Skip to main content

காவல் நிலையத்திலிருந்து காணாமல் போகும் மாட்டு வண்டிகள்! திருடனை பிடித்தும் நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள்! 

Published on 30/06/2022 | Edited on 30/06/2022

 

Puthukottai Alangudi police station issue
காவல்நிலையத்தில் இருக்கும் மாட்டு வண்டி

 

விபத்து, திருட்டு மணல், மண், கடத்தல் வாகனங்களை பறிமுதல் செய்து வழக்கு முடியும் வரை காவல் நிலையங்களில் நிறுத்தி பாதுகாப்பது வழக்கம். இப்படி பறிமுதல் செய்யப்படும் மோட்டார் வாகனங்களில் இருந்து பேட்டரி, டயர்கள், சிடி பிளேயர்கள் திருட்டு அதிகமாகவே இருக்கிறது. இதனால் வழக்கு முடிந்து வாகனங்களை எடுக்க வரும் வாகன உரிமையாளர்கள் கண்ணீரோடு செல்லும் நிலை இன்று வரை தொடர்கிறது. ஆனால் புதுக்கோட்டை மாவட்டத்தில் பறிமுதல் செய்யப்படும் வாகனங்களே காணாமல் போவது தான் பேரதிர்ச்சி.

 

ஆலங்குடி டி.எஸ்.பி சரகத்திற்குட்பட்ட வடகாடு காவல் நிலையத்தில் பல வருடங்களாக பறிமுதல் செய்யப்பட்ட நூற்றுக்கணக்கான மாட்டு வண்டிகள், மோட்டார் சைக்கிள்கள் கிடக்கின்றன. இதில் கடந்த 21ம் தேதி நள்ளிரவு 1.50 மணிக்கு காவல் நிலைய வாசலில் கண்காணிப்பு கேமராவுக்கு முன்பு நிறுத்தப்பட்டிருந்த ஒரு மாட்டு வண்டியை பக்கத்து கிராமமான கொத்தமங்கலத்தைச் சேர்ந்த பச்சை துண்டு போட்ட ஒரு நபர் தனது மோட்டார் சைக்கிளில் கட்டி இழுத்துச் சென்றுள்ளார்.

 

காவல் நிலைய வாசலில் நின்ற மாட்டு வண்டி காணாமல் போனதுகூட தெரியாதது போல மொத்த போலீசாரும் மௌனம் காத்த நிலையில், 22ம் தேதி நாம் மாட்டு வண்டி பைக்கில் கட்டி இழுத்துச் சென்ற தகவலை வாட்ஸ் அப் பதிவு மூலம் மாவட்டக் காவல் உயர் அதிகாரிகள் வரை கொண்டு சென்றும்கூட மாலை வரை திருடுபோன மாட்டு வண்டியை கண்டுபிடிக்க முடியவில்லை. 

 

Puthukottai Alangudi police station issue
பெயிண்ட் அகற்றப்பட்டு தோப்பில் நின்ற மாட்டு வண்டி

 

இந்த நிலையில் மாட்டு வண்டி திருடனும் காவல் நிலையத்திற்கே வந்து போலீசாரிடம் பேசிவிட்டு சென்றார். மாலையில் மாட்டு வண்டி மறைத்து வைக்கப்பட்டிருந்த இடத்தை படத்துடன் மீண்டும் வாட்ஸ் அப் மூலம் காவல் துறைக்கு தெரியப்படுத்திய பிறகு, இரவு 9 மணிக்கு பிறகு ஆலங்குடி டி.எஸ்.பி சென்று காவல் நிலைய வாசலில் மாயமாகி, தென்னந்தோப்பில் நின்ற வண்டியை இழுத்து வந்தார். அத்தோடு நடவடிக்கை முடிந்தது. 


காவல் நிலைய வாசலில் நின்ற மாட்டு வண்டியை திருடிச் சென்றது குறித்து எந்த வழக்கும் இதுவரை பதிவாகவில்லை. இது குறித்து மேலும் விபரமறிந்த சிலர் கூறும் போது, “மாட்டு வண்டியை சம்பந்தப்பட்ட நபர் திருடிச் செல்லவில்லை. மணல் கடத்தலில் சிக்கியிருக்கும் மாட்டு வண்டிகளை மாதம் 2, 3 வண்டிகளை காவல் நிலையத்திலிருந்து சிலர் குறைந்த விலைக்கு விற்று அந்த நபர் இரவில் இழுத்துச் செல்கிறார். காவல் அதிகாரிக்கு பல நாள் கார் ஓட்டுவதும் இந்த நபர் தான். அதனால் தான் எந்த நடவடிக்கையும் இல்லை. துரிதமாக விசாரணை செய்தால் இதுவரை விற்கப்பட்ட வண்டிகள் எத்தனை யார் விற்பது என்பது தெரியவரும். காவல் துறையினரே சிக்குவார்கள் என்பதால் தான் நடவடிக்கை இல்லை.


காவல் நிலையத்திலிருந்து திருடிச் செல்லும் வண்டிகளுக்கு பழைய பெயிண்டை தேய்த்து அகற்றிவிட்டு புது பெயிண்ட் அடிச்சு ரூ.10 ஆயிரம் வரை விற்கிறார்கள். போனவாரம் திருடப்பட்ட வண்டியிலும் கூட வண்டியில் எழுதியிருந்த பெயர்கள், அதில் இருந்த ஒரு கட்சியினுடைய சின்னம் அழிக்கப்பட்டிருந்தது என்கிறார்கள். காவல் நிலையத்திலேயே திருட்டு நடப்பதை கூட கண்டு கொள்ளாத போலீசார் எப்படி பொதுமக்களின் பாதிப்புகளுக்கு நடவடிக்கை எடுப்பார்கள் என்ற கேள்வி பொதுமக்களிடம் எழுந்துள்ளது. காவல்துறை உயர் அதிகாரிகள் தலையிட்டு நடவடிக்கை எடுத்தால் தான் உண்டு. இப்ப மற்ற வண்டிகள் திருடு போகாமல் இருக்க டயர்களில் காற்றை பிடிங்கி இருக்கிறார்கள்.

 

இதுகுறித்து காவல்துறையினரிடம் கேட்டபோது, ‘இதுதொடர்பாக விசாரணை நடத்திவருகிறோம். நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று தெரிவித்தனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

இளைஞனால் பெரியம்மாவிற்கு நேர்ந்த கொடூரம்; திருவள்ளூரில் பரபரப்பு

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
 young man who stabbed Periyamma to passed away

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அருகே உள்ளது கனகவல்லிபுரம். இந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர் குமார். இவர் மின்வாரியத்தில் வேலை பார்த்து ஓய்வு பெற்றுள்ளார். இவரின் மனைவி சரஸ்வதி. இவருக்கு 55 வயது ஆகிறது. இந்தத் தம்பதியருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். அவர்களுக்கு திருமணமாகி வெளியூரில் வசித்து வருகின்றனர். இதன் காரணமாக பொன்னேரியில் உள்ள வீட்டில் குமார் மற்றும் சரஸ்வதி இருவரும் தனியாக வசித்து வந்துள்ளனர். அவ்வப்போது மகள்கள் பொன்னேரிக்கு சென்று பெற்றோர்களை பார்த்து வந்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு, குமார் வீட்டிற்கு தேவையான பொருள்கள் வாங்க, பொன்னேரி கடைத்தெருவிற்கு சென்றுள்ளார். அவரின் மனைவி சரஸ்வதி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். கடைக்கு சென்றவர், பொருள்களை வாங்கிவிட்டு வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது வீட்டின் கதவு திறந்திருந்தபடி கிடந்துள்ளது. இதனால் அதிர்ச்சியான குமார், சற்று வேகமாக வீட்டின் உள்ளே நுழைந்து பார்த்துள்ளார். 

அப்போது அவரது மனைவி சரஸ்வதி, வீட்டுக்குள் ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார். இதனைப் பார்த்ததும் குமார் அதிர்ச்சியில் கதறி அழுதுள்ளார். குமாரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்துள்ளனர். அப்போது குமாரின் வீட்டுக்குள் சென்று பார்க்கும் போது சரஸ்வதி ரத்த வெள்ளத்தில் கிடப்பதைப் பார்த்து அவர்களும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

பின்னர், அங்கிருந்த சிலர் சரஸ்வதியைத் தூக்கி முதலுதவி செய்ய முற்பட்டுள்ளனர். அப்போதுதான் தெரிந்துள்ளது சரஸ்வதி இறந்துவிட்டார் என்று. இதனைக் கேட்டதும் குமார் கதறி அழுதுள்ளார். இதனையடுத்து, அங்கிருந்த சிலர் இது குறித்து பொன்னேரி காவல் நிலைய போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்த சரஸ்வதியின் உடல் மற்றும் அவரின் வீட்டில் இருந்த தடயங்களை சேகரித்துள்ளனர். அப்போது சரஸ்வதியின் கழுத்தில் அணிந்திருந்த தாலி சங்கிலி மாயமாகி இருந்தது தெரியவந்துள்ளது. அதன் பின்னர், அவரின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இதனையடுத்து இந்தக் கொலை தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும், சரஸ்வதியின் கழுத்தில் அணிந்திருந்த சங்கிலி மாயமாகி இருந்த காரணத்தால் இந்தக் கொலை, சங்கிலிக்காக நடந்திருக்கலாம்.... என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை முடுக்கியுள்ளனர். இதற்காக, குமார் உட்பட அவரின் உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் என அனைவரிடமும் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இது குறித்து குமாரிடம் விசாரணை செய்த போது, தனக்கு இந்தப் பகுதியில் சொத்து தொடர்பாகவோ அல்லது வேறு விஷயங்கள் தொடர்பாக எதிரிகள் யாருமே இல்லை எனக் கூறியிருக்கிறார். இதனையடுத்து, குமாரின் வீட்டிற்கு யாரேனும் வந்து சென்றார்களா?... என அந்தப் பகுதியில் உள்ள சிலரிடம் விசாரித்துள்ளனர். அப்போது சம்பவத்தன்று சரஸ்வதியின் சகோதரி மகனான அசோக்குமார் வந்து சென்றதாக சிலர் கூறியுள்ளனர். உடனே அசோக்குமாரை பிடித்து விசாரித்துள்ளனர். முதலில் இது குறித்து தனக்கு எதுவும் தெரியாது எனக் கூறிய அசோக்குமார், பின்னர் போலீசாரிடம் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறியிருக்கிறார். இதனால், மேலும் சந்தேகமடைந்த போலீசார் அவரை காவல் நிலையம் கொண்டு சென்று விசாரித்துள்ளனர்.

விசாரணையில், அவசர தேவைக்கு பணம் தேவைப்பட்டதால் தனது பெரியம்மாவான சரஸ்வதிடம் சென்று கேட்டதாகவும், அவர் அப்போது பணம் கொடுக்க மறுத்த காரணத்தால், இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதும் தெரியவந்துள்ளது. வாக்கு வாதத்தின் போது திடீரென ஆத்திரமடைந்த அசோக்குமார், வீட்டில் இருந்த கத்தியைக் கொண்டு சரஸ்வதியை சரமாரியாக குத்தியதும், பின்னர் அவரின் கழுத்தில் இருந்த சங்கிலியை பறித்துச் சென்றதும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து அசோக்குமாரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்தச் சம்பவம் பொன்னேரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

எல்.முருகன் மீது வழக்குப் பதிவு

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Case registered against L. Murugan

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

அரசியல் கட்சிகள் தீவிரமான தேர்தல் பரப்புரையில் இறங்கிய நிலையில், மறுபுறம் தேர்தல் பறக்கும் படையினர் பல்வேறு இடங்களில் அதிரடி சோதனைகளில் இறங்கியுள்ளனர். இந்நிலையில், தேர்தல் நடத்தை வழிமுறைகளை மீறியதாக நீலகிரி பாஜக வேட்பாளர் எல்.முருகன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 25 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய வந்த மத்திய இணை அமைச்சரும் நீலகிரி நாடாளுமன்றத் தொகுதி பாஜக வேட்பாளருமான எல்.முருகன் பல்வேறு கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்தியதுடன் உதகை அருகே உள்ள கிராமம் ஒன்றுக்குச் சென்று எந்த அனுமதியும் பெறாமல் 100க்கும் மேற்பட்டோர் ஆலோசனையில் ஈடுபட்டதாக கூறப்பட்டது. இதுகுறித்து தேர்தல் பறக்கும் படையின் தலைவராக உள்ள துணை வட்டாட்சியர் தனலட்சுமி தேனாடுகம்பை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் தேர்தல் நடத்தைகளை மீறியதாக எல்.முருகன் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.