ADVERTISEMENT

“அவர் குடும்பம் பாதிக்கப்படக் கூடாது” - கறார் காட்டிய அரசு; கருணை காட்டிய மாற்றுத்திறனாளி மாணவன்

11:42 AM Nov 17, 2022 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

அரசுப் பேருந்தில் கண் பார்வையில்லாத கல்லூரி மாணவரிடம் பயணக் கட்டணம் கேட்ட நடத்துநரிடம் அடையாள அட்டையைக் காட்டியும் மதிப்பில்லை. டிக்கெட் எடுக்கவில்லை என்றால் இறக்கி விடுவேன் என்று கறார் காட்டிய கொடுமை நடந்துள்ளது. பிறகு டிக்கெட் வாங்கி பயணம் செய்துள்ளார் அந்த மாற்றுத்திறனாளி மாணவர்.

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகில் உள்ள முக்கண்ணாமலைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த முகமது ரபீக் மகன் முகமது பாசில் (வயது 19). இவர் பார்வை மாற்றுத்திறனாளி. கண்பார்வையற்றோர் பள்ளிகளில் படிப்பை முடித்து, தற்போது புதுக்கோட்டை மாமன்னர் கல்லூரியில் பி.ஏ. இரண்டாமாண்டு படித்து வருகிறார்.

கண் பார்வை மாற்றுத்திறனாளி அடையாள அட்டை, பஸ் பாஸ் ஆகியவை வைத்திருந்தவர் சில மாதங்களுக்கு முன்பு பஸ் பாஸ் காணாமல் போனதால் புதிய பஸ் பாஸ்-க்கு விண்ணப்பித்தும் கிடைக்காத நிலையில் அடையாள அட்டையைப் பயன்படுத்தி பஸ்ஸில் பயணம் செய்ய அதிகாரிகள் கூறியுள்ளனர். எனவே மாற்றுத்திறனாளி அடையாள அட்டையைக் காண்பித்து கல்லூரிக்குச் சென்று வந்தார்.

அதேபோல நேற்று கல்லூரிக்குச் சென்ற மாணவர் பாசில், மதியம் ஒரு மணிக்கு வீட்டிற்குச் செல்வதற்காக புதுக்கோட்டையிலிருந்து அன்னவாசல் வழியாக மணப்பாறை செல்லும் அரசுப் பேருந்தில் ஏறியுள்ளார். அந்த பஸ்ஸின் நடத்துநர் வந்து டிக்கெட்டுக்குப் பணம் கேட்டபோது தனது அடையாள அட்டையைக் காட்டி பாஸ் என்று பாசில் கூறியுள்ளார். “பாஸ் கிடையாது, டிக்கெட் வாங்கினால் பயணம், இல்லையென்றால் இறக்கி விடுவேன்” என்று நடத்துநர் கூறியதாகக் கூறப்படுகிறது. அதனால் தன்னிடம் இருந்த பணத்தை எடுத்துக் கொடுத்து டிக்கெட் வாங்கிப் பயணம் செய்த மாணவர் பாசில் காலாடிப்பட்டி சத்திரத்தில் இறங்கியுள்ளார். பேருந்திலிருந்து இறங்கிய மாணவர் நடந்தவற்றை உறவினர்களிடம் கூறி கண் கலங்கியுள்ளார். பார்வை மாற்றுத்திறனாளியிடம் அடையாள அட்டை இருந்தும் டிக்கெட் வாங்கவில்லை என்றால் இறக்கிவிடுவேன் என்று மனிதாபிமானமில்லாமல் கறார் காட்டிய நடத்துநர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவரது பெற்றோர் தெரிவித்திருந்தனர். இந்தச் சம்பவத்தை நாம் நேற்று நக்கீரனில் வெளியிட்டோம். அதனைத் தொடர்ந்து இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க துவங்கியது.

பாசில்

இந்நிலையில், பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவர் பாசில், “அரசு பஸ் நடத்துநரால் நான் இன்று பாதிக்கப்பட்டேன். ஆனால், இதுபோல வேறு எந்த மாற்றுத்திறனாளியும் பாதிக்கப்படக் கூடாது. அதே நேரத்தில் நான் பாதிக்கப்பட்டதால் சம்மந்தப்பட்ட நடத்துநர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம். என்னால் அவரது குடும்பம் பாதிக்கப்படக் கூடாது. ஆகவே மாவட்ட நிர்வாகம் சம்மந்தப்பட்ட நடத்துநரிடம் இனிமேல் மாற்றுத்திறனாளிகளிடம் இப்படி கடுமையாக நடக்க வேண்டாம் என்பதை மட்டும் அறிவுரை கூறினால் போதுமானது” என்றார்.

தன்னிடம் கறாராக நடந்து கொண்ட நடத்துநர் மீது நடவடிக்கை வேண்டாம் என்பதை வலியுறுத்திய பார்வை மாற்றுத்திறனாளி மாணவரின் செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT