மாமன்னன் ராஜராஜ சோழனின் 1038வது சதய விழா கோலாகலம்! 

Rajaraja Chola's 1038th Sadaya Festival

தஞ்சை பெரிய கோயிலில் மாமன்னன் ராஜராஜ சோழனின் 1038வது சதய விழா இன்றும் (24ம் தேதி), நாளையும் (25ம் தேதி) கொண்டாடப்படுகிறது. இது தொடர்பாக கடந்த சில தினங்களுக்கு முன்பு செய்தியாளர்களைச் சந்தித்த சதய விழாக் குழுத் தலைவர் து. செல்வம், “மாமன்னன் ராஜராஜ சோழன் முடி சூட்டிய நாளை அவர் பிறந்த நட்சத்திரமான ஐப்பசி சதய நாளன்று சதய விழாவாக ஆண்டு தோறும் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு மாமன்னன் ராஜராஜ சோழனின் 1038-வது சதய விழா மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் தலைமையில் அக்டோபர் 24ம் தேதி காலை முதல் 25ம் தேதி வரை கொண்டாடப்படும்” எனத் தெரிவித்திருந்தார்.

அந்த வகையில் மாமன்னன் ராஜராஜ சோழனின் 1038வது சதய விழா இன்று தஞ்சை பெரிய கோயிலில் கோலாகலமாகக்கொண்டாடப்பட்டு வருகிறது. இன்று காலை தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள் புலத் தலைவர் கோ.தெய்வநாயகம் தலைமையில் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அலுவலர் மு. ராஜேந்திரன், இந்தியத்தொல்லியல் துறை கோயில் அளவீட்டுப் பிரிவு இயக்குநர் கே. அமர்நாத் ராமகிருஷ்ணன், ரயில்வே காவல் கண்காணிப்பாளர் த. செந்தில்குமார், சைவ சித்தாந்தப் பேராசிரியர் வீ. ஜெயபால், குந்தவை நாச்சியார் கல்லூரி பேராசிரியர் இந்திரா அரசு, சோழர் வரலாற்று ஆய்வு சங்கத் தலைவர் அய்யம்பேட்டை ந. செல்வராஜ் ஆகியோர் உரையாற்றினர்.

மாலையில் திருமுறைப் பண்ணிசை, நாத சங்கமம், திருமுறை இசை ஆகியவைதொடர்ந்து நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து 5.30 மணிக்கு தென்னகப் பண்பாட்டு மையம் சார்பில் 1038 பரதநாட்டியக் கலைஞர்கள் பங்கேற்கும் நாட்டிய சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. மேலும் இரவு 7 மணிக்கு கவிதைப்பித்தன் தலைமையில் கவியரங்கம் நடைபெற்றது.மாமன்னன் ராஜராஜ சோழனின் 1038வது சதய விழாவையொட்டி தஞ்சை பெரிய கோயில் முழுக்க மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, அந்தப் பகுதியே மின் ஒளியில் பிரகாசிக்கிறது.

Tanjore
இதையும் படியுங்கள்
Subscribe