Skip to main content

குழந்தைகள் வார்டுக்கு பக்கத்தில் கரோனா வார்டா? மார்க்சிஸ்ட் கோரிக்கையை ஏற்று மாற்றிய ஆட்சியர்

Published on 14/07/2020 | Edited on 14/07/2020

pudukottai

 

பிறந்த சில மணி நேரங்களே ஆன பச்சிளங் குழந்தைகள் இருக்கும் அறையில் இருந்து 30 அடி தூரத்தில் கரோனா தொற்றுள்ளவர்களுக்கான சிகிச்சை வார்டு அமைத்திருப்பது புதுக்கோட்டை மக்களுக்கு வேதனையும் அதிர்ச்சியும் ஏற்படுத்தியது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் கோரிக்கையை ஏற்று கரோனா வார்டை வேறு இடத்திற்கு மாற்றியமைத்துள்ளார் ஆட்சியர்.

 

புதுக்கோட்டை மாவட்டத்தில் கரோனா தொற்று அதிகரிக்கும்போது, அவர்களை தங்க வைத்து சிகிச்சை அளிக்க புதுக்கோட்டை ராணியார் மருத்துவமனையில் சுமார் 700 படுக்கைகளும், டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி மருத்துவமனையில் 200 படுக்கைகளும் தயாராக உள்ளன என்று மருத்துவக்குழுவினர் அமைச்சர் விஜயபாஸ்கர் முன்னிலையில் கூறினார்கள். 

 

தற்போது கரோனா சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் ராணியார் மருத்துவமனையில் சுமார் 200 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள், 500 படுக்கைகள் காலியாக இருக்கின்றன. பின்னர் எதற்காக சுகாதாரப் பணிகள் இணை இயங்குநர் (பொ) மலர்விழி அவசரமாக ஆட்சியரிடம் அனுமதி பெற்று அறந்தாங்கி குழந்தைகள் வார்டுக்கு அருகே கரோனா தொற்று சிகிச்சைக்கு அனுமதி பெற்றார் என்று கேள்வி எழுந்துள்ளது.

 

அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் கடந்த சில ஆண்டுகளில் சிசு இறப்புகளே இல்லாமல், சுமார் 10 ஆயிரம் குழந்தைகள் பிறந்துள்ளார்கள் என்று பெருமையாக அமைச்சர் விஜயபாஸ்கர் முன்பு மருத்துவமனை நிர்வாகம் அறிவித்தார்கள். ஒவ்வொரு மாதமும் சுமார் 390 முதல் 400 குழந்தைகள் பிறக்கின்றன.  இப்படியான மருத்துவமனையை கரோனா வார்டாக மாற்றுவதைத்தான் மக்கள் எதிர்க்கிறார்கள். 

 

கரோனா தொற்று சிகிச்சை மையமாக பாலிடெக்னிக் கல்லூரி, அரசு கலைக்கல்லூரி இடங்களை தேர்வு செய்தவர்கள் ஏன் இப்படி குழந்தைகள் வார்டு அருகே மாற்றிக் கொண்டார்கள் என்பது தான் கேள்விக்குறியாக உள்ளது.

 

இது குறித்த சிபிஎம் மாவட்டச் செயலாளர் கவிவர்மன் கூறும் போது,


“கரோனா சிகிச்சை நல்ல முறையில் அளிக்க வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை. குழந்தைகள் வார்டுக்கு அருகே கரோனா வார்டு அமைப்பதைத்தான் எதிர்க்கிறோம். கரோனா வார்டுக்கு போக குழந்தைகள் வார்டு வழியாகத்தான் போக வேண்டும். குழந்தைகளையும், கர்ப்பிணிகளையும் கவனித்து கொள்ளும் உறவினர்கள் அந்த வழியில்தான் அமர்ந்திருப்பார்கள். கரோனா ஆம்புலன்ஸ் போகும்போது அதிலிருந்து காற்றில் உறவினர்களுக்கு தொற்று ஏற்பட்டு வார்டில் இருக்கும் தாய்க்கும், சேய்க்கும் தொற்றுபரவாது என்பதற்கு என்ன உத்தரவாதம்?”

 

“இது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டபோது மறு பரிசீலனை செய்வதாக கூறினார்கள். ஆனால் ஆட்சியரிடம் தவறான தகவல் கொடுத்து அனுமதி பெற்றுள்ளதாக தெரிகிறது. இரவில் பல கரோனா தொற்று உள்ளவர்களை கொண்டு வந்து சேர்த்துள்ளனர். அதனால் சி.பி.எம். இரவில் தர்ணா போராட்டத்தை நடத்தியுள்ளது. மறுபடியும் வார்டு மாற்றும் வரை தொடர் போராட்டம் நடத்தப்படும்” என்றார்.

