Skip to main content

ராஜாமணி தங்கபாண்டியனின் உடலுக்கு மு.க.அழகிரி, உதயநிதி, நக்கீரன் ஆசிரியர், ரவீந்திரநாத் எம்.பி மற்றும் எம்.எல்.ஏ.க்கள் நேரில் அஞ்சலி!

Published on 05/10/2020 | Edited on 05/10/2020

 

 


அருப்புக்கோட்டை அருகே மல்லாங்கிணறு கிராமத்தில், முன்னாள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவின் தாயார், மறைந்த ராஜாமணி தங்கபாண்டியனின் உடலுக்கு, முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி குடும்பத்துடன் நேரில் வந்து, கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார். பின்னர் தங்கம் தென்னரசு மற்றும் தமிழச்சி தங்கப்பாண்டியன் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். 

 

அதேபோல, தி.மு.க இளைஞரணிச் செயலாளர் உதயநிதியும் அஞ்சலி செலுத்தினார். அஞ்சலி செலுத்திவிட்டு செய்தியாளர்களைச் சந்தித்தபோது, “நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், விருதுநகர் வடக்கு மாவட்ட தி.மு.க செயலாளரும், முன்னாள் அமைச்சருமான தங்கம் தென்னரசுவின் தாயாரும், முத்தமிழறிஞர் கலைஞரின் நெருங்கிய நண்பரான தங்கபாண்டியன் அவர்கள் துணைவியுமான ராஜாமணி அம்மையார் அவர்கள் நம்மை விட்டுப் பிரிந்து சென்றுள்ளார். அம்மையாரைப் பிரிந்து வாடும் அவர்கள் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் தி.மு.க.வின் சார்பாக இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.” என்றார். 

 

Rajamani Thangapandian's passes away


இந்நிகழ்ச்சியில், விருதுநகர் தெற்கு மாவட்ட தி.மு.க செயலாளர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன், மதுரை மாநகரப் பொறுப்பாளர் தளபதி, மதுரை வடக்கு மாவட்டச் செயலாளர் மூர்த்தி எம்.எல்.ஏ, மதுரை தெற்கு மாவட்டச் செயலாளர் மணிமாறன், தென்காசி பாராளுமன்ற உறுப்பினர் தனுஷ்குமார், எம்.எல்.ஏக்கள் சீனிவாசன், தங்கபாண்டியன், முன்னாள் மதுரை மேயர் குழந்தைவேலு, நக்கீரன் ஆசிரியர், தேனி பாராளுமன்ற உறுப்பினர் ஓ.பி.ரவீந்திரநாத் உள்ளிட்ட பலரும் பங்கேற்று அஞ்சலி செலுத்தினர்.  

தி.மு.க.வினரும் கிராம பொதுமக்களும் தங்கம் தென்னரசு இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது தாயார் ராஜாமணி அம்மாள் உடலுக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர். தற்போது, கணவர் தங்கபாண்டியன் சமாதிக்கு அருகிலேயே, ராஜாமணி அம்மாளின் உடலை நல்லடக்கம் செய்வதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. 
 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நள்ளிரவில் வீட்டு வாசலில் ரத்தம்; பீதியில் மக்கள்

Published on 07/11/2023 | Edited on 07/11/2023

 

People in panic on the door in the middle of the night in virudhunagar

 

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை நகராட்சிக்குட்பட்ட உச்சிக்கோவில் பகுதியில் 4வது தெரு அமைந்துள்ளது. இந்த தெருவில் 50க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இதையடுத்து, நேற்று முன்தினம் (06-11-23) இரவு வழக்கத்திற்கு மாறாக இந்த தெருவில் வசித்த வரும் மக்கள் அனைவரும் தங்களது வீட்டிற்கு தூங்கச் சென்றுவிட்டனர். இந்த நிலையில் நேற்று காலை வாசல் தெளிப்பதற்காக பெண்கள் எழுந்து வந்து வீட்டில் வாசலைப் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர். 

 

இந்த தெருவில் இருக்கும் பெரும்பாலான வீட்டின் வாசல்களில் ஆங்காங்கே ரத்தத் துளிகள் சிதறிக் கிடந்தன. இதையடுத்து, அந்தப் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோக்களிலும் ரத்தம் தெளிக்கப்பட்டிருந்தது. மேலும், ஒரு வீட்டில் ‘பி.ஆர். இன்று இரவு’ என்று ரத்தத்தில் எழுதப்பட்டிருந்தது. இதனால், பீதியடைந்த அப்பகுதி மக்கள் ஒரு இடத்தில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து, இந்த சம்பவம் குறித்து அப்பகுதி மக்கள் காவல்துறையினருக்குத் தகவல் கொடுத்தனர். 

