Skip to main content

“அவர் குடும்பம் பாதிக்கப்படக் கூடாது” - கறார் காட்டிய அரசு; கருணை காட்டிய மாற்றுத்திறனாளி மாணவன்

Published on 17/11/2022 | Edited on 17/11/2022

 

Puthukottai government bus conductor who trouble to disable person and person showing mercy

 

அரசுப் பேருந்தில் கண் பார்வையில்லாத கல்லூரி மாணவரிடம் பயணக் கட்டணம் கேட்ட நடத்துநரிடம் அடையாள அட்டையைக் காட்டியும் மதிப்பில்லை. டிக்கெட் எடுக்கவில்லை என்றால் இறக்கி விடுவேன் என்று கறார் காட்டிய கொடுமை நடந்துள்ளது. பிறகு டிக்கெட் வாங்கி பயணம் செய்துள்ளார் அந்த மாற்றுத்திறனாளி மாணவர்.

 

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகில் உள்ள முக்கண்ணாமலைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த முகமது ரபீக் மகன் முகமது பாசில் (வயது 19). இவர் பார்வை மாற்றுத்திறனாளி. கண்பார்வையற்றோர் பள்ளிகளில் படிப்பை முடித்து, தற்போது புதுக்கோட்டை மாமன்னர் கல்லூரியில் பி.ஏ. இரண்டாமாண்டு படித்து வருகிறார்.

 

கண் பார்வை மாற்றுத்திறனாளி அடையாள அட்டை, பஸ் பாஸ் ஆகியவை வைத்திருந்தவர் சில மாதங்களுக்கு முன்பு பஸ் பாஸ் காணாமல் போனதால் புதிய பஸ் பாஸ்-க்கு விண்ணப்பித்தும் கிடைக்காத நிலையில் அடையாள அட்டையைப் பயன்படுத்தி பஸ்ஸில் பயணம் செய்ய அதிகாரிகள் கூறியுள்ளனர். எனவே மாற்றுத்திறனாளி அடையாள அட்டையைக் காண்பித்து கல்லூரிக்குச் சென்று வந்தார்.

 

Puthukottai government bus conductor who trouble to disable person and person showing mercy

 

அதேபோல நேற்று கல்லூரிக்குச் சென்ற மாணவர் பாசில், மதியம் ஒரு மணிக்கு வீட்டிற்குச் செல்வதற்காக புதுக்கோட்டையிலிருந்து அன்னவாசல் வழியாக மணப்பாறை செல்லும் அரசுப் பேருந்தில் ஏறியுள்ளார். அந்த பஸ்ஸின் நடத்துநர் வந்து டிக்கெட்டுக்குப் பணம் கேட்டபோது தனது அடையாள அட்டையைக் காட்டி பாஸ் என்று பாசில் கூறியுள்ளார். “பாஸ் கிடையாது, டிக்கெட் வாங்கினால் பயணம், இல்லையென்றால் இறக்கி விடுவேன்” என்று நடத்துநர் கூறியதாகக் கூறப்படுகிறது. அதனால் தன்னிடம் இருந்த பணத்தை எடுத்துக் கொடுத்து டிக்கெட் வாங்கிப் பயணம் செய்த மாணவர் பாசில் காலாடிப்பட்டி சத்திரத்தில் இறங்கியுள்ளார். பேருந்திலிருந்து இறங்கிய மாணவர் நடந்தவற்றை உறவினர்களிடம் கூறி கண் கலங்கியுள்ளார். பார்வை மாற்றுத்திறனாளியிடம் அடையாள அட்டை இருந்தும் டிக்கெட் வாங்கவில்லை என்றால் இறக்கிவிடுவேன் என்று மனிதாபிமானமில்லாமல் கறார் காட்டிய நடத்துநர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவரது பெற்றோர் தெரிவித்திருந்தனர். இந்தச் சம்பவத்தை நாம் நேற்று நக்கீரனில் வெளியிட்டோம். அதனைத் தொடர்ந்து இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க துவங்கியது. 

