தாம்பரம்-நெல்லை ரயிலில் நயினார் நாகேந்திரன் உதவியாளரிடமிருந்து நான்கு கோடிகள் கட்டுக்கட்டாகப் பிடிபட்டது தமிழ்நாட்டையே உலுக்கியுள்ளது.
ஆந்திர மாநிலம் கடப்பா மற்றும் சுற்றுவட்டாரங்களில் குவாரி வைத்திருக்கும் நயினார் நாகேந்திரன் பா.ஜ.க.வின் மாநில துணைத்தலைவர். மேலும் தமிழக பா.ஜ.க.வின் பொறுப்பாளரான முரளிதரராவ் மூலம், டெல்லித் தலைமையில் நல்ல தொடர்பிலிருக்கும் நயினார் நாகேந்திரன், ஆந்திரா, தமிழ்நாடு, கர்நாடகா, தர்மபுரி, கிருஷ்ணகிரி, தெலங்கானா போன்ற பகுதிகளில் குவாரிகள் வைத்திருக்கும் வெளிமாநில குவாரி அதிபர்களிடம் தொடர்பிலிருப்பவர்.
ஏற்கனவே குவாரிகள் வைத்திருக்கும் நயினார் நாகேந்திரன், குவாரித் தொழிலில் சிக்கல் என்று வருபவர்களுக்கு தன் டெல்லி தொடர்பு மூலம் உதவி வருவதால் பிரதி உபகாரமாக அவர்கள் நயினாருக்கு பலவகையிலும் உதவி வருபவர்களாம்.
கர்நாடாகாவில் குவாரிகளை வைத்திருக்கும் பிரபல ரெட்டி சகோதரர்கள் நயினாருக்கு மிகவும் நெருக்கமாம். இப்படி ஒரு அண்டர்ஸ்டாண்ட்டிங்கில் சிக்கல் இல்லாமல் குவாரி தொழில் ஓடுவதால் தற்போதைய தேர்தலில் மேற்படி மாநில குவாரி அதிபர்கள் பணவகையில் நயினார் நாகேந்திரனுக்கு லம்ப்பாக உதவி வருகிறார்களாம். ஏப். 6 அன்று கூட கிருஷ்ணகிரியைச் சேர்ந்த குவாரி அதிபர் ஒருவர் நெல்லை வந்து நயினார் நாகேந்திரனை சந்தித்துவிட்டுப் போயிருக்கிறாராம். பல்வேறு வழிகளில் நயினார் நாகேந்திரனுக்கு வைட்டமின் மினரல் வருவதால் அதற்கு பஞ்சமே இல்லையாம்.
தவிர, கடந்த சில தினங்களுக்கு முன்பு நெல்லையில் இரண்டு குறிப்பிட்ட இடங்களில் ஐ.டி. ரெய்டு நடத்தப்பட்டதற்கு நயினார் நாகேந்திரன் ஏவியதே காரணம் என்பதை அறிந்தவர்கள், அதற்குப் பழி தீர்க்கும் வகையில் சென்னை ரயிலில் 4 கோடி கிளம்பியது பற்றிய துல்லிய தகவல் கொடுக்க அது சிக்கியிருக்கிறது என்கிறார்கள்.