Skip to main content

நெல் வயலில் மீன் வளர்ப்பு; லட்சத்தில் வருவாய் பார்க்கும் விவசாய தம்பதி

Published on 25/03/2023 | Edited on 25/03/2023

 

pudukkottai paramppur farmer couple fisheries for paddy field

 

வயல்களில் நெல் நடவு செய்து உரம், பூச்சிக்கொல்லி மருந்து தெளித்து அறுவடை செய்த பிறகு போதிய விலை கிடைக்காமல் விவசாயிகளுக்கு நட்டம் ஏற்பட்டு வட்டிக்கு கடன் வாங்கும் நிலை தான் இன்றளவும் இருக்கிறது. ஆனால், ஒரு தம்பதி நெல் நடவு செய்யும் வயலில் மீன் வளர்த்து அதிக லாபம் சம்பாதித்து வருவதுடன் ரசாயனக் கலப்பு இல்லாமல் நெல் அறுவடையும் செய்து சாதித்து வருகின்றனர்.

 

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் பரம்பூர் ஊராட்சியில் உள்ள சின்ன கிராமம் சேந்தங்கரை. இந்த கிராமத்தைச் சேர்ந்த இளம் விவசாயி பொன்னையா தான், தனது மனைவி பாக்கியலட்சுமியின் முழு ஒத்துழைப்போடு நெல் வயலில் மீன் வளர்த்து வருகிறார். தங்களிடம் உள்ள 12 ஏக்கர் நிலத்தில் 4 ஏக்கர் நெல் நடவுக்காகவும் 8 ஏக்கரில் நெல் நடவும் மீன் வளர்ப்பும் என மாற்றி மாற்றி செய்து வருகிறார்கள். வயலில் வரப்பு மட்டத்திற்கு தண்ணீரை நிரப்பி மீன் கண்மாய்களில் கிடக்கும் பாசிகளை கொண்டு வந்து வளர்த்து அதற்குள் மீன் குஞ்சுகளை விட்டு பராமரித்து வளர்ப்பதுடன் மீன்கள் பெரிதான பிறகு நேரடியாக பொதுமக்களிடம் மட்டுமே விற்பனை செய்த பிறகு, அந்த வயலில் ஒரு முறை மீன் வளர்ப்பை தொடர்ந்து உழவு கூட செய்யாமல் திருந்திய நெல் சாகுபடி செய்யப்படுகிறது. இந்த நெல்லுக்கு உரம், பூச்சிக்கொல்லி மருந்துகள் ஏதும் தெளிக்காமல், மீன் வளர்த்த வயல் என்பதால் இயற்கை சத்தில் நெல் விளைகிறது. இப்படியே மாற்றி மாற்றி நெல்லும் மீனும் வளர்க்கப்படுகிறது.

 

"2007 இல் இந்த முறையில் மீன் - நெல் வளர்ப்பை தொடங்கினோம். முதலில் மீனுக்கான தீவனங்கள் வாங்கி போட்டோம். பிறகு பாசிகள் மட்டுமே தீவனம். இந்த வேலைகளை எல்லாம் நானும் என் மனைவியுமே செய்கிறோம். தினசரி கவனிப்பது, மீன் பிடிப்பது எல்லாமே நாங்களே. வியாபாரிகளிடம் மீன் விற்பனை செய்வதில்லை. ஒரு கிலோ தொடங்கி 100, 200 கிலோ வரை நேரடியாக வரும் பொதுமக்களிடம் மட்டுமே விற்பனை செய்வதால் விலையும் குறைவதில்லை. வெளியூர் போகிறவர்களுக்கு ஆக்சிஜன் பாக்கெட்டில் மீன்கள் கொடுக்கிறோம். வருடத்திற்கு 8 முதல் 10 லட்சம் ரூபாய் வரை வருவாய் கிடைக்கிறது. நெல்லை விட மீனில் வருவாய் அதிகம் கிடைக்கிறது" என்கிறார் பொன்னையா. "கல்யாணத்திற்கு முன்பு எங்க வீட்ல இருக்கும் வரை நான் மீன் சாப்பிட கூட மாட்டேன். ஆனால், கல்யாணம் ஆன பிறகு என் கணவருடன் சேர்ந்து மீன் வளர்ப்பை முழுமையாகச் செய்து வருகிறேன். நிறைவான வருவாய் கிடைக்கிறது" என்றார் பாக்கியலட்சுமி.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பூச்சிக்கொல்லி மருந்தா? பயிர்க்கொல்லி மருந்தா? - போராடும் விவசாயிகள்! நடவடிக்கை எடுக்கத் தயங்கும் அதிகாரிகள்

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Farmers struggle at Pudukkottai District Collectorate

திருச்சி மாவட்டம் மணப்பாறை வட்டம் சேர்பட்டி அருகே மறவனூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி செந்தில்குமார் 10 ஏக்கரில் நெல் பயிர் நடவு செய்துள்ளார். கதிர் வரும் நிலையில் இலைசுருட்டுப்புழு காணப்பட்டதால் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் உள்ள ஒரு தனியார் பூச்சிக்கொல்லி மருந்துக் கடையில் பூச்சிக்கொல்லி மருந்து வாங்கிச் சென்று 8.5 ஏக்கருக்கு தெளித்துள்ளார்.

பூச்சிக்கொல்லி மருந்து தெளித்து சில நாட்களில் பயிர்கள் கருகத் தொடங்கி ஒரு வாரத்தில் முழுமையாக கருகியது. சம்பந்தப்பட்ட மருந்துக் கடையில் கேட்டதற்கு சரியான பதில் இல்லாததால் திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டார் விவசாயி செந்தில்குமார். இதனையடுத்து வயலுக்கே வந்து ஆய்வு செய்த வேளாண்துறை அதிகாரிகள் பூச்சிக்கொல்லி மருந்தால் தான் பயிர்கள் கருகிவிட்டதாக சான்றளித்தனர்.

