Skip to main content

"போலீஸும், டாக்டர்களும் சேர்ந்து செய்த படுகொலை!” - வீரவிளையாட்டு மீட்புக்கழக மாநிலத்தலைவர் ராஜேஷ்!

Published on 02/07/2020 | Edited on 02/07/2020
Rajesh is the head of the Viravilaiyattu Redemption Corporation

 

“தூத்துக்குடி மாவட்ட சாத்தான்குளத்தில் விசாரணைக்கு அழைத்து  செல்லப்பட்ட  அப்பாவிகள் தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸை  சித்திரவதை செய்து மிருகத்தனமாக கொன்றதை மனித இனமே கண்டித்தபிறகும்கூட  காவல்நிலையத்தில் மாஜிஸ்திரேட்  கண் எதிரிலேயே சில காவலர்கள் நடந்துகொண்ட முறையும்  பேசிய பேச்சும் அதிர்ச்சியளிக்கிறது” என்று கண்டனம் தெரிவித்திருக்கிறார் தமிழர் வீர விளையாட்டு மீட்புக்கழக மாநிலத்தலைவர் ராஜேஷ். மேலும் அவர்,

“ஒரு நீதித்துறை நடுவரைப் பார்த்து ஒரு கடைநிலை காவலர் ‘உன்னால ஒண்ணும் புடுங்க முடியாதுடா’ என்று மிரட்டுகிறார் என்றால் அதை வெறும் மன அழுத்தமாக எடுத்துக்கொள்ளமுடியாது. அந்த, காவலருக்கு மேலுள்ள எஸ்.ஐ. இன்ஸ்பெக்டர், டி.எஸ்.பி., ஏ.டி.எஸ்.பி. உள்ளிட்ட உயரதிகாரிகளின் அதிகாரத் திமிறை அம்பலப்படுத்தியிருக்கிறது. ஏற்கனவே, காவல்நிலையங்களில் நடந்த லாக்-அப் கொலைகளிலிருந்து தப்பித்ததால் ஏற்பட்ட அலட்சியத்தின் வெளிப்பாடுதான் இது.

அதேபோல், தமிழகம் முழுக்க கைதிகள் பாத்ரூமில் வழுக்கி விழுந்தார்கள் என்று ‘மாவுக்கட்டு’ போடப்பட்ட கைதிகளின் செய்திகளை கண்டிக்காததன் விளைவுதான் இன்று அப்பாவிகள் அடித்துக் கொல்லப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். இதற்கு, டாக்டர் வெண்ணிலா உள்ளிட்ட அரசு மருத்துவர்கள் உடைந்தையாக இருந்திருப்பது மாபெரும் குற்றம். எவ்வளவு பெரிய தண்டனைக் கைதியாக இருந்தாலும் கொடூரமானவராக இருந்தாலும் மருத்துவ சிகிச்சை அளித்து உயிரைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு மருத்துவருக்கு உண்டு. ஆனால், தவறே செய்யாத அப்பா- மகன் இரண்டுபேரையும் பின்புறத்தில் இரத்தம் சொட்ட சொட்ட லத்தியால் அடித்து சிதைத்திருக்கிறார்கள் கொடூர காக்கிகள். இவர்களை, மருத்துவமனையில் அட்மிட் செய்து சிகிச்சை அளிக்கவேண்டிய டாக்டர்கள் சிகிச்சை அளிக்காமல் ஃபிட்னெஸ் கொடுத்து சிறைக்கு அனுப்பியதன் விளைவுதான் அவர்கள் இருவரும் இறப்பதற்கு மிகமுக்கிய காரணம்.

 

Rajesh is the head of the Viravilaiyattu Redemption Corporation

 

பெரும்பாலான அரசு மருத்துவமனைகளில் காவல்துறையால் சித்திரவதை செய்யபப்பட்டு கொண்டுவரப்படும் கைதிகளை சரியான முறையில் அரசு டாக்டர்கள் பரிசோதனை செய்வதே இல்லை என்ற குற்றச்சாட்டு நிலவுகிறது.  இதனால், சிறைகளில் அடைக்கும்போது  சிறைத்துறை டாக்டர்கள் பரிசோதிக்கும்போது, காயங்கள் இருப்பதை கண்டுபிடித்துக் கேட்டால், ‘அரசு மருத்துவமனை டாக்டர்களே விட்டுவிட்டார்கள், நீதிபதியும் அனுமதித்துவிட்டார். நீங்கள் ஏன் அனுமதிக்க மறுக்கிறீர்கள்?’ என்று காவல்துறையால் சிறைத்துறை டாக்டர்கள் மிரட்டப்படும் சம்பவங்களும் நடக்கின்றன.  ஆக,  போலீஸும் டாக்டர்களும் சேர்ந்து செய்த படுகொலைதான் இது.  

