Skip to main content

கடலுக்குள்ளே ஒரு வனம்... அழகான கடலோர சுற்றுலாத்தலமான 'முத்துக்குடா'

Published on 22/10/2021 | Edited on 22/10/2021

 

புதுக்கோட்டை மாவட்டத்தில் நூற்றுக்கணக்கான சுற்றுலாத் தலங்கள் உள்ளன. வரலாற்றுச் சிறப்புமிக்க தொல்லியல் சார்ந்த கோயில்கள், சிற்பங்கள், ஓவியங்கள் என பல இடங்கள் இருந்தாலும் இயற்கையாய் அமைந்த பசுமை நிறைந்த பகுதிகளும் ஏராளம் உள்ளன. இதில் ஒன்றுதான் முத்துக்குடா அலையாத்திக்காடுகள். கடலுக்குள் இந்தக் காடுகள் இருப்பதால் புயல் நேரங்களில் கூட அலையின் வேகத்தைக் குறைத்துப் பாதிப்புகளைத் தவிர்த்திருக்கின்றன.

 

புதுக்கோட்டை மாவட்டம் கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள மீமிசலில் இருந்து சுமார் 10 கி.மீ தொலைவில் உள்ளது நாட்டாணிபுரசக்குடி ஊராட்சியைச் சேர்ந்த முத்துக்குடா கிராமம். முழுக்க முழுக்க மீனவ கிராமம். அங்குள்ள மீனவர்கள் நாட்டுப் படகுகளை மட்டுமே பயன்படுத்தி மீன்பிடி தொழில் செய்துவருகின்றனர். மீனவப் பெண்கள் மீனவர்கள் பிடித்துவரும் மீன்களைச் சேகரிக்கவும் வலைகளைச் சரி செய்தும் உதவிகள் செய்துவருகின்றனர்.

 

இந்தக் கிராமத்தில்தான் முத்துப்பேட்டை அலையாத்திக் காடுகளுக்கு இணையாகக் கடலுக்குள் சுமார் 3 கி.மீ. சுற்றளவில் அலையாத்திக் காடுகள் அமைந்துள்ளன. ஆழமில்லாத கடலில் படகில் சென்று அழகான இயற்கையாய் அமைந்த காடுகளைச் சுற்றிப் பார்க்கக் காடுகளுக்கு நடுவில் இயற்கையாகவே கால்வாய் அமைந்துள்ளது. நாட்டுப்படகில் காட்டைச் சுற்றி அதன் அழகை ரசிக்க ஒருமணி நேரம் போதாது. அலையாத்திக் காடுகளுக்குள்ளேயே சில இடங்களில் மணல் திட்டுகளும் உள்ளதால் சுற்றுலாப் பயணிகள் சிறிது நேரம் ஓய்வெடுக்கவும் பசியாறும் இடமாகவும் அமைந்துள்ளது அந்த திட்டுகள்.

 

காடுகளுக்கு நடுவே படகில் செல்லும்போது மீன்கள் துள்ளிக்குதித்துச் செல்லும் காட்சிகளையும் கால்வாயில் செல்லும்போது சிறிய நண்டுகள் மரங்களில் செடிகொடிகளில் ஏறித்திரிவதைக் கண்டு ரசிக்கலாம். வெளியூர் பயணிகளுக்கு ஏதுவான சுற்றுலா தலமாக முத்துக்குடா இருந்தாலும் கூட, சுற்றுலாத்துறையோ அரசாங்கமோ பயணிகளுக்கென்று எந்த வசதியும் செய்து கொடுக்கவில்லை. தற்போது இந்த அலையாத்திக்காட்டை மேம்படுத்தி பயணிகள் வந்து செல்லவும் காட்டைச் சுற்றிப் பார்க்கக் கால்வாய் சீரமைப்பு பணிகளையும் செய்யத் தொடங்கியுள்ளனர். இனிமேல் வெளியூர் சுற்றுலாப் பயணிகள் வருவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது என்கிறார்கள் அந்தக் கிராம மக்கள். தனியார் அமைப்புகள் மூலமாக முத்துக்குடாவை சுற்றுலாத் தலமாக மாற்றியமைக்கும் ஆய்வுப் பணிகளில் அதிகாரிகள் களமிறங்கியுள்ளனர். இதுபோன்ற சிறிய சுற்றுலாத் தலங்களையும் அரசுகள் கவனத்தில் எடுத்துக்கொண்டால் அந்தக் கிராமம் மேலும் வளர்ச்சியடையும் என்கிறார்கள் விவரமறிந்த கிராமத்தினர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

