Skip to main content

சம்பளத்தை உயர்த்துங்க! நிரந்தப்படுத்துங்க! - பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை!

Published on 28/06/2019 | Edited on 28/06/2019


தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் விடுத்துள்ள கோரிக்கை மனுவில் 

9 ஆண்டுகளாக அரசுப் பள்ளிகளில் பகுதிநேரமாக பல்வேறுவகை சிறப்பாசிரியர்கள் பணிபுரிந்து வருகிறார்கள்.  2011-12 கல்வி ஆண்டில் நியமிக்கப்பட்ட இவர்கள்  கல்வி இணைச்செயல்பாடுகளை 6, 7 மற்றும் 8 வகுப்பு மாணவர்களுக்கு கற்றுத்தருகிறார்கள்.  

உடற்கல்வி, ஓவியம், கணினி, இசை, தையல், தோட்டக்கலை, கட்டிடக்கலை, வாழ்வியல்திறன் கல்வி பாடங்களில் 16 ஆயிரத்து 549 சிறப்பாசிரியர்கள் பகுதிநேரமாக நியமிக்கப்பட்டார்கள். இவர்களுக்கு தொகுப்பூதியமாக ரூ.5 ஆயிரம் ஆரம்பத்தில் தரப்பட்டது.

ஊதிய உயர்வு மற்றும் பணி நிரந்தரம் செய்யக்கோரி வலியுறுத்தி வந்தார்கள். சட்டமன்றத்திலும் உறுப்பினர்கள் மானியக் கோரிக்கையின்போது பகுதிநேர ஆசிரியர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி வந்தனர். இதை தொடர்ந்து 2014ல்  அதிகபட்சமாக 40 சதவீதம் ரூ.2 ஆயிரம் ஊதிய உயர்வால் சம்பளம் ரூ.7ஆயிரமானதோடு மட்டுமில்லாமல் 12 ஆயிரம் நிலுவைத்தொகையும் கிடைத்தது.

teacher


இதன் பின்னர் ஊதிய உயர்வு மற்றும் பணி நிரந்தரம் செய்ய கோரிக்கைகளை தொடர்ந்து சட்டமன்றத்திற்குள்ளும், வெளியிலும் பலவழிகளில் வலியுறுத்தினர்.

இந்நிலையில் 2017ம் ஆண்டு ஆகஸ்டு 22 ஜாக்டோஜியோ கூட்டமைப்பினர் வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு சில நாட்களுக்கு முன்பாக 10 சதவீத ஊதிய உயர்வாக எழுநூறு ரூபாய் ஆகஸ்டு மாதத்தில் இருந்து வழங்க குறிப்பாணை பிறப்பித்தனர். இதனால் தொகுப்பூதியம் 7 ஆயிரத்து 700 ஆனது. ஆனால் SSA வின் அனைத்து தொகுப்பூதிய பணியாளர்களுக்கும் 20 சதவீத ஊதிய உயர்வும், ஏப்ரல் முதல் கணக்கிட்டு நிலுவைத் தொகையும் வழங்கி உள்ளது குறிப்பிடதக்கது.

ஜாக்டோஜியோ கூட்டமைப்பினர் வேலைநிறுத்தப் போராட்டத்தின்போது பள்ளிகளை திறந்து பகுதிநேர ஆசிரியர்களை பயன்படுத்தி முழுநேரமும் நடத்திட அரசு உத்தரவிடுகிறது. அரசின் உத்தரவின்படி ஜாக்டோஜியோ கூட்டமைப்பினர் வேலைநிறுத்தப் போராட்ட காலங்களில் பகுதிநேர ஆசிரியர்களே பள்ளிகளை திறந்து முழுநேரமும் நடத்தினர்.

எமிஸ், பவர் பைனான்ஸ், இமெயில்  உள்ளிட்ட கணினி சம்மந்தபட்ட வேலை மட்டுமின்றி, பள்ளி நேரங்களில் தரப்படும் எல்லா விதமான வேலைகளையும் இந்த தொகுப்பூதிய பகுதிநேர ஆசிரியர்கள் செவ்வனே செய்து வருகிறார்கள். பாட ஆசிரியர்கள் பள்ளி வராத நாட்களிலும், ஆசிரியர்கள் பற்றாக்குறை உள்ள பள்ளிகளிலும் இவர்கள் பயன்படுத்தப்படும் விதம் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படாமல் இவர்களின் வாழ்க்கைத்தரம் ஏறிவிட்ட விலைவாசியால் சிக்கலில் தத்தளிக்கின்றது.

8 எட்டு வருஷம் முடிந்து இப்போது 9-வது வருஷம் ஆரம்பித்துவிட்டது. இனியும் தொகுப்பூதியத்தை அதிகபட்சமாக ரூ.15ஆயிரம் வழங்காமல் இருப்பது இவர்களின் எதிர்காலத்தை பாதிக்கின்றது.

 

teacher


கோவா மாநிலத்தில் ரூ.15ஆயிரம், ஆந்திரா மாநிலத்தில் ரூ.14ஆயிரத்து 203 என அதிகபட்ச சம்பளம் இதே SSA பகுதிநேர ஆசிரியர்களுக்கு கொடுத்து வருகிறார்கள். எனவே கல்வித்துறை அதிகாரிகள் இந்த மாநில அரசுகளைப்போல குறைந்தபட்ட அதே தொகுப்பூதியத்தை தமிழகத்திலும் விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.

பகுதிநேர ஆசிரியர்களின் நியமன அரசாணையில் மே மாதம் சம்பளம் குறித்து எதுவும் ஆணையிடப்படாத நிலையில் கடந்த 8 ஆண்டுகளாக ஒவ்வோருவரும் இழந்துவரும் மே மாதம் சம்பளம் ரூ.53ஆயிரத்து 400ஐ உடனடியாக வழங்க வேண்டும்.

இது ஒருபுறமிருக்க 8 ஆண்டுகளுக்கும் போனஸ் தரப்படாமல் உள்ளது. வேறெந்த துறைகளிலும் இதுபோன்ற நடந்ததில்லை. SSAவில் அனைத்து தொகுப்பூதிய பணியாளர்களுக்கும் போனஸ் கொடுத்துவிட்டு பகுதிநேர ஆசிரியர்களுக்கு  மட்டும் தராமல் இருப்பது எந்தவகையில் நியாயம். எனவே 8 வருஷ போனஸ் நிலுவைத் தொகையை கணக்கிட்டு உடனடியாக வழங்கவேண்டும். மேலும், இறந்துபோன பகுதிநேர ஆசிரியர்களின் குடும்பங்களுக்கு முதல்வர் சிறப்பு நிதியிலிருந்து  குடும்ப நலநிதியாக ரூ.2 இலட்சம் உடனடியாக வழங்கவேண்டும்.

P.F, E.S.I உடனடியாக அமுல்படுத்த வேண்டும். மகளிருக்கு சம்பளத்துடன் மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும். 1325 உடற்கல்வி, ஓவியம், இசை, தையல் பாடங்களில் நிரந்தரப்பணிக்கு தேர்வி நடத்தியபோதும், தற்போது நடந்த 814 கணினி ஆசிரியர்கள் தேர்விலும் பகுதிநேர ஆசிரியர்கள் முற்றிலும் முன்னுரிமைகூட தரமால் புறக்கணிக்கப்பட்டுள்ளனர். கல்வித்துறையில் மட்டுமே இதுபோன்று நடக்கிறது. இதனால் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியின் திட்ட வேலையில் ஒப்பந்த பணியில் தொகுப்பூதியத்தில் பணிபுரிந்து வரும் பகுதிநேர ஆசிரியர்கள் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி வருகிறது.

16 ஆயிரத்து 549 பகுதிநேர ஆசிரியர்கள் பணியிடங்களில் உள்ள காலியாக உள்ள 4 ஆயிரம் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். பொது மாறுதலை பகுதிநேர ஆசிரியர்களுக்கும் நடத்த வேண்டும். அனைவரையும் கல்வி தகுதிக்கேற்ப சிறப்பு தேர்வு நடத்தி அவரவர் பாடப்பிரிவுகளில் காலமுறை ஊதியத்தில் பணியமர்த்த நடவடிக்கை எடுங்கள். காலதாமதம் ஆகும் எனில் அதுவரை குறைந்தபட்சம் ரூ.15ஆயிரம் சம்பளத்தை வழங்க அறிவிப்பை அரசு வெளியிட கேட்டுக்கொள்கிறேன்.

 இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த போர் வீரனின் நடுகல் கண்டுபிடிப்பு!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
17th century warrior headstone Kantipudi

சேலம் மாவட்டம், மாதநாயக்கன்பட்டி பெருந்தலைவர் காமராசர் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளி தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் தலைவர் தலைமை ஆசிரியர், பொறுப்பு ஆசிரியர்களாக அன்பரசி, விஜயகுமார் ஆகியோர் உள்ளனர். இப்பள்ளி மாணவர்கள் கொடுத்த தகவலின்படி ஆசிரியர்களும், மாணவர்களும் களப்பயணத்தின் போது வீரனின்  நடுகல்  ஒன்று கண்டறியப்பட்டது.

பொது ஆண்டு 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த நடுகல்லில் எழுத்துகள் எதுவும் இல்லை. கல்பூமியின் மேற்பரப்பில் 2 அடி உயரமும் 1.5  அடி அகலம் கொண்டது. இந்த நடுகல்லை சுற்றி கல்திட்டை போன்ற அமைப்பும் உள்ளது . நடுகல்லில் போர் வீரனின் சிற்பம்  உள்ளது.
வேட்டைக்கு சென்று இறந்ததற்காக எடுக்கப்பட்ட நடுகல்லாக இருக்கலாம். ஆலிடாசனம் நிலையில் வில்லில் நாணில் அம்பு எய்துவது போன்றும், இடுப்பில் குரு வாளும், காதில் பத்ர குண்டலமும்,   கழுத்தில் சரப்பளி, சவுடி, முத்தாரம் அணிகலன் அணிந்திருப்பது  போன்றும் கையில் தோள்வளை  இருப்பது போன்ற உருவமைப்பு உள்ளது.

