எந்த அரசாங்கமும் செய்யாததை ரஜினிகாந்த் எங்களுக்கு செய்து கொடுத்தார்... மீனாட்சி நெகிழ்ச்சி...

நாகை மாவட்டத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட 10 குடும்பத்தினருக்கு மொத்தம் 18 லட்சம் செலவில் ரஜினி மக்கள் மன்றம் சார்பில் கட்டப்பட்ட வீடுகளின் சாவியை பயனாளர்களுக்கு இன்று ரஜினி வழங்கினார்.

கடந்த ஆண்டு ஏற்பட்ட கஜா புயலின் பாதிப்பால் நாகை மாவட்டத்தில் பல ஆயிரம் பேர் வீடுகளை இழந்தனர். முழுவதுமாக வீடுகளை இழந்தவர்களுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டித்தரப்படும் என்று ரஜினி மக்கள் மன்றம் சார்பில் அப்போது அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி கோடியக்கரையில் நான்கு வீடுகளும், தலைஞாயிறு கிராமத்தில் 6 வீடுகளும் தலா ஒரு லட்சத்து 85 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டன.

இந்த வீடுகளின் சாவிகளை இன்று முறையாக பயனாளர்களுக்கு வழங்கப்பட்டது. சென்னையில் உள்ள நடிகர் ரஜினிகாந்த் இல்லத்திற்கு நாகப்பட்டினத்தில் இருந்து வந்திருந்த பயனாளர்களுக்கு வீடுகளுக்கான சாவியை நடிகர் ரஜினிகாந்த் நேரில் வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பயனாளி மீனாட்சி, எந்த அரசாங்கமும் செய்யாததை நடிகர் ரஜினிகாந்த் எங்களுக்கு செய்து கொடுத்துள்ளார் என்று கூறினார்.

நாகை மாவட்ட ரஜினி மக்கள் மன்ற செயலாளர் ராஜேஷ்வரன்,கஜா புயல் சமயத்தில் அரசாங்கமே பலருக்கும் வீடுகளை கட்டித் தருவதாக அறிவித்தது. அதற்கு பின்னர் சில பயனாளர்களை தேர்வு செய்து நாங்கள் 10 வீடுகள் கட்டினோம். இந்த 10 வீடுகளும் அரசாங்கம் மற்றும் தனியார் தொண்டு அமைப்புகளின் எந்தவித உதவியும் இன்றி கட்டப்பட்ட வீடுகள். தொடர்ச்சியாக அந்த மாவட்டத்தில் பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறோம் என்று கூறினார்.

house kaja Nagapattinam rajini makkal mandram Storm
இதையும் படியுங்கள்
Subscribe