Skip to main content

அதிமுக ஆட்சியில் பந்தா கிடையாது; பட்டாபிஷேகம் கிடையாது - திமுக அரசைக் குறை கூறிய ராஜேந்திரபாலாஜி

Published on 09/12/2022 | Edited on 09/12/2022

 

h


சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு, விலைவாசி உயர்வு,  சட்ட ஒழுங்கு சீர்கேடு மற்றும் உயர்த்தப்பட்ட மின் கட்டணங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி திமுக அரசைக் கண்டித்து விருதுநகர் மாவட்டம் - சேத்தூரில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திரபாலாஜி பேசியபோது - “இந்த ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கான நோக்கம் என்னவென்றால், இன்றைக்கு சிமெண்ட் விலை கூடிவிட்டது, செங்கல் விலை கூடிவிட்டது, மணல் விலை கூடிவிட்டது, மண் விலை கூடிவிட்டது, பால் விலையையும் கூட்டி விட்டனர். இந்த ஆட்சியில் வீடு கட்ட நினைத்தாலும் வீடு கட்ட முடியவில்லை. வேலைக்கு ஆள் பற்றாக்குறை நிலவுகிறது.

 

வேலைக்கு ஆள் கிடைப்பதில்லை. வேலை கிடைப்பவர்களுக்குச் சரியான ஊதியம் கிடைக்கவில்லை. அந்த அளவுக்கு இன்றைக்குத் தமிழகத்தில் மிகப்பெரிய பொருளாதாரப் பிரச்சனை நிலவுகிறது. உணவுப் பொருட்கள், கட்டுமான பொருட்கள், ஆவின் பால் விலை, சொத்து வரி  உள்பட அனைத்து விலைகளும் கூடிவிட்டது. 500 ரூபாய் சொத்து வரி கட்டியவர்கள் இன்று 900 ரூபாய் கட்டுகின்றனர்.  5000 ரூபாய் சொத்து வரி கட்டியவர்கள் இன்று 8000 ரூபாய் வரி கட்டுகின்றனர். திமுக ஆட்சி பொறுப்பேற்று பதினெட்டு மாதங்கள் ஆகிவிட்டது. திமுக ஆட்சியில் விலைவாசிகள் தாறுமாறாக உயர்ந்து விட்டது.   

 

தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் இன்று பவனி வருகிறார். அவர் மக்களிடம் இறங்கி குறைகளைக் கேட்டறிய வேண்டும். விரக்தியின் விளிம்பிலே மக்கள் வாழ்கின்றனர். 10 ஆண்டுக்கால அதிமுக ஆட்சியில் எந்த விலைவாசியும் உயர்த்தப்படவில்லை. வீட்டு வரி கூட்டப்படவில்லை. சொத்து வரி கூட்டப்படவில்லை. இன்றைய திமுக ஆட்சியில்,  கழிவுநீர் வெளியேற்றும் கட்டணத்தைக்கூட உயர்த்தி விட்டனர். கரண்ட் பில் தொகையைக் கேட்டாலே ஷாக் அடிக்கும் அளவுக்கு உயர்த்தி விட்டனர்.

 

கரண்ட் பில் தாறுமாறாகக் கூடிவிட்டது. மின்சாரத்தை ஏழை எளிய மக்கள் பயன்படுத்த முடியவில்லை. கரண்ட் பில்லைக் கட்டுப்படுத்த, பொதுமக்கள் வீட்டில் பயன்படுத்தும் பொருட்களின் உபயோகத்தைக் குறைத்து வருகின்றனர். திமுக அரசு  கரண்ட் பில் உயர்வைக் கட்டுப்படுத்த  மின் வெட்டையும் செயல்படுத்தி வருகிறது.  கரண்ட் கட் பண்ணினால் கரண்ட் பில் கூடாது. அதிமுக ஆட்சியில் மின்சாரத்தை விடிய விடிய பயன்படுத்தினாலும் ஒரு அளவிற்குதான்  கரண்ட் பில் வரும்.  

 

ஒரு சுபிட்சமான, சுகமான நல்லாட்சியைக் கொடுத்தவர் எடப்பாடி  பழனிசாமி. அப்படிப்பட்ட ஆட்சி மீண்டும் வரவேண்டும் என்பதே மக்களின் எண்ணமாக உள்ளது. கடந்த பத்தாண்டு அதிமுக ஆட்சியில் மிகப்பெரிய பந்தா கிடையாது, மிகப்பெரிய பட்டாபிஷேகம் கிடையாது. ஆனால் இன்று திமுக ஆட்சியில், நேற்று ராஜபாளையம் வருகை தந்த தமிழக முதல்வர் ஸ்டாலினுக்காக போக்குவரத்தை முற்றிலும் தடுத்து, பொதுமக்களுக்கு பெரும் இடையூறு ஏற்படுத்தியுள்ளனர். கார், பஸ், வேன், டூவீலர் என அனைத்து வாகனங்களையும்  போலீசார் தடுத்துள்ளனர்.

 

இதனால் அவசரமாக வெளியூர் செல்பவர்கள்,  மருத்துவமனை சென்றவர்கள், முதியவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். பள்ளிக்கூடத்திற்கும் லீவு விட்டுள்ளனர். இப்படிப்பட்ட ஒரு நிலைமைதான் திமுக ஆட்சியில் உள்ளது. இது அட்டூழியம், அக்கிரமம், அநியாயம். ஒரு ஆட்சியில்,  இது போன்றவை நடக்கக்கூடாது. ஆட்சி கிடைத்தது என்பதற்காக என்ன வேண்டுமென்றாலும் செய்யலாம் என்ற நினைப்பில் திமுக  செயல்படக்கூடாது. திமுகவின் இந்த ஆட்சிக்கு மக்கள் பதிலடி கொடுப்பார்கள். திமுகவின் இந்த மக்கள் விரோத ஆட்சியை வன்மையாகக் கண்டிக்கிறோம்”  எனப் பேசினார்.
 

 

சார்ந்த செய்திகள்

Next Story

விஜயபிரபாகரனுக்கு சாலியர் மகாஜன சங்கம் ஆதரவு! - ராஜேந்திரபாலாஜி வீட்டில் நிர்வாகிகள் சந்திப்பு!

Published on 08/04/2024 | Edited on 08/04/2024
Saliyar Mahajana Sangam support for Vijaya Prabhakaran

நாடாளுமன்றத் தேர்தலில் ஒவ்வொரு தொகுதியிலும் சமுதாய ரீதியிலான வாக்குகளைப் பெறுவதில் அரசியல் கட்சியினரும், போட்டியிடும்  வேட்பாளர்களும் முனைப்பு காட்டிவருகின்றனர். அதற்காக, சமுதாயப்  பிரமுகர்களைச் சந்தித்து ஆதரவு திரட்டுகின்றனர்.

விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதியில் நெசவுத் தொழிலில் ஈடுபட்டுவரும் சாலியர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களின் வாக்குகள் கணிசமாக உள்ளன. குறிப்பாக, அருப்புக்கோட்டையிலும் சாத்தூரிலும் சாலியர்கள் அதிகமாக  வசிக்கின்றனர். இந்நிலையில், சாலியர் மகாஜன சங்கமும், நெசவாளர் முன்னேற்றக் கழகமும், இத்தேர்தலில் அதிமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.  

சாலியர் மகாஜன சங்கத்தின் மாநிலத் தலைவரான ஏ.கணேசன் தலைமையில், அந்த அமைப்பின் நிர்வாகிகள் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜியை திருத்தங்கல்லில் உள்ள அவருடைய வீட்டில் சந்தித்தபோது, விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதியின் தேமுதிக வேட்பாளர் விஜயபிரபாகரனும் உடனிருந்தார்.  தேர்தல் வெற்றி வாய்ப்புகள் குறித்தும், எந்தெந்தப் பகுதிகளில் களப்பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்பது  குறித்தும் அப்போது ஆலோசனை நடத்தினார்கள்.  

Next Story

“விஜயபிரபாகரன் பெயரிலேயே பெரிய ராசி இருக்கிறது” - ராஜேந்திரபாலாஜி

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
"Vijay Prabhakaran has a great sign in his name" - Rajendra Balaji

விருதுநகர் பாராளுமன்றத் தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணியில் போட்டியிடும் தே.மு.தி.க. வேட்பாளர் விஜய பிரபாகரன் அறிமுகக் கூட்டம் மற்றும் பாராளுமன்றத் தேர்தலுக்கான ஆலோசனைக் கூட்டம் விருதுநகரில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா தலைமை தாங்கினார். தே.மு.தி.க. வேட்பாளர் விஜய பிரபாகரன், தனது வெற்றிக்கு கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடம் வாக்கு சேகரித்துப் பேசினார்.