17th century warrior headstone Kantipudi

இப்பகுதி தாருகாவனத்திற்க்கு அருகில் இருப்பதால்  இந்த வீரன் வேட்டுவ தலைவனாக இருக்கலாம். இந்த நடுகல் எல்லாம் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் வைக்கப்பட்டதாகும்.  தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் சார்பாக தொல்லியல் சார்ந்த வரலாற்று தகவல்களையும், அதனை பற்றிய விழிப்புணர்வையும் இன்றை இளைய தலைமுறை மாணவர்களுக்கு கொண்டு சேர்ப்பது தான் தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் நோக்கமாகும் என்கின்றனர் தொன்மை பாதுகாப்பு மன்ற ஆசிரியர்கள்.

Next Story

'ஐயம் களையப்பட வேண்டும்'- ஆசிரியர் மன்ற மாநில பொதுச்செயலாளர் கோரிக்கை

Published on 14/04/2024 | Edited on 14/04/2024
nn

'மக்களவைத் தேர்தல் பணியில் ஈடுபடும் அனைத்து ஆசிரியர் மற்றும் அரசு அலுவலர்களின் வாக்குரிமை பாதுகாக்கப்படவேண்டும். எனவே அஞ்சல் வாக்கு மற்றும் தேர்தல் பணிச்சான்று கிடைக்கப்பெறாத ஆசிரியர், அரசு அலுவலர்களின் ஐயம் களையப்படவேண்டும்' என தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற மாநில பொதுச் செயலாளர் மன்றம் நா.சண்முகநாதன் தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அலுவலருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது, 'தமிழ்நாட்டில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் எதிர்வரும் 19.04.2024 அன்று ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இதற்கு மக்களவைத் தேர்தல் பணிகளில் தமிழ்நாட்டின் ஆசிரியர் மற்றும் அரசு அலுவலர்கள் வாக்குச்சாவடி அலுவலர் பொறுப்புகள் பணியமர்த்தப்பட்டு உள்ளனர். இவ்வாறு வாக்குச்சாவடி அலுவலர்களாக பணியமர்த்தப்பட்டுள்ள ஆசிரியர் மற்றும் அரசு அலுவலர்கள் அஞ்சல் வாக்கு(postal vote) உரிமையின் மூலமாகவும் , தேர்தல் பணிச் சான்று(election duty certificate) கிடைக்கப்பெற்று பணியாற்றும் வாக்குச்சாவடிகளில் வாக்கினை செலுத்துவது மூலமாகவும் தங்களது ஜனநாயக கடமையை செவ்வனே ஆற்றி வந்துள்ளனர் என்பது காலம் காலமாக இருந்து வரும் நடைமுறை மரபாகும்.

ஆனால் தற்போதைய மக்களவைத் தேர்தலுக்கான இவ்வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு இதுவரையிலும் மூன்று கட்ட பயிற்சி வகுப்புகள் நடைபெற்று முடிந்துள்ள நிலையிலும் அஞ்சல் வாக்குகள் கோரியவருக்கு அஞ்சல் வாக்குகளும் வழங்கப்படவில்லை.தேர்தல் பணிச்சான்று கோரியவருக்கும் தேர்தல் பணிச்சான்றும் வழங்கப்படவில்லை. மாநிலத்தின் பெரும்பாலான மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்களின் இதற்கு மெத்தனப்போக்கு காரணமாகும்.  வாக்குரிமை பறிப்புக்கு இணையானதாகும் என்று வலுவாகப் பேசப்படுகிறது.

nn

தமிழ்நாட்டின் ஆசிரியர் மற்றும் அரசு அலுவலர்களிடம் பரவலாக பரவி வரும் பேரச்சம் மற்றும் பெரும் ஐயம், மனப்பதற்றம், மனக்கொந்தளிப்பினை அதிகரித்துள்ளது. புதுக்கோட்டை  மாவட்டத்தில் மறியல் போராட்டம் வரை சென்றுள்ளது. நூறு சதவிகிதம் வாக்குப் பதிவினை முதன்மை நோக்கங்களில் ஒன்றாக கொண்டுள்ள தேர்தல் ஆணையத்தின் இலக்கினை நிறைவேற்றும் வகையில் தேர்தல் பணிகளில் பணியமர்த்தப்படும் ஆசிரியர் மற்றும் அரசு அலுவலர்களுக்கு அஞ்சல் வாக்குச்சீட்டும், தேர்தல் பணிசான்றும் உடன் கிடைக்கப் பெறச்செய்து வாக்கு உரிமையை பாதுகாத்துத் தந்திட வேண்டுமாய் தமிழ்நாடு தலைமைத்தேர்தல் அலுவலரிடம் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது' என தெரிவித்துள்ளார்.