 

Puthukottai government bus conductor who trouble to disable person and person showing mercy
பாசில்

 

இந்நிலையில், பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவர் பாசில், “அரசு பஸ் நடத்துநரால் நான் இன்று பாதிக்கப்பட்டேன். ஆனால், இதுபோல வேறு எந்த மாற்றுத்திறனாளியும் பாதிக்கப்படக் கூடாது. அதே நேரத்தில் நான் பாதிக்கப்பட்டதால் சம்மந்தப்பட்ட நடத்துநர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம். என்னால் அவரது குடும்பம் பாதிக்கப்படக் கூடாது. ஆகவே மாவட்ட நிர்வாகம் சம்மந்தப்பட்ட நடத்துநரிடம் இனிமேல் மாற்றுத்திறனாளிகளிடம் இப்படி கடுமையாக நடக்க வேண்டாம் என்பதை மட்டும் அறிவுரை கூறினால் போதுமானது” என்றார்.

 

தன்னிடம் கறாராக நடந்து கொண்ட நடத்துநர் மீது நடவடிக்கை வேண்டாம் என்பதை வலியுறுத்திய பார்வை மாற்றுத்திறனாளி மாணவரின் செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

குழந்தைகளின் உயிருக்கு ஆபத்து! - கவனம் கொடுக்குமா அரசு?

Published on 04/03/2024 | Edited on 04/03/2024
 Will the government pay attention? children's lives!

புதுக்கோட்டையில் இருந்து அறந்தாங்கி சாலையில் உள்ளது முத்துப்பட்டினம் என்கிற சின்னக் கிராமம். இங்குள்ள குழந்தைகள் வெகுதூரம் சென்று தொடக்கக் கல்வி கற்க வேண்டும் என்பதால் அதே ஊரில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. தற்போது இந்தப் பள்ளியில் 50க்கும் மேற்பட்ட விவசாய கூலித் தொழிலாளிகளின் குழந்தைகள் படித்து வருகின்றனர்.

இந்த பள்ளிக்கு 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட 2 வகுப்பறைக் கட்டடம் மற்றும் ஒரு வகுப்பறை கட்டடம் உள்ளது. இதில் 2 வகுப்பறைக் கட்டடத்தின் மேற்கூரை காங்கிரீட், சிமெண்ட் பூச்சுகள் கடந்த சில வருடங்களாகவே உடைந்து கொட்டிக் கொண்டிருக்கிறது. இதனால் குழந்தைகளை அந்த வகுப்பறைகளில் வைக்க அச்சப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் ஆசிரியர்கள்.

உள்பக்கத்தின் மேல் சிமெண்ட் பூச்சுகள் உடைந்து கொட்டி துருப்பிடித்த கம்பிகளும் தொங்கிக் கொண்டிருக்கிறது. மாணவர்கள் இருக்கும் போது கொட்டாமல் இரவில் கொட்டுவதால் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் இதுவரை பாதிப்பு இல்லை. இந்தக் கட்டடத்தை இடித்துவிட்டு வேறு கட்டடம் கட்ட வேண்டும் என்று பெற்றோர்கள் தொடர்ந்து வைக்கும் கோரிக்கை ஏனோ அதிகாரிகள் கவனம் பெறவில்லை. 

அதிகாரிகளின் அலட்சியத்தால் தினம் தினம் திக் திக் மனநிலையில் மாணவர்களும் பெற்றோர்களும் உள்ளனர். தலைக்கு மேலே ஆபத்து இருக்கும் போது எப்படி நிம்மதியாக படிக்க முடியும் மாணவர்களால். கவனம் எல்லாம் இடிந்து கொட்டும் மேற்கூரை மேலே தானே இருக்கும். பெற்றோர்களும் கூட கூலி வேலைக்குச் சென்ற இடத்திலும் பள்ளியில் தங்கள் குழந்தைகளின் நிலை பற்றியே சிந்தித்துக் கொண்டிருப்பார்கள்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் எத்தனையோ அரசுப் பள்ளிகளை அரசு நிதியை எதிர்பார்க்காமல் அந்தந்த ஊர் முன்னாள் மாணவர்கள், பெற்றோர்கள் தங்கள் சொந்தச் செலவில் மாணவர்களின் நலனுக்காக கட்டடம், திறன் வகுப்பறைகள் அடிப்படை வசதிகளை செய்து கொடுத்து பெருமைப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

மாணவர்களின் உயிர் காக்க அரசோ அல்லது தன்னார்வலர்களோ உடனே ஒரு இரண்டு வகுப்பறைக் கட்டடம் கட்டிக் கொடுக்க முன்வந்தால் நன்றாக இருக்கும் என்கிறார்கள் அந்த கிராம மக்கள். 

