
தமிழகத்தில் இன்று காலை 10 மணி வரை ஏழு மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிதமானது முதல் லேசான மழைக்கு வாய்ப்பு இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
வெளியான அறிவிப்பின்படி கோவை, தென்காசி, நீலகிரி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் நான்காம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட இரண்டு முதல் மூன்று டிகிரி செல்சியஸ் அதிகரிக்க கூடும் எனவும், அதிக வெப்பநிலையும் அதிக ஈரப்பதமும் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல வரும் ஜூன் எட்டாம் தேதி வரை தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் புதுவையில் காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது. சென்னையைப் பொறுத்தவரை இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில பகுதிகளில் லேசான மழை பொழியலாம். அதிகபட்சமாக சென்னையில் 39 டிகிரி செல்சியஸும் குறைந்தபட்சமாக 28 லிருந்து 29 டிகிரி செல்சியஸும் வெப்பநிலை இருக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.