மருத்துவ விதிகளுக்கு எதிராக நடந்துகொள்ளும் டாக்டர்கள் மீது தமிழக சுகாதாரத்துறை மற்றும் தமிழ்நாடு மருத்துவக்கவுன்சில் கடுமையான நடவடிக்கை எடுத்தால்தான் காவல்துறைக்கு அடிபணியாமல் இருப்பார்கள். அதேபோல், டாக்டர்களை மிரட்டும் காவல்துறை மீதும் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும்.  

மேலும், ஒரு சில காவலர்கள் மற்றும் மருத்துவர்கள் இதுபோன்று நடந்துகொள்ளும்  பட்சத்தில் ஒட்டுமொத்த காவல்துறை மற்றும் மருத்துவத்துறை மீதுள்ள நம்பிக்கையை இழக்கச்செய்கிறது.

ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோர் கொல்லப்பட்ட சம்பவத்தில் சி.பி.சி.ஐ.டி. கொலை வழக்கு பதிவு செய்திருப்பது மட்டுமே இந்த பிரச்சனைக்கு தீர்வாகாது. மேலும், கடுமையான தண்டனைகள் குற்றவாளிகளுக்கு வழங்கப்படவேண்டும். பாமர மக்களுக்கு எதிரான  தொடர் அநீதிகள்  இதுபோன்று நடக்கும் பட்சத்தில்  அதிகாரத்தில் இருப்பவர்கள் தவறுகள் செய்யும்போது கைது என்பது கண்துடைப்பு நடவடிக்கையாக மட்டுமில்லாமல் மிகக்கடுமையான தண்டனைகள் வழங்கப்படவேண்டும்” என்று கூறினார். இவர், ஜல்லிக்கட்டு போராட்டத்தை முன்னின்று நடத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

“பெற்றோர்களிடம் இந்த மனப்போக்கு மாற வேண்டும்” - ஆளுநர் ரவி

Published on 12/02/2024 | Edited on 12/02/2024
RN Ravi says it is wrong for parents not to allow their children to play sports

திருச்சி தேசிய கல்லுாரியில் விளையாட்டு வீரர்களின் 5 நாள் ஐ.சி.ஆர்.எஸ் கருத்தரங்கின் நிறைவு விழா நேற்று நடந்தது.  கல்லுாரி செயலாளர் ரகுநாதன் தலைமையில் நடந்த கருத்தரங்கின் நிறைவு விழாவில் ஆளுநர் ரவி பேசியதாவது, “விளையாட்டு வீரர்கள் போட்டிகளில் வெற்றி பெற்றாலும், தோல்வியுற்றாலும் அவர்கள் இந்த நாட்டின் சொத்துகள். 2008ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பில் அபினவ் பிந்த்ரா மட்டும் ஒரு தங்கப்பதக்கம் வென்ற போது ஒரு புறம் மகிழ்ச்சியாக இருந்தாலும், ஒரு பதக்கம் மட்டும் வென்றது சற்று மன வருத்தத்தைத் தந்தது. 

2010ம் ஆண்டு டில்லியில் காமன்வெல்த் போட்டிகள் நடந்தது. டில்லி விளையாட்டு கிராமத்தில் நடந்த விருந்தில் விஐபிக்கள் வரவில்லை என்பதற்காக வீரர்கள் சாப்பிடுவதற்கு 45 நிமிடங்கள் காத்திருக்கும் நிலைமை ஏற்பட்டது. இதுபோல வீரர்களை நடத்தக் கூடாது. பதக்கம் வென்றவர்களுக்கு அரசுகள் கோடிக்கணக்கில் பரிசு கொடுப்பதை போல விளையாட்டு உட்கட்டமைப்புகளை மேம்படுத்தும் முயற்சியில் ஈடுபட வேண்டும். பிரதமர் மோடி அறிவித்த  பிட் இந்தியா திட்டத்தின் படி பல்வேறு விளையாட்டு மேம்பாட்டு நிகழ்ச்சிகள் நடக்கிறது. 