Next Story

ஒரு ரோட்டுக்கு 2 டெண்டர்கள்! அதிகாரிகளின் அலட்சியத்தால் வீணாகும் மக்கள் வரிப்பணம்!

Published on 05/02/2024 | Edited on 05/02/2024
2 tenders per road! People's tax money is wasted due to negligence of officials!

ஒரு ரோடு போட ரூ.1 கோடி நிதி ஒதுக்கி அமைச்சர் பூமி பூஜை போட்ட பிறகு அதே ரோட்டில் ரூ.5 லட்சத்திற்கு சிமென்ட் சாலைப் பணிக்கு நிதி ஒதுக்கி பணிகள் தொடங்கியுள்ள அவலம் நடந்து வருகிறது.

புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியம் கீரமங்கலம் - பட்டுக்கோட்டை - அறந்தாங்கி சாலையில் இருந்து கீரமங்கலம், செரியலூர் இனாம், செரியலூர் ஜெமின், வேம்பங்குடி மேற்கு ஊராட்சி வரை சென்று கீரமங்கலம் - பேராவூரணி சாலையில் இணையும் சுமார் 3 கி.மீ இணைப்பு கிராமச் சாலை உள்ளது. இந்தச் சாலையை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கிராம மேம்பாட்டுச் சாலை (ஆர்.ஆர்) திட்டத்தில் இணைத்து நெடுஞ்சாலைத்துறையிடம் ஒப்படைத்து திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டது. அதன்பிறகு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ரூ.1 கோடிக்கு மேல் நிதி ஒதுக்கீடு செய்து டெண்டர் விடப்பட்டு கடந்த சில மாதங்களுக்கு முன்பு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதனை அழைத்து வந்து சாலைப் பணிக்கான அடிக்கல் நாட்டு விழாவை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடத்தினர். மழைக்காலம் என்பதால் சாலைப் பணி தாமதம் செய்யப்பட்டிருந்தது. இன்னும் சில நாட்களில் பணிகள் தொடங்க உள்ளது.

இந்த நிலையில் தான் அறந்தாங்கி ஒன்றியத்தில் உள்ள வேம்பங்குடி கிழக்கு ஊராட்சியில் பேராவூரணி சாலையில் (ஆர்.ஆர்.க்கு ஒப்படைக்கப்பட்ட சாலை) இருந்து சுமார் 200 மீட்டர் நீலத்திற்கு சிமெண்ட் சாலை அமைப்பதற்கான முதல்கட்டப் பணிகள் தொடங்கி நடந்து வருகிறது. இந்த சாலையில் தான் ஆர்.ஆர். சாலையும் வரப்போகிறது. அதாவது தற்போது அவசர கதியில் போடப்படும் சிமெண்ட் சாலையில் இன்னும் சில நாளில் ஆர்.ஆர். சாலைப் பணிக்காக உடைத்துவிட்டு தார்ச்சாலை போடப் போகிறார்கள். இதனால் மக்கள் வரிப்பணம் ரூ.5 லட்சம் வீணாகப் போகிறது.

2 tenders per road! People's tax money is wasted due to negligence of officials!

