Skip to main content

குக்கிராமத்தில் இராஜராஜ சோழன் காலகல்வெட்டுகள்!! ஆச்சர்யப்படும் ஆய்வாளர்கள்!!

Published on 28/01/2019 | Edited on 28/01/2019

திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தின் சார்பில் மாவட்டத்தில் வாரந்தோறும் வரலாற்று ஆவணங்களை தேடி அதனை ஆவணப்படுத்தி வருகின்றனர். அதன்படி தண்டராம்பட்டு அடுத்த ராயண்டபுரம் கிராமத்தில் தென்பெண்ணையாற்றின் கரையில் உள்ள பழைய சிவன் கோயில் அருகில் அண்மையில் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின் போது இராயண்டபுரம் - தொண்டமானூர் செல்லும் வழியில் தென்பெண்ணையாற்றின் தென்கரையில் அமைந்துள்ள சிவன்கோயில் அருகில் உள்ள பாறையில் சோழர்காலத்தைச் சேர்ந்த 6 கல்வெட்டுகள் கண்டெடுக்கப்பட்டன. இக்கல்வெட்டுகளில் 3 சிதைந்த நிலையிலும் 3 நல்ல நிலையிலும் உள்ளன. இக்கல்வெட்டுகளைச் படித்த கல்வெட்டியல் அறிஞர் சு. இராஜகோபால் இக்கல்வெட்டுகள் சோழ அரசன் முதலாம் இராஜராஜனின் காலத்தில்  வெட்டப்பட்டுள்ளது என்றும் இக்கல்வெட்டு இங்குள்ள சிவன் கோயிலுக்கு விளக்கெரிக்க ஆடுகளை தானம் செய்த விவரம் குறிப்பிட்டப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். 

 

Surprising researchers

 

 

Surprising researchers

 

முதல் கல்வெட்டில் வாணகோப்பாடி பெண்ணைத் தென்கரையில் இராஜகண்டபுரத்தில்  உள்ள கானநங்கை என்ற கொற்றவை தெய்வத்திற்கு ஒரு நந்தா விளக்கெரிக்க 96 ஆடுகளை மும்முடிச் சோழ வாணகோவராயன் என்ற தொங்கல மறவன் என்ற இப்பகுதியில் இருந்த சிற்றரசன் இக்கல்வெட்டை வெட்டியுள்ளான்.   இரண்டாவது கல்வெட்டு இராஜராஜ சோழனின் 12 வது ஆட்சியாண்டில் வெட்டப்பட்டதாகும். இதில்  இராஜகண்டபுரத்தைச் சேர்ந்த கோசக்கர எழுநூற்றுவர் என்ற வணிகக்குழு இவ்வூரில் உள்ள திருக்குராங்கோயில் என்ற சிவபெருமானுக்கு இரண்டு நந்தாவிளக்கு எரிக்க 192 ஆடுகள் தானமாக விடப்பட்ட செய்தி குறிக்கப்பட்டுள்ளது. மற்றொரு கல்வெட்டில் இவ்வூர் மன்றாடிகளில் ஒருவரான அமத்தனின் மகன் காமன் என்பவர் இவ்வூரில் உள்ள  திருக்குரால் ஆள்வார் கோயிலுக்கு விளக்கெரிக்க 30 ஆடுகள் கொடுத்த செய்தி வெட்டப்பட்டுள்ளது. மற்ற கல்வெட்டுகளில்  சிதைந்து இருந்ததால் அதன் முழு விவரம் அறியஇயலவில்லை.

 

Surprising researchers

 

Surprising researchers

 

இக்கல்வெட்டுகளில் கிடைக்கும் செய்திகளிலிருந்து தற்போது ராயண்டபுரம் என்று அழைக்கப்படும் இவ்வூர் 1000 ஆண்டுகளுக்கு முன்பு இராஜகண்டபுரம் என்று வழங்கப்பட்டுள்ளது. மேலும் இவ்வூரில் உள்ள இக்கோயில் இறைவன் பெயர் இது வரை வெளியில் தெரியாமல் இருந்தது- தற்போது இக்கோயில் பெயர் திருக்குராங்கோயில் என்றும் இவ்வூரில் கானநங்கை என்ற கொற்றவை சிற்பம் இருந்தது பற்றியும் குறிப்புகள் உள்ளன. ஆனால் கொற்றவை சிற்பம் தற்போது கிடைக்கவில்லை. சோடச லிங்கம் என்ற பதினாறு பட்டை ஆவுடையாரும் சண்டிகேஸ்வரர் சிலையும்  தற்போது கோயிலில் உள்ளது. பழைய கோயிலும் தற்போது இல்லை புதியதாக செய்த இரும்பு ஷீட் கொட்டைகையில் இக்கோயில் சிலைகள் வைத்துள்ளார்கள்.

