Skip to main content

பியூஷ் மானுஷ் நிபந்தனை ஜாமினில் விடுதலை!; மன்சூர் அலிகானுக்கு ஜாமின் மறுப்பு

Published on 23/06/2018 | Edited on 23/06/2018
mansour


எட்டு வழிச்சாலை மற்றும் சேலம் விமான நிலையம் விரிவாக்கத்திற்கு எதிராக மக்களை தூண்டிவிட்டதாக கைது செய்யப்பட்ட சூழலியல் ஆர்வலர் பியூஷ் மானுஷ், நிபந்தனை ஜாமினில் இன்று (ஜூன் 22, 2018) விடுதலை செய்யப்பட்டார்.

 

சேலம் - சென்னை இடையே புதிதாக பசுமை வழிச்சாலை என்ற பெயரில் எட்டு வ-ழிச்சாலைத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டத்திற்காக சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களில் 2343 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. வனப்பகுதிகளில் 100 ஹெக்டேர் நிலமும் கையகப்படுத்தப்பட இருக்கிறது.

 

இது தவிர, காமலாபுரம் விமான நிலையம் விரிவாக்கத்திற்காக 570 ஏக்கர் விவசாய நிலம் ஆர்ஜிதம் செய்யப்படுவதற்கான பணிகள் நடந்து வருகிறது. இவ்விரு திட்டங்களால் விளை நிலங்கள் அழிக்கப்படுவதோடு, லட்சக்கணக்கான மரங்களும் அழிக்கப்படும் அபாயம் உள்ளதாக சூழலியல் ஆர்வலர் பியூஷ் மானுஷ் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தார்.

 

நடிகர் மன்சூர் அலிகானை கடந்த மே 3ம் தேதியன்று சேலத்திற்கு அழைத்து வந்த அவர், எட்டு வழிச்சாலைத் திட்டம், விமான நிலையம் விரிவாக்கம் ஆகிய திட்டங்களுக்கு எதிராக மக்களிடம் பரப்புரை செய்ய வைத்தார். அப்போது பேசிய நடிகர் மன்சூர் அலிகான், ''எட்டு வழிச்சாலைக்காக எட்டு பேரை கொன்று விட்டு ஜெயிலுக்குப் போகவும் தயாராக இருக்கிறேன்,'' என்று ஆவேசமாக பேசினார்.

 

இதையடுத்து கடந்த 17ம் தேதி காலை சென்னை அரும்பாக்கத்தில் வசிக்கும் மன்சூர் அலிகானை சேலம் தீவட்டிப்பட்டி போலீசார் கைது செய்தனர். கலகம் விளைவித்தல், பொது ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல், கொலை மிரட்டல், 7 (1) சிஎல்ஏ ஆக்ட் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 

 

இந்த வழக்கில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டு இருந்த பியூஷ் மானுஷை, கடந்த 18ம் தேதி இரவு ஓமலூர் அருகே வைத்து போலீசார் கைது செய்தனர்.

 

கைதான இருவரும் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களுக்கு ஜாமின் கேட்டு ஓமலூர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. ஜாமின் மனுக்கள் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்போது மன்சூர் அலிகானின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்வதாக நீதிபதி ரமேஷ் அறிவித்தார்.

 

மேலும், பியூஷ் மானுஷை நிபந்தனை ஜாமினில் விடுதலை செய்வதாக தீர்ப்பு அளித்தார். தினமும் காலையில் ஓமலூர் நீதிமன்றத்தில் பியூஷ் மானுஷ் கையெழுத்திட வேண்டும் என்றும் நிபந்தனை விதித்தார். 

 

இதைத் தொடர்ந்து இன்று இரவு 7 மணியளவில் சேலம் மத்திய சிறையில் இருந்து பியூஷ் மானுஷ் விடுதலை ஆகி வெளியே வந்தார். அவருடைய மனைவி, பெற்றோர் அவரை வரவேற்று அழைத்துச் சென்றனர். 

 

அப்போது பியூஷ் மானுஷ் செய்தியாளர்களிடம் கூறுகையில், ''பொதுமக்கள் வன்முறையில் ஈடுபடக்கூடாது என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். நாங்கள் வன்முறையை விரும்பவில்லை. மக்களை எந்த வகையிலும் வன்முறையில் ஈடுபட தூண்டும் வகையில் ஒருபோதும் செயல்படவில்லை. 

விமான நிலையம் விரிவாக்கம், எட்டு வழிச்சாலை அமையும் பகுதி மக்கள் பயந்து போய் உள்ளனர். பொதுமக்களுக்காக குரல் கொடுப்பவர்களை கைது செய்வது தவறான நடவடிக்கை ஆகும். அரசிடம் விளக்கம் கேட்பவர்களை அரசு அச்சுறுத்தி வருகிறது. மரங்கள் அழிக்கப்படுவதை தடுக்க நீதிமன்றத்தை நாடுவேன்,'' என்றார்.
 

சார்ந்த செய்திகள்

Next Story

'உயர்வாகத்தான் பேசினேன்'-நடிகர் மன்சூர் அலிகான் விளக்கம்  

Published on 19/11/2023 | Edited on 19/11/2023

 

actor Mansoor Ali Khan explains

 

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், லலித் தயாரிப்பில், விஜய், த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், கௌதம் மேனன் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 19 ஆம் தேதி வெளியான படம் லியோ. பல்வேறு சர்ச்சைகளைத் தாண்டி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும், வசூல் ரீதியாக பெரும் சாதனை படைத்து வருகிறது.

 

இதனிடையே, இப்படத்தில் நடித்த நடிகர் மன்சூர் அலிகான் சமீபத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய போது, நடிகை திரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார். இது சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

 

இதற்கு நடிகை திரிஷா, மன்சூர் அலிகானுக்கு தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் கூறியதாவது, “சமீபத்தில் மன்சூர் அலிகான் என்னை பற்றி கேவலமாக பேசிய ஒரு வீடியோ எனது கவனத்திற்கு வந்தது. இதை நான் கடுமையாகக் கண்டிக்கிறேன். மேலும், இது பாலியல் அவமரியாதை, பெண்வெறுப்பு மற்றும் அவரது மோசமான மனநிலையை நான் காண்கிறேன். அவருடன் அந்த படத்தில் சேர்ந்து நடிக்காததற்கு மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். இனிமேலும், இது போன்று நடக்காமல் நான் பார்த்துக் கொள்கிறேன். இவர் போன்றவர்கள் மனித குலத்திற்கே கெட்ட பெயரை ஏற்படுத்துகிறார்கள்” என்று தெரிவித்துள்ளார்.

 

தொடர்ந்து நடிகை திரிஷாவிற்கு ஆதரவாக பல்வேறு தரப்பில் இருந்து ஆதரவுகள் குரல்கள் எழுந்து வருகிறது. நடிகை குஷ்பு ஆகியோர் நடிகர் மன்சூர் அலிகானுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். லியோ படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜும் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்நிலையில் நடிகை திரிஷாவை பற்றி உயர்வாகத்தான் பேசினேன் என நடிகர் மன்சூர் அலிகான் விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் அளித்துள்ள விளக்கத்தில் 'நான் எப்பொழுதும் என்னுடன் நடிக்கும் சக நடிகைகளுக்கு மரியாதை கொடுப்பவன். நான் பேசியதை திட்டமிட்டே வேறு மாதிரி கட் செய்து தவறாக பரப்புகின்றனர். நடிகை திரிஷாவை பற்றி உயர்வாகத்தான் பேசினேன்' என தெரிவித்துள்ளார்.

 

Next Story

"தடுப்பூசி குறித்து தவறாக எதுவும் சொல்லவில்லை!" - மன்சூர் அலிகான் மீண்டும் முன்ஜாமீன் கோரி மனு!

Published on 23/04/2021 | Edited on 23/04/2021

 

 Actor Mansoor Ali Khan seeks re-bail

 

நடிகர் விவேக் உடல்நலக்குறைவு காரணமாக சில தினங்களுக்கு முன்பு உயிரிழந்தார். கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டதுதான் விவேக் மரணத்துக்கு காரணம் என்று சிலர் சந்தேகம் எழுப்ப, அவர் மரணத்திற்கு கரோனா தடுப்பூசி காரணம் இல்லை என்று மருத்துவர்கள் விளக்கியிருந்தார்கள். இந்நிலையில், விவேக் தடுப்பூசி போட்டது தொடர்பாக நடிகர் மன்சூர் அலிகான் சில கருத்துகளைத் தெரிவித்திருந்தார்.

 

இதற்கிடையே தடுப்பூசி குறித்து அவதூறு பரப்பியதாக நடிகர் மன்சூர் அலிகான் மீது டிஜிபி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட இருப்பதாக சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்திருந்தார். அதன்படி கோடம்பாக்கம் மண்டல மருத்துவ அதிகாரி பூபேஷ் அளித்த புகாரின் பேரில், வடபழனி போலீசார் மன்சூர் அலிகான் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதற்கிடையே முன் ஜாமீன் கோரி நடிகர் மன்சூர் அலிகான் 19.04.2021 தேதியன்று  நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

 

சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த மனுவில், கரோனா தடுப்பூசி செலுத்துவதை கட்டாயப்படுத்தக் கூடாது என்றுதான் கூறினேனே தவிர, தடுப்பூசி குறித்து தவறாக எதுவும் தெரிவிக்கவில்லை எனக் குறிப்பிட்டிருந்தார்.

 

இந்த மனு கடந்த 21 ஆம் தேதி முதன்மை நீதிமன்ற நீதிபதி ஆர்.செல்வகுமார் முன்பு விசாரணைக்கு வந்தபோது, காவல்துறை தரப்பில் ஆஜரான நகர அரசு குற்றவியல் வழக்கறிஞர் ஜெய்சங்கர், பொதுமக்கள் மத்தியில் தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டுள்ளதால் முன்ஜாமீன் வழங்கக்கூடாது என ஆட்சேபம் தெரிவித்தார்.

 

இதையடுத்து, மன்சூர் அலிகானின் முன்ஜாமீன் மனுவில் முதல் தகவல் அறிக்கை குறித்த விவரங்கள் தெளிவாகக் குறிப்பிடவில்லை எனக் கூறி, புதிய மனுவை தாக்கல் செய்ய உத்தரவிட்டு முன்ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தார்.

 

இந்நிலையில் தன் மீது வடபழனி போலீசார் பதிவு செய்த வழக்கை ரத்து செய்ய உத்தரவிடுமாறு கோரி மீண்டும் நீதிமன்றத்தில் நடிகர் மன்சூர் அலிகான் முன்ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்துள்ளார்.