Skip to main content

விடாத கனமழை... அந்தரத்தில் தொங்கும் நீலகிரி!!

Published on 06/08/2020 | Edited on 06/08/2020
rain weather in nilgiris

 

 

நீலகிரி கரோனோ தாக்குதலில் இருந்து மீள முடியாமல் தத்தளித்து கொண்டிருக்கையில் தென்மேற்கு பருவமழை நீலகிரியை அந்தரத்தில் தொங்க வைத்து விட்டது. மேல் பவானியில் 308 மி.மீட்டரும், அவலாஞ்சியில் 220 மி. மீட்டரும் மழை பெய்துள்ளது. 

 

இந்த இரண்டு இடங்களும் காடுகள் எனச் சொல்லப்பட்டாலும் மக்கள் அதிகமாய் வசிக்கும் கூடலூரில் 201.மி.மீட்டர் மழை ஒரே நாளில் பெய்து மக்களை கரோனோவை விடவும் திணறடித்துவிட்டது. கூடலூரில் பெய்த மழையால் பாண்டியாறு, மாயாறு ஆறுகளில் வெள்ளம் பீறிட்டு ஓட, கூடலூரின் புரமணவயல் ஆதிவாசி கிராமம் வழியாகச் செல்லும் ஆற்று வாய்க்கால் கரை உடைந்தது.

 

கிராமத்திற்குள் புகும் வெள்ளத்தை கண்டு ஒரு பகுதியில் வசிக்கும் மக்கள் குழந்தைகளோடு பாதுகாப்பு இடங்களில் தங்கி விட்டனர். ஆனால் இன்னொரு பகுதியில் வசிக்கும் மக்கள் வெளியேற முடியாமல் முட்டுக் கட்டை போட்டுக் கொண்டே இருந்தது மழை. எனினும் தீயணைப்பு படை வீரர்கள் கயிறுகள் கட்டி பெண்கள், குழந்தைகளை உயிர்ச் சேதமின்றி மீட்டனர். மீட்கப்பட்ட 103 ஆதிவாசி மக்கள் அத்திப்பாளி அரசு பள்ளிக் கூடத்திலும், கூடலூர் தேன்வயல் ஆதிவாசி கிராமத்து மக்கள் 175 பேர் புத்தூர் வயல் அரசு பள்ளிக் கூடத்திலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

 

ஊட்டி, எமரால்டு பகுதியில் வீசிய காற்றும், மழையும் 20-க்கும் மேற்பட்ட மரங்களை சாய வைத்து இருளிலும் மக்களை சிக்கி தவிக்க வைத்துவிட்டன. மழை வெள்ளப் பாதிப்பு பகுதிகளை கலெக்டர் இன்னசென்ட் திவ்யா பார்வையிட்டுக் கொண்டிருக்கிறார்.

 

நீலகிரி தொகுதியின் எம்.பி.யான தி.மு.க.வின் ஆ.ராசா, கட்சியினரிடம், என்னால் உடனே அங்கே வராத சூழல் கரோனோ இருப்பதால் பொதுமக்கள் பாதிக்காதவாறு எல்லா ஏற்பாடுகளையும் செய்யுங்கள். அதற்கான செலவீனங்களை நான் செய்கிறேன் எனச் கூறியுள்ளாராம்.

 

அதன்படியே கட்சிக்காரர்களும் களம் கண்டு கொண்டிருக்கின்றனர். ஏற்கனவே 2009-ல் ஆ.ராசா எம்.பி.யாக நீலகிரியில் வெற்றி பெற்றபோது, இதை விடவும் நீலகிரியில் மழை பேயாய் பொழிந்து. கோத்தகிரி, குன்னூர் சாலைகள் இரண்டாய் பிளந்தன. வீடுகள் இடிந்து உயிர்கள் பலியாகின. ஆனால் உடனே ஆ.ராசா துரிதமாய் செயல்பட்டு சாலைகளை சரி செய்தார்.

 

இறந்த உயிர்களின் குடும்பத்தாருக்கு தேவையானவற்றை செய்து கொடுத்தார். அதேபோல இப்போதும் செய்து கொடுப்பார் என நாங்கள் உறுதியாய் நம்புகிறோம் என்கிறார்கள் இந்த பெருமழையால் பெரும் இன்னலுக்கு உள்ளாகி இருக்கும் கூடலூர் மக்கள். நேற்றிரவு வீசிய பலத்த காற்று மரமொன்றை சாய்த்து முதல் உயிர் சேதத்தை ஊட்டியில் ஏற்படுத்தி இருக்கிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அத்துமீறிய அதிமுக, பாஜக - காவல்துறை வழக்குப் பதிவு

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
 Violating AIADMK, BJP- Police case registered

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

நேற்று திமுக, அதிமுக, பாஜகவினர் வேட்புமனு தாக்கல் செய்ய வந்த இடங்களில் மோதிக்கொண்ட சம்பவங்கள் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தன. இந்நிலையில், நேற்று நீலகிரியில் அதிமுக வேட்பாளர்களும் பாஜக வேட்பாளர்களும் வேட்புமனு தாக்கலின் போது தேர்தல் நடத்தை வழி முறைகளை மீறியதாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

நீலகிரி மாவட்டத்தில் நேற்று பாஜக மற்றும் அதிமுக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்ய வந்திருந்தனர். அப்போது தேர்தல் நடைமுறையை மீறி பெருங்கூட்டத்துடன் வந்ததால், அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறைக்கும் கட்சியினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தேர்தல் நடத்தை வழிமுறைகளையும் மீறி பட்டாசு வெடித்தது; அனுமதிக்கப்பட்ட இடத்தை தவிர்த்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் புகுந்து கூச்சல் குழப்பம் ஏற்படுத்தியது; காவல்துறையினரைப் பணி செய்ய விடாமல் தடுத்து சாலை மறியலில் ஈடுபட்டது தொடர்பாக பாஜக மற்றும் அதிமுகவினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Next Story

பிரபல தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

Published on 19/03/2024 | Edited on 19/03/2024
Ooty famous private schools email incident

நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள இரு பிரபல சர்வதேசத் தனியார் பள்ளிகளுக்கு இ-மெயில் மூலம் இன்று (19.03.2024) மதியம் 02.30 மணியளவில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு பள்ளி நிர்வாகம் சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து மோப்ப நாய் உதவியுடன் 3 வெடிகுண்டு செயலிழப்பு போலீசார் சம்பந்தப்பட்ட பள்ளியில் தீவிர சோதனை மேற்கொண்டுள்ளனர்.

அதே சமயம் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபர்கள் குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த வெடிகுண்டு மிரட்டலைத் தொடர்ந்து பள்ளியில் இருந்து மாணவர்களைப் பெற்றோர்கள் அழைத்துச் சென்றனர். போலீசார் மேற்கொண்ட சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது வதந்தி என்பது தெரிய வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதனால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மத்தியிலும், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக சென்னையில் உள்ள அண்ணா நகர், பாரிமுனை, கோபாலபுரம், ராஜா அண்ணாமலைபுரம், ஜெ.ஜெ. நகர், திருமழிசை ஆகிய பகுதிகளில் செயல்பட்டு வரும் 13 தனியார் பள்ளிகளுக்கு கடந்த பிப்ரவரி மாதம் 8 ஆம் தேதி (08.02.2024) வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.