 

 

இக்கோயில் அக்காலத்தில் மிகவும் சிறப்படைந்த கோயிலாக இருந்திருக்க வேண்டும் ஏனெனில் இக்கோயிலுக்கு வழங்கப்பட்ட தானத்தில் மன்றாடி என்று வழங்கப்படுகின்ற இடையரும், கோச்சகர எழுநூற்றுவர் என்ற எண்ணை வணிகக்குழுவும், வாணகோவராயன் என்ற சிற்றரசனும் இக்கோயிலுக்கு தானம் அளித்துள்ளார்கள்.  மற்ற கல்வெட்டுகள் சிதைந்து போனால் பல வரலாற்றுத்தகவல்கள் தெரியாமல்போயின. இக்கோயில் அமைந்துள்ள பகுதியில் 3 கல்செக்குகள் காண்படுகின்றன. இவை இக்கோயில் இறைவனுக்கு விளக்கெரிக்க எண்ணை வழங்குவதற்கு ஏற்படுத்தப்பட்டதாகும்.

 

Surprising researchers

 

இப்பகுதியில் பாயும் தென்பெண்ணையாற்றுக் கரையில் மிகப்பழங்காலந்தொட்டே மனிதநாகரிகம் வளர்ந்த சான்றுகள் உடையது. தொன்டைமானூரில் உள்ள பெருங்கற்கால நினைவுச்சின்னமும் பாறைக்கீறல்களும், இப்பகுதியில் கண்டெடுக்கப்பட்ட நடுகற்களும் கல்செக்குகளும் இப்பகுதியின் தொன்மையை பறைசாற்றுகின்றன. தொடர்ந்து இப்பகுதியில் ஆய்வு செய்தால் மேலும் பல வரலாற்றுச்சிறப்பு மிக்க தகவல்கள் கிடைக்கக்கூடும் என்று வரலாற்று ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

 

 

இந்த ஆய்வுக்கு வரலாற்று ஆய்வு மைய தலைவர் த.ம.பிரகாஷ், செயலாளர் ச.பாலமுருகன், பொருளாளர் ஸ்ரீதர், இணைச்செயலர் மதன்மோகன் போன்றோர் ஊர் பொதுமக்கள் ஆதரவுடன் நடத்தி கண்டறிந்துள்ளனர். அதனை தொடர்ந்து அப்பகுதியில் கூடுதல் ஆதாரங்கள் உள்ளனவா எனவும் ஆய்வு செய்ய முடிவு செய்துள்ளனர்.

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

1000 ஆண்டுகள் பழமையான மகாவீரர் சிற்பம் கண்டுபிடிப்பு

Published on 12/02/2024 | Edited on 12/02/2024
1000 year old Mahavira sculpture discovered

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே மணவராயனேந்தலில் சுமார் 1000 ஆண்டுகள் பழமையான கி.பி.11ம் நூற்றாண்டு மகாவீரர் சிற்பம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

திருச்சுழி பகுதியில் கள ஆய்வின் போது, மணவராயனேந்தலில் இளையராஜா என்பவருக்குச் சொந்தமான தோட்டத்தில் 24 ஆம் தீர்த்தங்கரர் மகாவீரர் சிற்பம் இருப்பதை அருப்புக்கோட்டை எஸ்.பி.கே. கல்லூரி வரலாற்றுத்துறை உதவிப் பேராசிரியர் சு. ராஜபாண்டி, தொல்லியல் துறை பயிற்சி மாணவர் மீ. சரத் ராம் ஆகியோர் கண்டுபிடித்தனர். அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே. ராஜகுரு, ஆய்வாளர் நூர்சாகிபுரம் சிவகுமார் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர்.

