Skip to main content

தண்டவாளத்தில் விரிசல்; பெரும் அசம்பாவிதத்தை தடுத்த பெண்ணுக்கு பாராட்டு

Published on 06/12/2022 | Edited on 06/12/2022

 

Rail crack near Panruti

 

விழுப்புரத்திலிருந்து மயிலாடுதுறை செல்லும் பயணிகள் ரயில் விழுப்புரத்தில் நேற்று காலை 6:15 மணிக்கு கிளம்பியது. சேர்ந்தனூர்க்கும் கடலூர் மாவட்டம் புதுப்பேட்டை அருகே திருத்துறையூருக்கும் இடையே சென்றபோது தண்டவாளத்தில் லேசான அதிர்வு ஏற்பட்டது. இதை உணர்ந்த ரயில் என்ஜின் டிரைவர் உடனடியாக அப்பாதையில் சீரான வேகத்தில் ரயிலை இயக்கினார். பின்னர் திருத்துறையூர் ரயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார்.

 

இதனிடையே கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த அக்கடவல்லி கிராமத்தைச் சேர்ந்த  தியாகராஜன் என்பவரது மனைவி, ரயில்வே ஒப்பந்த தொழிலாளியான மஞ்சு (வயது 22) என்பவர் நேற்று காலை இயற்கை உபாதைக்குச் சென்றபோது அக்கடவல்லி கிராமம் வழியாக செல்லும் விழுப்புரம் - மயிலாடுதுறை வழித்தடத்தில் தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டிருந்ததை பார்த்தார். அவரும் உடனடியாக ரயில்வே துறையினருக்கு தகவல் அளித்தார். அதனடிப்படையில் 7.15 மணிக்கு அக்கடவல்லியைக்  கடந்து செல்லும் திருச்செந்தூர் - சென்னை எழும்பூர் ரயில் திருத்துறையூர் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது. இதனால் விபத்தும், பெரும் சேதமும் தவிர்க்கப்பட்டது.

 

Rail crack near Panruti

 

அதனைத் தொடர்ந்து ரயில்வே பாதுகாப்பு போலீசார் அக்கடவல்லி கிராமத்திற்கு விரைந்து சென்று,  தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசல் குறித்து விசாரணை நடத்தினர். அதேசமயம்  திருச்செந்தூரிலிருந்து சென்னை எழும்பூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் அவ்வழியாக வந்து கொண்டிருந்தது. உடனே ரயில்வே அதிகாரிகள் திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் என்ஜின் டிரைவருக்கு தகவல் தெரிவித்ததன் பெயரில் திருத்துறையூருக்கும் பண்ருட்டிக்கும் இடையே 7.10.மணிக்கு அந்த ரயில் நிறுத்தப்பட்டது. 

 

ரயில்வே அதிகாரிகள் உடனடியாக மாற்று ஏற்பாடுகளை செய்தனர். தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசல் சரி செய்யும் பணி நடந்தது. சுமார் ஒரு மணி நேரத்திற்கு பிறகு அப்பணி முடிவடைந்தது. விரிசல் ஏற்பட்டிருந்த தண்டவாளப் பகுதியில் தற்காலிகமாக வெல்டிங் வைக்கப்பட்டு சரி செய்யப்பட்டது. சுமார் ஒரு மணி நேரம் சரி செய்யும் பணி நடைபெற்றது. அதன் பிறகு திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் அங்கிருந்து காலை 8.10 மணிக்கு புறப்பட்டு, குறைந்த வேகத்தில் இயக்கப்பட்டு காலை 8 மணிக்கு அக்கடவல்லி கிராமத்தை கடந்து சென்றது.

 

தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசல் காரணமாக விழுப்புரம் ரயில் நிலையத்தில் காலை 7:30 மணிக்கு வர வேண்டிய திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் ஒரு மணி நேரம் தாமதமாக 8.30 மணிக்கு வந்தடைந்தது. 

