தேவேந்திர குல வேளாளர் என அரசாணை வெளியிட வலியுறுத்தி திருவாரூர் மாவட்டத்தில் புதிய தமிழகம் கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தேவேந்திரகுல வேளாளர் பிரிவில் உள்ள ஏழு உட்பிரிவுகளையும் ஒருங்கிணைத்து, அனைவரையும் தேவேந்திர குல வேளாளர் என அரசாணை அறிவிக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் 10 ஆயிரம் கிராமங்களில் உண்ணாவிரத போராட்டம் நடத்த முடிவு செய்திருந்தனர். இந்தநிலையில் அந்த போராட்டத்திற்கு காவல்துறையினர் அனுமதி மறுத்ததால், ஆத்திரமடைந்தவர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் கீழபாலத்தில் கூடிய புதிய தமிழகம் கட்சியினர் மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து கண்டன முழக்கங்களை எழுப்பினர். பிறகு, திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். போராட்டத்தில் "தேவேந்திர குல வேளாளர் அரசாணை வழங்கபடும் என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் வாக்குறுதி கொடுத்துவிட்டு இதுவரையிலும் அரசாணை வழங்கவில்லை. வரும் சட்டமன்ற தேர்தலில் தேவேந்திரகுல வேளாளர் வாக்குகள் அ.தி.மு.கவிற்கு கிடைக்காது என எச்சரிக்கை விடுத்து முழக்கமிட்டனர். கோரிக்கை நிறைவேறாவிட்டால் அ.தி.மு.க. அரசுக்கு எதிராக தொடர்ந்து போராட்டத்தை முன்னெடுத்து தீவிரப்படுத்துவோம்" என்று தெரிவித்தனர்.
இப்போராட்டத்தால் மன்னார்குடியிலிருந்து திருச்சி, வேதாரண்யம், நாகப்பட்டினம், திருவாரூர் செல்லும் சாலையில் சில மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.