கரூர் அருகே கல்குவாரி உரிமை இல்லாமல் இயக்குவதாக புகார் அளித்த விவசாயியை வேன் ஏற்றி கொன்ற குவாரி உரிமையாளர் உள்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைப்பு.
கரூர் மாவட்டம் தென்னிலை அருகே தனியார் ப்ளூ மெட்டல்ஸ் மற்றும் கல்குவாரியை செல்வகுமார்(45) என்பவர் நடத்தி வந்தார். இந்நிலையில் கல்குவாரி செயல்படும் கால முடிந்தும் தொடர்ந்து சட்டத்திற்கு புறம்பாக செயல்படுவதாக கூறி அதே கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஜெகநாதன் மற்றும் சமூக ஆர்வலர்கள் கனிமவள துறையினரிடம் புகார் கொடுத்ததின் பேரில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கனிமவளத்துறை, அந்த கல்குவாரியை நடத்த அனுமதி மறுக்கப்பட்டது.
இந்நிலையில் நேற்று காருடையாம்பாளையம் அருகே விவசாயி ஜெகநாதன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது அந்த கல்குவாரியின் பொலிரோ வேன் ஜெகநாதன் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார், முன்னதாகவே 2019 ஆம் ஆண்டு ஜெகநாதன் மற்றும் செல்வகுமார் இடையே முன்விரோதம் இருந்ததாகவும் கூறப்பட்டு, அப்போது ஜெகநாதனே தாக்கியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில் உயிரிழந்த ஜெகநாதன் என்பவர் மீது மோதிய வாகனம் கொலையா?அல்லது விபத்தா என்பதை குறித்து க.பரமத்தி போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், அதில் திடீர் திருப்பம் ஏற்பட்டது, கொலை வழக்கு பதிவு செய்து கல்குவாரி உரிமையாளர் செல்வகுமார் மற்றும் ஓட்டுநர் சக்திவேல் இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இதில், ராணிப்பேட்டை சேர்ந்த கூலிப்படையை சேர்ந்த ரஞ்சித் என்பவரும் கொலைக்கு சம்பந்தப்பட்டுள்ளார் என விசாரணையில் தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து கிரஷர் கல்குவாரி உரிமையாளர் செல்வகுமார் பொலிரோ வாகனம் டிரைவர் சக்திவேல், ராணிப்பேட்டையில் இருந்து வரவழைக்கப்பட்ட கூலிப்படை ரஞ்சித் மூன்று நபர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.