 மீண்டும் ஒரு வேங்கை வயல் சம்பவம்; அதிர்ச்சி புகார்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Shock complaint on Yet another Vengaivayal lincident at pudukkottai

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி தண்ணீரில் மனிதக் கழிவு கலந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குடிநீரில் மனிதக் கழிவு கலந்த சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள், மனித உரிமை ஆணையம் எனப் பல தரப்பிலிருந்தும் அழுத்தம் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவம் நடைபெற்ற 20ஆவது நாளில் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டு சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.

அந்த வகையில் இந்த விவகாரம் தொடர்பாக குற்றவாளிகளைக் கண்டறிய உண்மை கண்டறியும் சோதனையும், வேங்கைவயல், இறையூர் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 5 சிறுவர்கள் உட்பட 31 பேரிடமும் டி.என்.ஏ. பரிசோதனைகளையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் மேற்கொண்டனர். ஒரு காவலர் உட்பட 5 பேரிடம் குரல் மாதிரி பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில், வேங்கைவயல் சம்பவத்தைப் போல், பொதுமக்கள் உபயோகிக்கும் குடிநீரில் மாட்டுச்சாணம் கலக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்த சம்பவம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை அருகே சங்கன்விடுதி ஊராட்சிக்கு உட்பட்ட தெருவில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.  

இந்தத் தெருவில், உள்ள 25 பட்டியலின குடும்பங்களும், மாற்று சமூகத்தைச் சேர்ந்த 10 குடும்பங்களும் உபயோகிப்பதற்காக கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு, 10,000லி அளவு கொண்ட குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டு இயங்கி வருகிறது. இந்த நிலையில், இன்று (25-04-24) காலை இந்தக் குடிநீர் தொட்டியில் இருந்து அசுத்தமான தண்ணீர் வருவதை அங்குள்ள பொதுமக்கள் கவனித்துள்ளனர். அதன் அடிப்படையில், அந்தத் தொட்டியைச் சுத்தம் செய்வதற்காக தொட்டி மேல் ஏறியுள்ளனர். அங்கு சென்று பார்த்த போது, அந்தத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலந்ததாகக் கூறப்படுகிறது.

இந்தச் சம்பவம் தொடர்பாக, போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அந்தப் புகாரின் பேரில், அங்கு போலீசார், வட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். குடிநீர் மாதிரி சோதனைக்கு அனுப்பப்பட்ட நிலையில் தற்போது தொட்டி சுத்தம் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், விசாரணை முடியும் வரை டேங்கர் லாரி மூலம் கிராம மக்களுக்கு குடிநீர் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. 

Next Story

பாம்பு கடித்து பள்ளி மாணவி உயிரிழந்த சோகம்!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
nn

புதுக்கோட்டையில் பாம்பு கடித்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பள்ளி மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் எம்.குளவாய்ப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி சின்னதுரை மகள் விசித்ரா (வயது 14). இவர் அதே ஊரில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 8 ஆம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த ஒரு வார காலமாக தேர்தலுக்காக சில தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு விடுமுறை விடப்பட்டிருந்தது. இந்நிலையில் கடந்த 20 ஆம் தேதி விசித்ரா தனது வீட்டில் வளர்க்கும் ஆடுகளுக்கு இரைதேடிச் சென்றவர் ஒரு கருவேலமரத்தடியில் கொட்டிக்கிடந்த கருவேலங்காய்களை சேகரித்த போது கீழே இருந்த பாம்பு விரலில் கடித்துள்ளது.

பாம்பு கடித்து அலறிய சிறுமியை உடனே அங்கிருந்தவர்கள் மீட்டு, புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். பாம்பின் விஷம் வேகமாக உடலில் பரவியுள்ள நிலையில் தீவிர சிகிச்சை அளித்தும் மாணவி விசித்ரா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். சிறுமியின் இறப்பால் கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.