இதுபற்றி ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே. ராஜகுரு கூறியதாவது, ‘விருதுநகர் மாவட்டத்தில் கோவிலாங்குளம், தொப்பலாக்கரை, குறண்டி, இருஞ்சிறை, புல்லூர், பாலவநத்தம், பந்தல்குடி, பாறைக்குளம், திருச்சுழி, புலியூரான், ஆவியூர், இருப்பைக்குடி, குலசேகரநல்லூர், சேத்தூர், சென்னிலைக்குடி, கீழ் இடையன்குளம், கிள்ளுக்குடி உள்ளிட்ட இடங்களில் சமண சமயம் பரவி இருந்ததற்கான தடயங்கள் ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

மணவராயனேந்தலில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள மகாவீரர் சிற்பம் பாதி மண்ணில் புதைந்த நிலையில் உள்ளது. கருங்கல்லால் ஆன இச்சிற்பத்தில் மகரத் தண்டுகளுடன் கூடிய சிம்மாசனத்தில் மகாவீரர் அமர்ந்துள்ளார். அவருக்குப் பின்புறம் பிரபாவளி எனும் ஒளிவட்டம் உள்ளது. அதன் மேற்பகுதியில் சந்திராதித்தம், நித்திய விநோதம், சகல பாசனம் ஆகியவற்றைக் குறிக்கும் முக்குடை அமைப்பு உள்ளது. முக்குடை அழகிய கொடிகளுடன் அலங்கரிக்கப்பட்டுள்ளது. மகாவீரரின் இருபுறமும் இரு இயக்கர்கள் உள்ளனர். இதன் காலம் கி.பி.11-ம் நூற்றாண்டாகக் கருதலாம். திருப்புல்லாணியிலிருந்து கமுதி, திருச்சுழி வழியாக மதுரை செல்லும் பெருவழிப் பாதையில் அநேக இடங்களில் தீர்த்தங்கரர் சிற்பங்கள் கிடைத்திருக்கின்றன.

சிற்பம் உள்ள இடத்தைச் சுற்றிலும் இரும்புக் காலத்தைச் சேர்ந்த வழுவழுப்பான கருப்பு சிவப்பு நிற பானை ஓடுகள் சிதறிக் கிடக்கின்றன. இவ்வூர் சுமார் 2000 ஆண்டுகள் பழமையான இரும்புக் காலம் முதல் மக்கள் குடியிருப்பாக இருந்துள்ளதற்கு இவை ஆதாரமாக உள்ளன. பாதுகாப்பு இல்லாமல் இருக்கும் இச்சிற்பத்தை அரசு அருங்காட்சியகத்தில் வைத்துப் பாதுகாக்க வேண்டும் என அரசைக் கேட்டுக் கொள்வதாக’ அவர் தெரிவித்தார்.

Next Story

உலகப் பாரம்பரிய வார விழா; தொன்மைப் பொருட்கள் கண்காட்சி

Published on 26/11/2023 | Edited on 26/11/2023

 

சிவகங்கை அரசு அருங்காட்சியகம், சிவகங்கை தொல்நடைக் குழு, சிவகங்கை மன்னர் மேல்நிலைப்பள்ளி தொன்மை பாதுகாப்பு மன்றம் இணைந்து நடத்திய உலக பாரம்பரிய வார விழாக் கொண்டாட்டம் 2023 தொன்மைப் பொருட்கள் கண்காட்சி சிவகங்கை மன்னர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.

 

இந்நிகழ்வில் சிவகங்கை தொல்நடைக் குழுவின் தலைவரும் சிவகங்கை மன்னர் மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியருமான நா. சுந்தரராஜன்  தலைமை வகித்தார், சிவகங்கை தொல்நடைக் குழு உறுப்பினர் சு. காளீஸ்வரன் வந்தோரை வரவேற்றார். சிவகங்கை தொல்நடைக் குழு நிறுவநர் புலவர் கா.காளிராசா நோக்க உரையாற்றினார். சிவகங்கை அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் தி.பக்கிரிசாமி தொல்நடைக் குழு பெருமைமிகு வழிகாட்டி செ. கண்ணப்பன் முன்னிலை வகித்தனர். சிவகங்கை மாவட்ட பிற்படுத்தப்பட்ட அலுவலர் மற்றும் வருவாய் கோட்டாட்சியர்  (பொறுப்பு) திருமதி ஜெயமணி அவர்கள் கண்காட்சியை தொடங்கி வைத்து உரை நிகழ்த்தும் போது, மரபு நீட்சியை மாணவர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்.. மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதன் மூலம் அடுத்த அடுத்த தலைமுறைக்கு பண்பாட்டையும் மரபையும் பாதுகாக்க முடியும் சிவகங்கையில் உலகப் பாரம்பரிய வார விழா கொண்டாடுவதில் மகிழ்ச்சி எனத் தெரிவித்தார்.