 

இந்த நிலையில் மாவட்ட ஆட்சியர் உமாமகேஸ்வரியின் கவனத்திற்கு தகவல் சென்றதால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு குழந்தைகள் வார்டு அருகில் அமைக்கப்பட்டிருந்த கரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த 18 பேரும் இன்று செவ்வாய் கிழமை 8 மணி முதல் ஆம்புலன்ஸ்கள் மூலம் புதுக்கோட்டை ராணியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். இதனால் நிம்மதியடைந்த மக்கள் ஆட்சியருக்கு நன்றி கூறி வருகின்றனர். பொதுமக்களைத் திரட்டிப் போராட்டம் நடத்த தயாரான தோழர்களும் ஆட்சியர் நடவடிக்கையை பாராட்டி கலைந்து சென்றனர்.

 

அதன்பிறகு ஜெ.டி. (பொ) மலர்விழி மாற்று இடம் பார்ப்பதற்காக ஏற்கனவே தேர்வு செய்யப்பட்டிருந்த அரசு பாலிடெக்னிக் கல்லூரி, கல்லனேந்தல் அரசு கலைக்கல்லூரிகளை ஆய்வு செய்து வருகிறார்.

 

அதேபோல கரோனா பரிசோதனை செய்ய எடுக்கப்படும் மாதிரிகள் பிரசவ வார்டுக்குள் உள்ள மைக்ரோ லேபில்தான் பாதுகாக்கப்பட்டு, மாலையில் சோதனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. அதனால் அதே மருத்துவமனையில் மற்றொரு கட்டிடத்தில் மாதிரிகளை வைத்து பாதுகாக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தலைமைச் செயலகத்தில் வேலை வாங்கித் தருவதாக மோசடி- சட்டக்கல்லூரி மாணவர் கைது

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 Law college student arrested for fraud of getting a job in the Secretariat

தலைமைச் செயலகத்தில் வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்ததாக சட்டக்கல்லூரி மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் புதுக்கோட்டையில் நடந்துள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சன்னதிவயல் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் சத்யராஜ் (37). தனியார் நிதி நிறுவனத்தில் வசூல் செய்யும் ஊழியராக உள்ளார். இவர் கடந்த 25 அம் தேதி அறந்தாங்கி காவல் நிலையத்தில் கொடுத்துள்ள புகாரில் 'நான் அரிமளம் பகுதிக்கு சென்றிருந்த போது மீனாட்சிபுரம் ரோடு பகுதியைச் சேர்ந்த கோவிந்தராஜ் மகன் கார்த்திக் அறிமுகமானார். தான் சென்னை செட்டியார் சட்டக்கல்லூரி மாணவர் என்றும் சோசியல் மீடியாவில் நிறைய பதிவுகள் போடுவேன். எனக்கு அரசியல்வாதிகள், அதிகாரிகளுடன் நல்ல பழக்கம் உள்ளது என்றும் சொன்னார்.

அதன் பிறகு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தலைமை செயலகத்தில் யாருக்காவது வேலை வேண்டும் என்றால் சொல்லுங்கள் வாங்கித் தருகிறேன் என்றார். அப்போது எனக்கே வேலை வேண்டும் என்றேன். அதற்கு ரூ.3 லட்சம் பணம் கொடுக்க வேண்டும் என்றார். நானும் அவர் சொன்னதை நம்பி நான் சேமித்து வைத்திருந்த பணம் ரூ.1 லட்சத்தை வங்கி கணக்கில் செலுத்துவதாக சொன்ன போது வேண்டாம் நேரில் வாங்கிக் கொள்கிறேன் என்று சொன்னவர் கடந்த பிப்ரவரி 11 ஆம் தேதி கார்த்திக் புதுக்கோட்டை வந்திருப்பதாக தெரிந்தது. நானும் என் நண்பன் பாலகிருஷ்ணனும் அன்று மாலை புதுக்கோட்டை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சந்தித்து முதல் தவணையாக ரூ.1 லட்சம் பணமாக கொடுத்தேன். பணத்தை வாங்கிக் கொண்டவர் மீதி ரூ.2 லட்சத்தை ரெடி பண்ணுங்க என்று சொல்லிவிட்டு போனார்.