இந்தக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் டி. ராஜேந்திர பாலாஜி பேசுகையில், “இந்தத் தொகுதிக்குள் தான் எய்ம்ஸ் மருத்துவமனை, காமராஜர் பல்கலைகழகம், ஏர்போர்ட் எல்லாமே வருகிறது. எனவே  இவை நமக்குத்தான் சொந்தம். மொத்தத்தில் தென்மாவட்ட மக்களின் கெப்பாசிட்டி தம்பி விஜய பிரபாகரன் கையில் உள்ளது. இவர் வெற்றிபெற்று எம்.பி. ஆவதை இனி யாராலும் தடுக்க முடியாது. தமிழர்களின் உரிமைக்காகவும் பெருமைக்காகவும் உழைக்கின்ற கட்சி அ.தி.மு.க.

அ.தி.மு.க. - தே.மு.தி.க. கூட்டணி ராசியான கூட்டணி. தற்பொழுது உள்ள எஸ்.டி.பி.ஐ. இஸ்ஸாமிய அமைப்புகளில் மிகவும் வலிமையானது. அந்த அமைப்பு நமக்கு வலுவான துணையாக நிற்கிறது. இந்து, இஸ்லாம், கிறிஸ்தவம் என மதம் பார்க்காமல் அனைவருக்கும் உழைத்த கட்சி அ.தி.மு.க. எங்களை இனத்தை, சொல்லி மதத்தைச் சொல்லி பிரிக்க முடியாது. சிவகாசியில் பேசிய இ.பி.எஸ். ஓங்கிய குரலில் கொட்டும் முரசுக்கு ஓட்டு கேட்டு முழங்கினார். அது டெல்லி வரைக்கும் ஒலித்திருக்கிறது. கூட்டணிக் கட்சிக்கு மரியாதை கொடுத்து அங்கீகரிக்கக் கூடிய கட்சி அ.தி.மு.க.. ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, தமிழுக்காகப் பெருமை சேர்த்தவர். நாங்கள் தற்போது கூட்டணியில் இல்லாவிட்டாலும், அவர் அ.தி.மு.க. கூட்டணியில்தான் முதன் முதலில் எம்.பி.யாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

"Vijay Prabhakaran has a great sign in his name" - Rajendra Balaji

கூட்டணி என்றாலே முதலில் அமர்ந்து பேசிவிட வேண்டும். தொகுதிகள் சின்னம் ஆகியவற்றைச் சரியாக முடிவு செய்யவேண்டும். தே.மு.தி.க. வேட்பாளர் விஜய பிரபாகரன் பெயரில் பெரிய ராசி இருக்கிறது, வசியம் இருக்கிறது. அது எனக்கு நன்றாகத் தெரியும் அவர் வெற்றி நிர்ணயிக்கப்பட்ட ஒன்று. அவர் ஒன்றரை லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைத்தார் என்ற நிலையை நாம் உருவாக்க வேண்டும். நாளை முதல் தொகுதியில் 100 இடங்களில் பிரச்சாரம் செய்ய இருக்கிறோம்.

தமிழ்நாட்டில் தேர்தலில் பிரச்சாரமே வேண்டாம் என்று ஒரு அணியும், ஓட்டு போட்டால் போடுங்கள் இல்லாவிட்டால் போங்க என்று ஒரு அணியும் சுற்றித் திரிகிறது. விஜயபிரபாகரன் வெற்றிக்கு அ.தி.மு.க. கூட்டணி கடுமையாக இரவு பகல் பாராமல் உழைக்க வேண்டும். கூட்டணிக்  கட்சித் தலைவர்கள், அவருடைய வெற்றிக்குப் பாலமாக இருக்கவேண்டும். உங்களுக்குத் தேவையானவற்றை அ.தி.மு.க. இயக்கம் செய்யும். அதற்கு நான் முழு பொறுப்பு. தம்பி விஜய பிரபாகரன் பொறுப்பு. அதிமுக அடுத்து ஆட்சிக்கு வர வேண்டுமென்றால் 40 தொகுதிகளிலும் நாம் வெற்றி பெற வேண்டும்.” என்றார்.