 

சிவகங்கை மாவட்ட சுற்றுலாத்துறை அலுவலர் சங்கர், சிவகங்கை மகளிர் அரசு கலைக் கல்லூரி பேராசிரியர் முனீஸ்வரன், காரைக்குடி இராமசாமி தமிழ்க் கல்லூரி மேனாள் முதல்வர் வள்ளி, பள்ளி ஆய்வாளர் இராதா கிருஷ்ணன்,சிவகங்கை தொல்நடைக் குழு உறுப்பினர் வித்தியா கணபதி ஆகியோர் வாழ்த்துரைத்தனர். சிவகங்கை தொல்நடைக்குழு செயலர் இரா.நரசிம்மன் நன்றியுரைத்தார்.

 

இந்த மூன்று அமைப்புகளும் இணைந்து மூன்று ஆண்டுகளாக உலகப் பாரம்பரிய விழாவை கொண்டாடி வருகின்றனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக கருத்தரங்க நிகழ்வாக நடைபெற்ற உலக பாரம்பரிய வார விழா இந்த ஆண்டு கண்காட்சியாக நடத்தப்பட்டது.

 

இந்த ஆண்டு நடைபெற்ற இக்கண்காட்சியில் 600 க்கு மேற்பட்ட பொருள்கள் காட்சிப்படுத்தப்பட்டன. சிவகங்கை தொல்நடைக் குழுவினர், அவ்வப்போது மேற்கொண்ட மேற்பரப்பு கள ஆய்வில் கிடைத்த பொருள்களை காட்சிப்படுத்தியிருந்தனர். இதில் கருப்பு சிவப்பு நிற பானை ஓடுகள், சிவகங்கை சுற்றுப்பகுதியில் கிடைத்த இரும்பு உருக்கு ஆலை எச்சங்கள், மண்ணால் ஆன குழாய்கள், இரும்புக் கழிவுகள் காளையார்கோவில் பாண்டியன் கோட்டையில் கிடைத்த தமிழி எழுத்து பொறிக்கப்பட்ட பானையோடு,எலும்பு முனைக்கருவி, பானையோட்டுக் குறியீடுகள், சங்க கால செங்கல் மற்றும் மேற்கூரை ஓட்டு எச்சங்கள், வட்டச் சில்லுகள், ராஜராஜ சோழன்  பீஜப்பூர் சுல்தான் நாணயங்கள் உட்பட பழமையான நாணயங்களும் இருந்தது.

 

புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக் கழக இணைச்செயலர் பீர்முகமது அவர்களது பத்தாண்டு கால சேகரிப்பில் உள்ள கலைநயமிக்க வெண்கலப் பொருள்கள், மரப் பொருள்கள், கத்திகள், வாள்கள், பழமையான செட்டிநாட்டு புழங்கு பொருட்கள், உரல் உலக்கை பழமையான கண்ணாடிப் பொருட்கள், இன்றைய பயன்பாட்டில் இல்லாத பழமையான மின்சாதன பொருட்கள், பலதரப்பட்ட தொலைக்காட்சிகள் பல வகையான வானொலிகள் முதலியவற்றுடன்  மௌண்ட் லிட்ரா பள்ளி மாணவர்கள் கொண்டு வந்து காட்சிப்படுத்திய பனையோலைகள் பழமையான விளக்குகள் மற்றும் மன்னர் பள்ளி மாணவர்களால் காட்சிப்படுத்தப்பட்ட வளரி, வாள் பழமையான மின்சாதன பொருட்கள், விளக்குகள் ஓலைச்சுவடிகள், செப்புப் பட்டயங்கள் காட்சிப் படுத்தப் பெற்றிருந்தன.

 

இந்நிகழ்விற்கான ஏற்பாடுகளை சிவகங்கை தொல்நடைக் குழு வைச்சேர்ந்த பொருளர் பிரபாகரன், இணைச் செயலர் முத்துக்குமார், சரவணன்,பாலமுருகன், அலெக்ஸ் பாண்டியன், முத்துக் காமாட்சி, மீனாள், மற்றும் மன்னர் பள்ளி தொன்மை பாதுகாப்பு மன்ற ஆசிரியர்கள் பர்வத ரோகிணி, பழனிவேல் முருகன், தனலட்சுமி காந்தி அழகப்பன், வெங்கட கிரி,பிரசாத், மனோகரன் ஆகியோர்  செய்திருந்தனர். சிவகங்கை மன்னர்  கல்வி நிறுவனங்கள்  மற்றும் சிவகங்கை நகரைச் சுற்றியுள்ள பள்ளிகள் என மூவாயிரத்திற்கு மேற்பட்ட மாணவர்கள் தொன்மைப் பொருட்கள் கண்காட்சியை கண்டு களித்தனர்.