அதன் பிறகு வேலை என்னாச்சு என்று கேட்க பலமுறை அவரை தொடர்பு கொண்டும் போனை எடுக்கவில்லை. இந்நிலையில் தான் இன்று (ஏப்ரல் 25 ஆம் தேதி) அறந்தாங்கி எம்ஜிஆர் சிலை அருகே நான் நின்று கொண்டிருந்தபோது அங்கு வந்த ஒரு நபர் என்னிடம் நங்கள் தான் சத்திரயாரஜா என்று கேட்டவர் கார்த்திக் உங்களிடம் பேச வேண்டும் என்று சொன்னார் என்று சொல்லிவிட்டு அவரது செல்போனில் வாட்ஸ் அப் காலில் கார்த்திக்கிடம் பேசச் சொன்னார். அப்போது ஏன் என் போனை எடுக்கவில்லை. என் வேலை, பணம் என்னாச்சு என்று கேட்ட போது, உன் பணம் வெளியில் கொடுத்துவிட்டேன். இனிமேல் பணமும் இல்லை, வேலையும் இல்லை என்று சொன்னதோடு இனிமேல் பணம் கேட்டால் எனக்குத் தெரிந்த காரைக்குடி ரவுடிகளை வைத்து உன்னை தீர்த்துக்கட்டிவிடுனே் என்று கொலை மிரட்டல் செய்ததோடு தகாத வார்த்தைகளிலும் பேசிவிட்டு போனை நிறுத்திவிட்டார். என்னிடம் போனைக் கொடுத்த நபரும் என்னை மிரட்டிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார்.

எனக்கு தலைமைச் செயலகத்தில் வேலை வாங்கித் தருவதாக என்னிடம் பணமும் வாங்கிக் கொண்டு ஏமாற்றிவிட்டு என்னையும் என் குடும்பத்தையும் கொன்று விடுவதாக கொலை மிரட்டல் விடுத்த கார்த்திக் மீது நடவடிக்கை எடுத்து என் பணத்தையும் மீட்டுத் தர வேண்டும் என்று அந்தப் புகாரில் கூறியுள்ளார்.

புகார் குறித்து வழக்கு பதிவு செய்த அறந்தாங்கி காவல் ஆய்வாளர் கருணாகரன் தனிப்படை அமைத்து வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்த சட்டக்கல்லூரி மாணவர் கார்த்திக்கை சென்னையில் கைது செய்து அறந்தாங்கி காவல் நிலையம் கொண்டு வந்துள்ளனர். மேலும் விசாரனைக்கு பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளதாக கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் சென்னை முதல் அறந்தாங்கி வரை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

 மீண்டும் ஒரு வேங்கை வயல் சம்பவம்; அதிர்ச்சி புகார்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Shock complaint on Yet another Vengaivayal lincident at pudukkottai

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி தண்ணீரில் மனிதக் கழிவு கலந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குடிநீரில் மனிதக் கழிவு கலந்த சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள், மனித உரிமை ஆணையம் எனப் பல தரப்பிலிருந்தும் அழுத்தம் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவம் நடைபெற்ற 20ஆவது நாளில் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டு சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.

அந்த வகையில் இந்த விவகாரம் தொடர்பாக குற்றவாளிகளைக் கண்டறிய உண்மை கண்டறியும் சோதனையும், வேங்கைவயல், இறையூர் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 5 சிறுவர்கள் உட்பட 31 பேரிடமும் டி.என்.ஏ. பரிசோதனைகளையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் மேற்கொண்டனர். ஒரு காவலர் உட்பட 5 பேரிடம் குரல் மாதிரி பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில், வேங்கைவயல் சம்பவத்தைப் போல், பொதுமக்கள் உபயோகிக்கும் குடிநீரில் மாட்டுச்சாணம் கலக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்த சம்பவம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை அருகே சங்கன்விடுதி ஊராட்சிக்கு உட்பட்ட தெருவில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.  

இந்தத் தெருவில், உள்ள 25 பட்டியலின குடும்பங்களும், மாற்று சமூகத்தைச் சேர்ந்த 10 குடும்பங்களும் உபயோகிப்பதற்காக கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு, 10,000லி அளவு கொண்ட குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டு இயங்கி வருகிறது. இந்த நிலையில், இன்று (25-04-24) காலை இந்தக் குடிநீர் தொட்டியில் இருந்து அசுத்தமான தண்ணீர் வருவதை அங்குள்ள பொதுமக்கள் கவனித்துள்ளனர். அதன் அடிப்படையில், அந்தத் தொட்டியைச் சுத்தம் செய்வதற்காக தொட்டி மேல் ஏறியுள்ளனர். அங்கு சென்று பார்த்த போது, அந்தத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலந்ததாகக் கூறப்படுகிறது.

இந்தச் சம்பவம் தொடர்பாக, போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அந்தப் புகாரின் பேரில், அங்கு போலீசார், வட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். குடிநீர் மாதிரி சோதனைக்கு அனுப்பப்பட்ட நிலையில் தற்போது தொட்டி சுத்தம் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், விசாரணை முடியும் வரை டேங்கர் லாரி மூலம் கிராம மக்களுக்கு குடிநீர் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.