இதனையடுத்து விராலிமலை பூச்சிக்கொல்லி மருந்துக்கடை மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில், வியாழக்கிழமை தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் துணைச் செயலாளர் சேகர் முன்னிலையில் ஏராளமான விவசாயிகள் கருகிய பயிர்களுடன் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி வந்தனர்.

கருகிய பயிர்களுடன் வந்த விவசாயிகளை ஆட்சியர் அலுவலகத்திற்குள் அனுமதிக்காததால் நுழைவாயிலிலேயே கருகிய பயிர்களை கொட்டியும் கையில் வைத்துக் கொண்டும் ஒப்பாரி வைத்து ஆர்ப்பாட்டம் செய்தனர். அங்கு வந்த போலீசாரும் வருவாய்த் துறை அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாகக் கூறிய பிறகு ஆட்சியர் அலுவலக நுழைவாயில் போராட்டத்தை விவசாயிகள் முடித்துக் கொண்டனர்.

ஆனால் வேளாண்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் பிச்சத்தான்பட்டியில் திருச்சி மாவட்ட விவசாயிகள் இருவர் செல்போன் கோபுரத்தில் ஏறிவிட்டனர். அதேபோல மற்றொரு குழு விவசாயிகள் விராலிமலை வேளாண் இணை இயக்குநர் அலுவலகத்திற்குச் சென்ற விவசாயிகள் அலுவலகத்திற்குள் நுழைந்து நடவடிக்கை எடுக்கும் வரை போகமாட்டோம்  என்று அங்கேயே படுத்துவிட்டனர்.

அதன் பிறகே சம்பந்தப்பட்ட விராலிமலை பூச்சிக்கொல்லி மருந்துக் கடையை அதிகாரிகள் மூடினர். பூச்சிக்கொல்லி மருந்து கேட்டால் பயிர்க்கொல்லி மருந்து கொடுத்து 8.5 ஏக்கர் நெல் பயிர்களைக் கொன்ற பூச்சி மருந்துக்கடை உரிமத்தை ரத்து செய்ய வேண்டும். கடையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை வைத்துள்ளனர். சில மாதங்களுக்கு முன்பு கீரமங்கலத்தில் 10 ஆண்டுகளுக்கு முன்பு காலாவதியான பூச்சிக்கொல்லி மருந்துகளை புதிய லேபிள் ஒட்டி புதிய மருந்தாக விற்பனைக்கு வைத்திருந்த சுமார் 1500 மருந்துப் பாட்டில்களை பறிமுதல் செய்த அதிகாரிகள் இப்போது நடவடிக்கை எடுக்க தயக்கம் ஏன் என்ற கேள்வி எழுப்புகின்றனர்.

Next Story

கடத்தி செல்லப்பட்ட அரசுப் பேருந்து விபத்து

Published on 23/03/2024 | Edited on 23/03/2024
Hijacked government bus accident

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அரசுப் பேருந்து பணிமனையில் உள்ள அரசுப் பேருந்துகள் அனைத்தும் இரவு நேரங்களில் பணிமனைக்குள் நிறுத்த முடியாததால் அருகே உள்ள பட்டுக்கோட்டை சாலையில் வரிசையாக நிறுத்தப்பட்டிருக்கும். அதிகாலை முதல் ஒவ்வொரு பேருந்தும் அந்தந்த பயண நேரத்திற்கு ஓட்டுநர்கள் ஓட்டிச் செல்வார்கள்.

வழக்கம்போல் நேற்று இரவு பேருந்துகள் சாலை ஓரத்தில் நிறுத்தி வைத்துவிட்டு ஓட்டுநர், நடத்துநர்கள் பணிமனையில் ஓய்வெடுக்கச் சென்று விட்டார். இந்நிலையில் இன்று அதிகாலை திருவாடானை செல்லும் வழியில் ஓரியூர் அருகே வண்டாத்தூர் கிராமத்தில் பிரதானச் சாலையில் ஒரு அரசுப் பேருந்து ஒரு லாரியில் மோதி விபத்துக்குள்ளாகி நின்றது. சத்தம் கேட்டு கிராம மக்கள் ஓடி வந்து பார்த்தபோது லாரி ஓட்டுநர் காலில் பலத்த காயத்துடன் ரத்த வெள்ளத்தில் துடித்துக் கொண்டிருந்தார். அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்தில் சிக்கியிருந்த அந்த பேருந்து அறந்தாங்கி பணிமனையைச் சேர்ந்த அறந்தாங்கியில் இருந்து திருவாடானை செல்லும் TN 55 N 0690 என்பது தெரிய வந்தது. ஆனால் யார் இந்த பேருந்தை ஓட்டி வந்தது என்பது தெரியவில்லை. உடனே அறந்தாங்கி டெப்போவிற்கு தகவல் கொடுத்துள்ளனர். அதன் பிறகே சாலை ஓரம் வரிசையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்துகளில் திருவாடானை செல்லும் பேருந்து காணாமல் போனது தெரிய வந்தது.

பணிமனையில் நிறுத்தி இருந்த பேருந்தை யார் கடத்திச் சென்றது என்று போக்குவரத்து கழக அதிகாரிகளும் ஊழியர்களும் விசாரணையில் உள்ளனர். பாதுகாப்பு மற்றும் கவனக்குறைவால் ஒரு பேருந்து கடத்தப்பட்டு விபத்து ஏற்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.