சமீபத்தில் நடந்த சர்வதேச போட்டிகளில் இந்திய வீரர்கள் பதக்கம் குவித்தது மகிழ்ச்சி அளிக்கிறது.  தங்கள் குழந்தைகள் விளையாடினால் அதிக மதிப்பெண் பெற முடியாது என நினைத்து பெற்றோர்கள் விளையாட்டில் ஈடுபட அனுமதிக்காதது தவறாகும். பெற்றோர்களிடம் இந்த மனப்போக்கு மாற வேண்டும். விளையாட்டில் ஈடுபடுவதால் உடல், மன வலிமை, தலைமை பண்பு, கூட்டு முயற்சி போன்ற திறமைகள் உருவாகும். இந்த விளையாட்டு கருத்தரங்கில் நாட்டின் பல பகுதிகளில் இருந்து அதிக அளவில் வீரர்கள், பயிற்சியாளர்கள் கலந்து கொண்டது சிறப்பாகும். வீரர்கள், பயிற்சியாளர்கள், விளையாட்டு மருத்துவர்கள், பயோ மெக்கானிக் அனைவர்களும் இணைந்து செயல்பட்டால்தான் விளையாட்டில் சிறப்பு நிலைமை அடைய முடியும். ஓட்டப்பந்தயத்தில் தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக மைக்ரோ வினாடியில் போட்டியில் முடிவைக் கணிக்க முடிகிறது. நுாற்றாண்டு பாரம்பரிய பெருமை கொண்ட தேசியக் கல்லுாரிகளில் இது போன்ற விளையாட்டு கருத்தரங்கை அதிக அளவில் நடத்த வேண்டும்” என்றார். 

இந்தக் கருத்தரங்கில் 50 நாடுகளைச் சேர்ந்த சிறந்த விளையாட்டு வீரர்கள், வல்லுநர்கள், ஆர்வலர்கள் கலந்து கொண்டு ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்தனர். கருத்தரங்கில் ஆயுர்வேதம், போட்டிகளில் ஏற்படும் காயங்களுக்கான சிகிச்சை, உணவு மேலாண்மை, உடற்பயிற்சி, யோகா,மருத்துவம், விளையாட்டு கட்டமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் விவாதங்கள், குறும்பட போட்டி நடந்தது. நிகழ்ச்சியில் ஒலிம்பியன் பாஸ்கரன், எக்ஸல் நிறுவன சேர்மன் முருகானந்தம் உட்பட பலர் கலந்து கொண்டனர். துணை முதல்வர் பிரசன்ன பாலாஜி கருத்தரங்கம் குறித்த அறிக்கை மற்றும் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வாசித்தார். முன்னதாக கல்லுாரி முதல்வர் குமார் வரவேற்றார்.

Next Story

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு; இன்ஸ்பெக்டர் ஜாமீன் மனு தள்ளுபடி

Published on 01/02/2024 | Edited on 01/02/2024
Satankulam father, son case; Inspector dismisses bail plea

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் பகுதியில் கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா காலத்தில் நேரம் கடந்து கடையைத் திறந்து வைத்ததாக விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸ் ஆகிய இருவரும் காவல் நிலையத்தில், காவல்துறையினரால் கடுமையாகத் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கினை சிபிஐ விசாரித்து வருகிறது.

இந்த வழக்கில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ், தலைமைக் காவலர்கள் முருகன், சாமிதுரை, காவலர்கள் முத்துராஜா, செல்லத்துரை மற்றும் தாமஸ் பிரான்சிஸ் உள்ளிட்ட 9 பேரை சிபிஐ போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு மதுரை மாவட்ட முதன்மை அமர்வு முதலாவது நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த சூழலில் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் தந்தை, மகன் தாக்கப்பட்டு உயிரிழந்த வழக்கில் பணி இடைநீக்கம் செய்யப்பட்ட காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் ஜாமின் கோரி 5 வது முறையாக உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்நிலையில் இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சிபிஐ தரப்பு வழக்கறிஞர், “சாட்சிகளில் ஒருவரான மாஜிஸ்திரேட் பாரதிதாசனிடம் 28 நாட்கள் குறுக்கு விசாரணை நடத்தப்பட்டுள்ளதால், வழக்கின் விசாரணை தாமதமாகிறது” என வாதிட்டார். இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி, “மாஜிஸ்திரேட் பாரதிதாசனிடம் 28 நாட்கள் குறுக்கு விசாரணை நடத்தினால், அவர் தன்னுடைய பணிகளை செய்வாரா அல்லது தினசரி நீதிமன்றம் வந்து சாட்சியம் அளிப்பாரா?” என சரமாரியாக கேள்வி எழுப்பினார். இதனையடுத்து காவல் ஆய்வாளர் ஸ்ரீதரின் ஜாமின் மனுவை 5 வது முறையாக தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார். ஏற்கெனவே காவல் ஆய்வாளர் ஸ்ரீதரின் ஜாமீன் மனு 4 முறை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.