K.P. Raid on the company that built the park apartment!

சென்னை புளியந்தோப்பில் உள்ள கே.பி. பார்க் அருகே தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகள் தரமற்று இருந்தது தெரியவந்தது. மேலும்,தொட்டாலே உதிரும் வகையில் பூச்சு இருந்தது. இதுகுறித்து தகவலறிந்த அமைச்சர்கள், கட்டடத்தை நேரில் ஆய்வு செய்தனர். மேலும், குடியிருப்பில் வசிப்பவர்களிடம் குடியிருப்பின் தரம் தொடர்பாகக் கேட்டறிந்தனர்.

Advertisment

அதைத் தொடர்ந்து, இந்தக் கட்டடத்தின் தரத்தை ஆய்வுசெய்து அறிக்கை தாக்கல் செய்ய ஐ.ஐ.டி. குழுவினருக்கு அரசு உத்தரவிட்டிருந்தது. அதன்படி, கட்டடத்தை ஐ.ஐ.டி. குழுவைச் சேர்ந்த 10க்கும் மேற்பட்ட நிபுணர்கள் தொடர்ந்து ஆய்வு செய்துவந்தனர். அதையடுத்து, கடந்த 04/10/2021 அன்று நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மேலாண் இயக்குநர் கோவிந்தராவிடம் அறிக்கை தாக்கல் செய்தனர்.

441 பக்கங்களைக் கொண்ட ஆய்வறிக்கையில், கே.பி. பார்க் குடியிருப்பைக் கட்டிய கட்டுமான நிறுவனமான பி.எஸ்.டி. மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்பட்டது. மேலும், பி.எஸ்.டி. கட்டுமான நிறுவனத்தைத் தடைப் பட்டியலில் சேர்க்கப் பரிந்துரைக்கப்பட்டது. அரசு ஒப்பந்தங்களில் சம்மந்தப்பட்ட நிறுவனத்துக்கு இனி ஒப்பந்தங்கள் வழங்கக் கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக, ஏற்கனவே உதவிப் பொறியாளர் பாண்டியன், உதவி நிர்வாக பொறியாளர் அன்பழகன் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

Advertisment

இன்று (15.12.2021) முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு தொடர்புடைய நாமக்கல், ஈரோடு, சென்னை உட்பட தமிழ்நாடு முழுவதும் சுமார் 69 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரின்சோதனை நடைபெற்றுவருகிற நிலையில், கே.பி. பார்க் கட்டடத்தைக் கட்டிய சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பி.எஸ்.டி கட்டுமான நிறுவனம், மதுரவாயலில் உள்ள தருண் கட்டுமான நிறுவனம் ஆகிய இடங்களில்சோதனை நடைபெற்றுவருகிறது.