தொடர் மழையால் பிரம்மாண்ட சிவன் சிலை அமைந்துள்ள தடாகத்தின் சுற்றுச் சுவர் சாயும் நிலையில் உள்ளது.
‘புரெவி’ புயல் காரணமாக புதுக்கோட்டை, தஞ்சை உள்ளிட்ட மாவட்டங்களில் தொடர்ந்து சில நாட்களாக, கனமழை பெய்துவருகிறது. இதனால், குளம், ஏரிகளுக்கு ஓரளவு தண்ணீர் வந்துள்ளது. ஆனாலும், பல இடங்களில் தண்ணீர் செல்ல வழியின்றி, சாலைகள், தோட்டங்களில் ஆங்காங்கே மழைநீர் தேங்கியுள்ளது. கிராமங்களில் குடியிருப்புப் பகுதிகளில் தேங்கியிருந்த மழை நீர் அவசர அவசரமாகச் சீரமைக்கப்பட்டதால், பாதிப்புகளின்றி பாதுகாக்கப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலத்தில் சுமார் 1,000 ஆண்டுகள் பழமையான மெய்நின்றநாதர் சுவாமி கோவில் முன்பு, தலைமைப் புலவர் நக்கீரருக்கு ஏழரை அடி உயரத்தில் சிலையும், எதிரே உள்ள தடாகத்தில் 84 அடி உயரத்தில், பிரம்மாண்ட சிவன் சிலையும் அமைக்கப்பட்டு, தடாகத்தைச் சுற்றி நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. கோவிலுக்கு வரும் பக்தர்கள் நடைபாதை வழியாக சிவன் சிலையைச் சுற்றிப் பார்ப்பதுடன் மாலை நேரங்களில் நடைபாதை ஓரங்களில் அமர்ந்து செல்வதும் வழக்கம்.
அதேபோல், ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கானோர் நடைப் பயிற்சிக்காகவும் வந்து செல்கின்றனர். இந்த நிலையில், சில நாட்களாக பெய்யும் தொடர் மழையால், நடைபாதையில் தண்ணீர் இறங்கி, தடாகத்தின் சுற்றுச்சுவர் வழியாகத் தண்ணீர் சென்றதால், அரிப்பு ஏற்பட்டு, வடக்குப் பக்கம் உள்ள முழு சுவரும் சாய்ந்து நிற்கிறது. தொடர்ந்து மழை பெய்தால், சுவர் முற்றிலும் சாயும் நிலையில் உள்ளது. நடைபாதை மற்றும் தடாகத்தின் சுற்றுச்சுவர் சேதமடைந்துள்ளதால், பொதுமக்கள் உள்ளே செல்லத் தடைசெய்யப்பட்டுள்ளது.