ஒரு சாலை நெடுஞ்சாலைக்கு ஒப்படைத்து அந்த சாலை பணிக்காக ஒப்பந்தம் விடப்பட்ட பிறகு ஊராட்சி ஒன்றியம் எப்படி சிமெண்ட் சாலைக்கு நிதி ஒதுக்கி டெண்டர் விட்டது? இப்போது போடப்படும் சிமென்ட் சாலையை தார்ச்சாலை போட வருபவர்கள் உடைத்துவிடுவார்களே என்று அறந்தாங்கி ஒன்றிய அதிகாரிகளிடம் கேட்டால், வேம்பங்குடி கிழக்கு ஊராட்சியில் யூனியனில் இருந்து எந்த வேலையும் நடக்கலயே என்று சொன்ன ஒன்றிய அதிகாரிகள் சிறிது நேரத்திற்கு பிறகு அது அண்ணா மறுமலர்ச்சித் திட்டப் பணியாம் என்றனர். எந்தப் பணியானாலும் அதே சாலைக்கு மற்றொரு டெண்டர் விடப்பட்ட பிறகு அதில் சிமெண்ட் ரோடு வேலை செய்தால் அந்தப் பணம் வீணாகாதா? என்ற நமது கேள்விக்கு ஒன்றிய அதிகாரிகளிடம் இருந்து பதில் இல்லை.

தொடர்ந்து நெடுஞ்சாலைத்துறை ஆர்.ஆர் திட்டப் பொறியாளர் கவனத்திற்கு கொண்டு சென்ற போது, எங்களிடம் ஒப்படைத்த சாலையில் வேறு யாரும் பணி செய்யக் கூடாது. ஒன்றிய நிதியில் வேலை நடப்பது பற்றி தகவல் கிடைத்ததும் மாவட்ட திட்ட அலுவலர் கவனத்திற்கு கடிதம் அனுப்பிவிட்டோம். இனிமேல் அவர்கள் வேலை செய்யமாட்டார்கள். எங்கள் டெண்டர் படி முழுமையாகத் தான் தார்ச்சாலை போடுவோம் என்றார். ஆனால் இன்று வரை தற்காலிக சிமென்ட் சாலைக்கான பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது.

இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறும் போது, ரொம்ப வருசமா குண்டும் குழியுமா கிடந்த ரோட்டுக்கு இப்ப ஆர்.ஆர்.ல நிதி ஒதுக்கின பிறகு பஞ்சாயத்தில் இருந்து சிமென்ட் ரோடு போடுறாங்க. இவங்க போட்ட ரோட்டை நெடுஞ்சாலைத்துறையினர் இன்னும் சில நாளில் உடைச்சுட்டு தார் ரோடு போடப் போறாங்க. கேட்டா மரம் நிக்கிது தார் ரோடு உடைஞ்சிடும்ன்னு சொல்றாங்க. ஆனா ஆர்.ஆர். ரோட்டுக்காரங்க எங்களுக்கு ஒதுக்குன அளவு ரோடு போடுவோம்னு சொல்றாங்க. இதனால ஒரு ரோடு போட்டு பில் எடுத்ததும் ஒரு வாரத்தில் உடைக்கப் போறாங்க. மக்கள் வரிப்பணத்தை இந்த அதிகாரிகள் எப்படி வீணடிக்கிறாங்கன்னு பாருங்க. சிமென்ட் ரோட்டை வேறு ஒரு தெருவில் கூட போடலாம் என்கின்றனர்.

இதே போல தான் கறம்பக்குடி ஒன்றியத்தில் கருக்காகுறிச்சி தெற்கு தெருவில் ஒரு தனி நபரின் பட்டா இடத்தில் சுமார் 50 மீ பேவர் பிளாக் ரோடு போட வந்த போது நிலஉரிமையாளர் தடுத்து யாருக்குமே பயன்படாமல் என் நிலத்தில் போட வேண்டாம் என்று சொன்ன போது இன்று ரோடு போடுறோம் ஒரு வாரத்தில் பில் எடுத்ததும் நீங்க ரோட்டை உடைச்சுட்டு விவசாயம் பண்ணுங்கனு சொல்லி இருக்கிறார்கள். அதாவது அரசு பணத்தை பில் போட்டு எடுக்கத்தான் டெண்டர்கள் கொடுக்கிறார்களா அதிகாரிகள்? என்ற கேள்வி சில சம்பவங்களில் இருந்து எழுந்துள்ளது.