 

தொடர்ந்து சென்னையிலிருந்து திருச்சி செல்லும் ரயில், விழுப்புரத்திலிருந்து மாயவரம் செல்லும் ரயில் ஆகியவையும் குறைந்த வேகத்தில் இயக்கப்பட்டன. பின்னர் விரிசல் ஏற்பட்ட தண்டவாளத்தின் பாகம் அகற்றப்பட்டு புதிய தண்டவாளம் பொருத்தி இணைக்கும் பணிகள் தொடங்கியது. இந்த பணிகள் மதியம் 2.30 மணிக்கு நிறைவடைந்தது. இதன்பிறகு அந்த வழியாகச் செல்லும் அனைத்து ரயில்களும் வழக்கம் போல் இயக்கப்பட்டன.

 

தண்டவாளத்தில் விரிசல் இருந்ததை கவனித்து அதை உடனடியாக ரயில்வே துறைக்கு தகவல் அளித்த ஒப்பந்த தொழிலாளி மஞ்சுவை ரயில்வே அதிகாரிகளும் காவல்துறையினரும் பாராட்டினர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தேர்தல் விடுமுறை; நெரிசலால் உயிரைப் பணயம் வைக்கும் பயணிகள்!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
election holiday; Passengers risking their lives due to congestion

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தத் தேர்தலை முன்னிட்டு நாளை பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து சனி, ஞாயிறு விடுமுறை என்பதால் மொத்தம் மூன்று நாட்கள் விடுமுறை வருகிறது. இதன் காரணமாக சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு தேர்தல் விடுமுறைக்காக செல்வோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்நிலையில் சென்னை, தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்கு படையெடுக்கும் மக்கள், முன்பதிவு இல்லாத ரயில் பெட்டியில் அதிகப்படியாக பயணம் செய்து வருகின்றனர். சில ரயில்களில் ஆபத்தான வகையில் தொங்கியபடி பயணம் செய்யும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Next Story

ரயிலில் புகுந்த பாம்பு; இளைஞருக்கு நேர்ந்த சோகம்!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
A snake that entered the train; Tragedy befell the young man


கேரளாவில் ரயிலில் பயணித்துக் கொண்டிருந்த தமிழக இளைஞரைப் பாம்பு கடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கேரள மாநிலம் குருவாயூரிலிருந்து மதுரை செல்லும் குருவாயூர் எக்ஸ்பிரஸில் தென்காசியைச் சேர்ந்த கார்த்திக் சுப்பிரமணியம்(21) என்ற இளைஞர் பயணித்தார். ரயிலின் 7ஆம் நம்பர் கோச்சில் அவர் பயணித்துக் கொண்டிருந்தார். அப்போது, ரயில் எட்டுமானூர் என்ற பகுதியில் சென்று கொண்டிருந்த போது திடீரென கார்த்திக் சுப்பிரமணியம் தன்னை ஏதோ கடித்தது போல் உணர்ந்துள்ளார். உடனடியாக அந்தப் பகுதியைச் சோதனையிட்டு பார்த்ததில் அங்கு ஒரு நாகப்பாம்பு சுருண்டு கிடந்தது கண்டு அதிர்ந்துபோனார்.

தன்னை பாம்பு கடித்ததை உணர்ந்த கார்த்திக் மற்ற பயணிகளிடம் இதனைச் சொல்ல உடனடியாக ரயில் நிறுத்தப்பட்டு, கோட்டயம் மருத்துவமனைக்கு அவர் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு உடனடியாக அவசர சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும் அந்த ரயில் பெட்டிக்குள் எலிகள் அங்கும் இங்குமாக ஏராளமாக ஓடிக் கொண்டிருந்ததாக பயணிகள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக எலிகளை உணவாக சாப்பிட பாம்பு அங்கு வந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இது குறித்து ரயில்வே அதிகாரிகளுக்கு புகார் அளிக்கப்பட்ட நிலையில், கோட்டயம் ரயில் நிலையத்திலேயே அந்தப் பெட்டி மட்டும் தனியாக கழட்டப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளது. கேரளாவில் ரயிலில் பயணித்த தமிழக இளைஞரைப் பாம்பு கடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.