பகுதியை சேர்ந்த நாகவேல்ராஜா (25) என்பதும், மளிகை பொருட்கள் மொத்த வியாபாரம் செய்யும் நிறுவனத்தில் வேலை செய்து வருவதும், மளிகை பொருட்கள் அனுப்பிய வகையில், நிலுவையில் இருந்த பணத்தை வசூல் செய்து வந்ததாகவும் தெரிவித்தார். அவர் வைத்திருந்த ரூ.1 லட்சத்து 44 ஆயிரத்து 618 ரொக்கத்துக்கான ஆவணங்கள் ஏதும் அவரிடம் இல்லை.

இதைத்தொடர்ந்து ரயில்வே போலீசார் அந்த பணத்தை பறிமுதல் செய்து பறக்கும்படை அலுவலர் வினோத்ராஜ் மூலம் திருச்சி மேற்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

Next Story

“எதிரணி வேட்பாளர் போல் எங்கிருந்தோ வந்தவன் அல்ல நான்” - அ.தி.மு.க. வேட்பாளர் பிரச்சாரம்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
AIADMK candidate Karuppaiya campaign in Trichy

திருச்சி நாடாளுமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளர் கருப்பையா திருவரங்கம்  ரெங்கநாதர் கோவில் ரெங்கா ரெங்கா கோபுரம் முன் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கி தனது பிரச்சாரத்தை நேற்று மாலை தொடங்கினார். இந்த வாக்கு சேகரிப்பு நிகழ்ச்சிக்கு வடக்கு மாவட்டச் செயலாளர் பரஞ்ஜோதி தலைமை தாங்கிப் பேசினார்.

அப்போது பரஞ்ஜோதி பேசுகையில், திருச்சி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் எடப்பாடியாரின் ஆசி பெற்ற அதிமுக வேட்பாளர் கருப்பையாவை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெறச் செய்ய வேண்டும். அவர் வெற்றி பெற்றால் திருச்சி பாராளுமன்ற தொகுதி மக்களின் குரலாக நிச்சயம் பாராளுமன்றத்தில் குரல் கொடுப்பார். மக்களின் வளர்ச்சி திட்டங்களுக்கு பாடுபடுவார் என்றார்.

திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் ப.குமார் பேசியபோது, ஸ்ரீரங்கம் மண் இங்கு இருப்பவர்கள் மட்டுமல்லாமல் உலகத்தில் இருப்பவர்கள் யார் இங்கு வந்தாலும் அவரை உயரே தூக்கி விடுகின்ற மண். எனவே நிச்சயம் கருப்பையாவையும் உயரே கொண்டு வரும். அவர் மக்கள் பணி சிறப்பாக செய்வார். திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. அந்த வெற்றிடத்தை நிரப்புகின்ற தகுதி அதிமுகவிற்கு மட்டும்தான் உள்ளது என்பதை பொதுமக்கள் நிரூபிப்பார்கள். கருப்பையா திருச்சியிலிருந்து மக்கள் பணி ஆற்றுவார் என உறுதியளிக்கின்றோம் என்றார்.

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் பேசுகையில், திருச்சி நாடாளுமன்ற தொகுதி எதை எதிர்பார்க்கிறதோ எதை ஆழமாக வேண்டும் என்று நினைக்கின்றதோ நாடாளுமன்ற உறுப்பினர் எப்படி சிறப்பாக செயல்பட வேண்டும் என நம்புகிறார்களோ அந்த நம்பிக்கைக்கு பாத்திரமாக உங்களுடைய உணர்வுகளுக்கு பாத்திரமாக உழைக்கக் கூடியவர் இளைஞர் கருப்பையா. உங்களை தாங்கியும் பிடிப்பார். உங்களுக்காக பாராளுமன்றத்தில் ஓங்கியும் குரல் கொடுப்பார் என்றார்.

ரெங்கா ரெங்கா கோபுரத்திற்கு முன்பாக வேட்பாளர் கருப்பையா பேசுகையில், எதிர் அணியில் நிற்கும் வேட்பாளரை போல் எங்கிருந்தோ வந்து தேவைக்காக ரெங்க நாதரையும் மக்களையும் சந்திக்கக் கூடியவர் நான் அல்ல. இந்த மண்ணின் மைந்தன் ஆகிய நான் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும். மக்களின் உரிமைகளை நாடாளுமன்றத்தில் ஒலிக்க செய்ய வேண்டும் என்பதற்காகவே போட்டியிடுகிறேன் என்றார்.

பிரச்சாரத்தில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், மாவட்டச் செயலாளர்கள் குமார், பரஞ்சோதி, சீனிவாசன், அமைப்புச் செயலாளர்கள் ரத்தினவேல், மனோகரன், முன்னாள் அமைச்சர் வளர்மதி, சிறுபான்மை பிரிவு மாவட்டச் செயலாளர் புல்லட் ஜான், மீனவர் அணி பேரூர் கண்ணதாசன், இளைஞரணி மாவட்ட துணை செயலாளர் தேவா, ஜெயலலிதா பேரவை துணைச் செயலாளர் வி.என்.ஆர்.செல்வம், தமிழரசன், ஒன்றிய செயலாளர்கள் முத்துக்கருப்பன், ஜெயக்குமார், கோப்பு நடராஜ், பகுதி செயலாளர்கள் டைமன் திருப்பதி, சுந்தர்ராஜன், பொதுக்குழு உறுப்பினர் பிரியா சிவகுமார் மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.