 

தகவல் அறிந்த அருப்புக்கோட்டை டவுன் காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். இதையடுத்து, அங்கு இருந்த ரத்த துளிகளை எடுத்து அது மனித ரத்தமா? அல்லது ஆட்டு ரத்தமா? என்பதைக் கண்டறிய பரிசோதனைக்காக எடுத்துச் சென்றனர். மேலும், இது குறித்து காவல்துறையினர் அப்பகுதி மக்களிடம் விசாரித்ததில், கடந்த 10 நாட்களுக்கு முன்பு 5வது தெருவில் இதுபோல் வீட்டு வாசலில் ரத்தம் தெளிக்கப்பட்டிருந்ததாகத் தெரிவித்தனர். வீட்டு வாசலில் ரத்தம் தெளிக்கப்பட்ட சம்பவத்தால் அப்பகுதி மக்கள் பீதியடைந்துள்ளனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

 

Next Story

கிராம உதவியாளர் வேலை வாங்கித் தருவதாக ரூ. 9.5 லட்சம் மோசடி - அருப்புக்கோட்டையில் 3 பேர் மீது வழக்குப் பதிவு!

Published on 29/07/2023 | Edited on 29/07/2023

 

Rs 9.5 lakh scam for hiring village helper - A case has been registered against 3 people in Aruppukkottai!

 

அருப்புக்கோட்டை பழைய பேருந்து நிலையம் எதிரில் கடை நடத்தி வருபவர் ராஜ். இரண்டு வருடங்களுக்கு முன், கிராம உதவியாளர் பணிக்கு அறிவிப்பு வந்தபோது இவரும், இவருடைய மனைவியின் தங்கை கார்த்திகாவும், அந்த வேலை கிடைப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். ஆவின் பாலகத்தில் பணிபுரியும் சுந்தரகோபி, இவ்விருவரின் ஆர்வத்தைத் தெரிந்துகொண்டு அணுகினார். அப்போது சுந்தரகோபி, நரிக்குடி சமத்துவபுரத்தில் வசிக்கும் விஜயலட்சுமி, பலருக்கும் கிராம உதவியாளர் பணிக்கு ஏற்பாடு செய்து தருகிறார். அதற்கு  ரூ. 5 லட்சம் வரை செலவாகும் என்று கூறியிருக்கிறார்.

 

பணம் கொடுத்து வேலை வாங்கத் தனக்கு விருப்பம் இல்லை என்று ராஜ் மறுத்தும், சுந்தரகோபியும் அவருடைய தந்தை முருகனும் அடிக்கடி ராஜுவை சந்தித்து ஆசை காட்டியுள்ளனர். இவர்களின் பேச்சை நம்பிய ராஜ், தனக்கும் தன் மனைவியின் தங்கை கார்த்திகாவுக்கும் கிராம உதவியாளர் வேலை வாங்கித் தரச்சொல்லி,  சில தவணைகளில் வங்கி மூலமாகவும் நேரிலும்  ரூ. 9,50,000 கொடுத்தனர்.

 

கிராம உதவியாளர் தேர்வை ராஜுவும் கார்த்திகாவும் எழுதினர். தேர்வு முடிவு வந்தபோது, ராஜ் மற்றும் கார்த்திகா பெயர்கள் இல்லை. அதனால் ஏமாற்றமடைந்த ராஜ், சுந்தரகோபியிடமும் முருகனிடமும் காரணம் கேட்டார். அதற்கு அவர்கள்  “அதிகமாகப் பணம் தந்தவர்களுக்குத்தான் வேலை தந்துள்ளனர்.” என்று கூற, பணத்தைத் திருப்பிக் கேட்டார் ராஜ். பணத்தைத் தராமல் காலதாமதம் செய்து வந்த அவ்விருவரும் ஒரு கட்டத்தில், “பணத்தைக் கேட்டு வந்தால் உன்னை இந்த ஊரில் வாழ விடமாட்டோம். அடித்தே கொன்று விடுவோம்.” என்று மிரட்டியுள்ளனர்.  

 

இதனைத் தொடர்ந்து, அருப்புக்கோட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் சுந்தரகோபி, விஜயலட்சுமி மற்றும் முருகன் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யும்படி மனுத் தாக்கல் செய்தார் ராஜ். CRMP No.3526/2023-ன் படி வரப்பெற்ற உத்தரவின் பேரில், அருப்புக்கோட்டை டவுன் காவல் நிலையம் மூவர் மீதும் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளது.