Skip to main content

நான் டாக்டர் 515 கணேசன் வந்திருக்கிறேன்... நீலகிரி மக்களுக்கு உதவ முடிஞ்சத கொடுங்க...

Published on 13/08/2019 | Edited on 13/08/2019

அடித்தட்டு மக்களுக்கு சேவை செய்தே டாக்டர் பட்டம் வாங்கிய முதியவர் டாக்டர் ஆலங்குடி 515 கணேசன். இந்தியாவில் எங்கே இயற்கை சீற்றத்தால் மக்கள் அவதிப்பட்டாலும் அவர்களுக்கு உதவ தனது அம்பாசிட்டர் காரை எடுத்துக் கொண்டு ஊரு ஊருக்கு சென்று நிவாரணம் திரட்டி பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரடியாக கொடுப்பது அவர் பழக்கம். கஜா புயலில் தான் குடியிருந்த வீட்டின் கூரைகள் காற்றில் பறந்துவிட்ட போதும் ஒட்டுமொத்த உடமைகளும் மழையோடு போன போதும் கூட தளராமல் தன் சொந்த மாவட்ட மக்களுக்கு உதவ கரூர் பக்கம் காரோடு சென்றவரை பாராட்டி ராகவா லாரன்ஸ் சொந்த செலவில் வீடுகட்டிக் கொடுத்தார்.

 

I am  Dr. 515 Ganesan ... please help the Nilgiris ...

 


கர்நாடக பல்கலைக்கழகம் கௌரவ டாக்டர் பட்டம் கொடுத்தது. தோழர் நல்லக்கண்ணு கொத்தமங்கலம் விழா பொதுமேடையில் அழைத்து பாராட்டி பாராட்டு சான்றிதழ் வழங்கினார். இந்த சமூக சேகவர் 515 கணேசன்தான் இப்போது நீலகிரி மாவட்ட மக்களுக்கு உதவ உண்டியலோடு கிளம்பிவிட்டார்.

புதுக்கோட்டை மாவட்டம் கொத்தமங்கலம் கடைவீதியில் தனது காரோடு வந்தவர் துணைக்கு ஒருவரையும் அழைத்து வந்தார். ஒரு கையில் கார் ஸ்டியரிங், மறு கையில் மைக்.. மெதுவாக நகர்ந்த காரில் இருந்து பேசுகிறார்.. 5200 சடலங்களை இலவசமாக தூக்கியே டாக்டர் பட்டம் வாங்கின ஆலங்குடி 515 கணேசன் உண்டியலோட வந்திருக்கிறேன். புயலில் நீங்களும் பாதிக்கப்பட்டீங்க தெரியும். இருந்தாலும் உங்களிடம் இருக்கிற ஒரு ரூபாய் முதல் எவ்வளவு போட முடியுமோ உதவி செய்யுங்கள். நம்ம உறவுகள் நீலகிரி மழையில் நனைந்து கொண்டிருக்கிறார்கள். மாற்று உடையில்லை உதவுங்கள் என்று விளம்பரம் செய்து கொண்டே போக மற்றவர் ஒரு உண்டியலை முன்னால் கொண்டு செல்ல காரில் ஒரு உண்டியல் வைத்துக் கொண்டார். சென்ற இடமெல்லாம் கையில் இருந்ததை கொடுத்தார்கள்.

 

I am  Dr. 515 Ganesan ... please help the Nilgiris ...


எத்தனையோ பேர் இப்படி உதவிகள் செய்றதா சொல்லி வசூல் செஞ்சு ஏமாத்திட்டு போறாங்க. ஆனா 515 கணேசன்கிட்ட கொடுத்தால் சரியா போய் சேரும். அதனாலதான் அவர் வருவாருனு காத்திருந்து எங்களால் முடிஞ்சத கொடுக்கிறோம் என்றனர் நிவாரண உண்டியலில் பணம் போட்டவர்கள்.

டாக்டர் 515 கணேசனோ.. கோயில் கட்ற இனத்தில பிறந்தாலும் ஏழைகள் செத்தால் தூக்கி போக மறுக்கும்போது வேடிக்கை பார்த்துக்கிட்டு சும்மா இருக்க முடியுமா? அதனாலதான் 18 வயசுல 515 நம்பர் கார் வாங்கி ஏழைகள், ஆதரவற்றவர்களின் சடலங்களையும், பிரசவத்துக்கு கர்ப்பிணிகளையும் இலவசமாக ஏற்றினேன். இதுவரை 5200 சடலங்களை ஏற்றியாச்சு. 100 க்கும் மேற்பட்ட சடலங்களை நானே அடக்கமும் செஞ்சுட்டேன். ஆயிரம் கர்ப்பிணிகளை ஏற்றி நல்லபடியா பிரசவம் நடந்திருக்கு. டீசலுக்காக பழைய இரும்பு வியாபாரம் செய்வேன். 

இந்தியாவுல எங்கே இயற்கை பாதிப்புன்னாலும் நிவாரணம் வசூல் பண்ணி நேரில் கொண்டு போய் கொடுப்பேன். சுனாமி, தானே, வர்தா புயல் இப்படி எல்லாத்துக்கு கொடுத்தாச்சு. கடைசியல கஜா புயல்ல என் வீடே காணாம போச்சு. முடங்கி கிடக்க முடியுமா? காருக்குள்ள குடியிருந்தோம். இந்தியாவுல எங்கே பாதிப்புன்னாலும் உதவி செய்ய நம்ம மாவட்ட மக்களுக்கு உதவனுமேன்னு கரூர் பக்கம் போய் நிவாரணம் திரட்டி வந்து கொஞ்சம் பேருக்கு கொடுத்தேன். என் நிலமையை பார்த்துட்டுதான் அய்யா ராகவா லாரன்ஸ் எனக்கு தார்சு வீடு கட்டிக் கொடுத்தார். அவரை எப்பவும் மறக்க மாட்டேன்.

பிணம் தூக்குனதுக்காக டாக்டர் பட்டம் வாங்குன முதல் ஆள் நானாக தான் இருக்க முடியும். இப்ப நீலகிரி மாவட்டத்தில் கனமழையால மண்சரிவு ஏற்பட்டு வீடு வாசலை இழந்து நிர்கதியா நிற்கும் நம்ம உறவுகளுக்கு நம்மால் இயன்ற சிறு  உதவிகள் செய்யும் எண்ணத்தோடதான் புயலில் பாதித்த மக்களிடம் வந்தேன். எல்லாரும் நிவாரணம் கொடுக்கிறார்கள். விரைவில் நீலகிரி கொண்டு போய் பாதிக்கப்பட்டுள்ள நம் உறவுகளுக்கு கொடுப்பேன் என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அத்துமீறிய அதிமுக, பாஜக - காவல்துறை வழக்குப் பதிவு

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
 Violating AIADMK, BJP- Police case registered

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

நேற்று திமுக, அதிமுக, பாஜகவினர் வேட்புமனு தாக்கல் செய்ய வந்த இடங்களில் மோதிக்கொண்ட சம்பவங்கள் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தன. இந்நிலையில், நேற்று நீலகிரியில் அதிமுக வேட்பாளர்களும் பாஜக வேட்பாளர்களும் வேட்புமனு தாக்கலின் போது தேர்தல் நடத்தை வழி முறைகளை மீறியதாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

நீலகிரி மாவட்டத்தில் நேற்று பாஜக மற்றும் அதிமுக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்ய வந்திருந்தனர். அப்போது தேர்தல் நடைமுறையை மீறி பெருங்கூட்டத்துடன் வந்ததால், அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறைக்கும் கட்சியினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தேர்தல் நடத்தை வழிமுறைகளையும் மீறி பட்டாசு வெடித்தது; அனுமதிக்கப்பட்ட இடத்தை தவிர்த்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் புகுந்து கூச்சல் குழப்பம் ஏற்படுத்தியது; காவல்துறையினரைப் பணி செய்ய விடாமல் தடுத்து சாலை மறியலில் ஈடுபட்டது தொடர்பாக பாஜக மற்றும் அதிமுகவினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Next Story

கடத்தி செல்லப்பட்ட அரசுப் பேருந்து விபத்து

Published on 23/03/2024 | Edited on 23/03/2024
Hijacked government bus accident

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அரசுப் பேருந்து பணிமனையில் உள்ள அரசுப் பேருந்துகள் அனைத்தும் இரவு நேரங்களில் பணிமனைக்குள் நிறுத்த முடியாததால் அருகே உள்ள பட்டுக்கோட்டை சாலையில் வரிசையாக நிறுத்தப்பட்டிருக்கும். அதிகாலை முதல் ஒவ்வொரு பேருந்தும் அந்தந்த பயண நேரத்திற்கு ஓட்டுநர்கள் ஓட்டிச் செல்வார்கள்.

வழக்கம்போல் நேற்று இரவு பேருந்துகள் சாலை ஓரத்தில் நிறுத்தி வைத்துவிட்டு ஓட்டுநர், நடத்துநர்கள் பணிமனையில் ஓய்வெடுக்கச் சென்று விட்டார். இந்நிலையில் இன்று அதிகாலை திருவாடானை செல்லும் வழியில் ஓரியூர் அருகே வண்டாத்தூர் கிராமத்தில் பிரதானச் சாலையில் ஒரு அரசுப் பேருந்து ஒரு லாரியில் மோதி விபத்துக்குள்ளாகி நின்றது. சத்தம் கேட்டு கிராம மக்கள் ஓடி வந்து பார்த்தபோது லாரி ஓட்டுநர் காலில் பலத்த காயத்துடன் ரத்த வெள்ளத்தில் துடித்துக் கொண்டிருந்தார். அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்தில் சிக்கியிருந்த அந்த பேருந்து அறந்தாங்கி பணிமனையைச் சேர்ந்த அறந்தாங்கியில் இருந்து திருவாடானை செல்லும் TN 55 N 0690 என்பது தெரிய வந்தது. ஆனால் யார் இந்த பேருந்தை ஓட்டி வந்தது என்பது தெரியவில்லை. உடனே அறந்தாங்கி டெப்போவிற்கு தகவல் கொடுத்துள்ளனர். அதன் பிறகே சாலை ஓரம் வரிசையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்துகளில் திருவாடானை செல்லும் பேருந்து காணாமல் போனது தெரிய வந்தது.

பணிமனையில் நிறுத்தி இருந்த பேருந்தை யார் கடத்திச் சென்றது என்று போக்குவரத்து கழக அதிகாரிகளும் ஊழியர்களும் விசாரணையில் உள்ளனர். பாதுகாப்பு மற்றும் கவனக்குறைவால் ஒரு பேருந்து கடத்தப்பட்டு விபத்து ஏற்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.