கடந்த ஒரு வார காலமாக தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் மழை பெய்து வருகிறது. அந்த வகையில் இன்று பல்வேறு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருப்பத்தூர், வேலூர், திருப்பூர், கோயம்புத்தூர், ஈரோடு, நீலகிரி, திருவள்ளூர், ராணிப்பேட்டை, தருமபுரி, சேலம், திருச்சி, தஞ்சாவூர், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர், மதுரை, தேனி மற்றும் திண்டுக்கல் ஆகிய 25 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக தென்மேற்கு பருவ மழை தீவிரமடைந்துள்ள நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் கோவை மாவட்டம் வால்பாறையில் 4.5 செ.மீ மழை பெய்துள்ளது. இதையடுத்து கனமழை காரணமாக வால்பாறை தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று (05.07.2023) விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.