Rajeshwaripiriya condemn delhi woman police case

டெல்லி காவல்துறையில் பணிபுரிந்த சபியா என்ற பெண், கடந்த வாரம் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். பெண் காவலர் கூட்டுப் பாலியல் வன்கொடுமைசெய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து அனைத்து மக்கள் அரசியல் கட்சிநிறுவனத் தலைவர் ராஜேஸ்வரிபிரியா அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Advertisment

அந்த அறிக்கையில் அவர், “பெண்கள் கொடூரமான‌முறையில் பாலியல் கொடுமைகளுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்படுவது தொடர்ச்சியாக இந்தியாவில் நடந்து கொண்டே உள்ளன. அதிகபட்சம் ஒரு வார காலம் இது போன்ற சம்பவங்கள் குறித்து பேசுவதும் போராடுவதும் பிறகு அப்படியே எல்லோரும் கடந்து செல்கிறோம்.பாதிக்கப்பட்ட பெண் என்ன மதம் என்று தெரிந்த பிறகு அம்மதத்திற்கான பிரச்னையாக மாறி உருவெடுத்துவிடுகிறது.

Advertisment

அந்தக் குற்றத்தை அதே மதத்தினைச் சார்ந்த நபர்கள் செய்திருந்தால் அப்படியே போராட்டங்கள் நிறுத்தப்படுகின்றன.எப்போது சாதி மதங்களை கடந்து ஒரு பெண்ணிற்கு எதிரான குற்றம் என்று இந்த சமூகம் பார்க்கிறதோ அன்றுதான் குற்றங்களை குறைக்க முடியும். பாலியல் குற்றவாளி எந்தப் பின்புலத்தை கொண்டிருந்தாலும் அவன் மோசமான குற்றவாளியாகவே பார்க்க வேண்டும்.

டெல்லியில் பெண் காவலர் ஒருவர் கொலை செய்யப்பட்ட செய்தி நெஞ்சை பிளக்கச் செய்கிறது. இதற்கான நீதி கேட்டு இசுலாமியர்கள் மட்டுமே போராடி வருவது வேதனை அளிக்கிறது. என் சகோதரி எப்படி துடித்துப் போய் உயிரை விட்டிருப்பாள் என்று நினைத்தால் இதயம் கனக்கிறது.

மதச்சார்பற்ற நாடு என்று அரசியல் செய்ய மட்டும் அந்த வார்த்தையை பயன்படுத்தி கொண்டு இது இசுலாமியர் பிரச்னை என்று எண்ணி போராட்டத்தில் இறங்காமல் பணம் படைத்த பெரிய கட்சிகள் தூரமாக நின்று வேடிக்கை பார்க்கும் மனநிலை மோசமான அரசியல் நிலைமையை எடுத்து காட்டுகிறது.இது ஒரு பெண்ணிற்கு எதிரான குற்றம். பெண்கள் அனைவருமே ஒடுக்கப்பட்ட இனமாக உலகெங்கிலும் பார்க்கப்படுகின்றனர்.பெண்களுக்குள் ஒற்றுமையும் போராட்ட குணமும் அதிகமாக தேவைபடும் காலம் இது.தீர்வை நோக்கி பயணிப்போம்” என்று தெரிவித்துள்ளார்.