Skip to main content

ஆக்கிரமிப்புகளை அகற்ற ஒரு வாரம் அவகாசம் கேட்ட அதிகாரிகள்... 2 நாளில் அகற்றிக் கொடுக்க உத்தரவிட்ட ஆட்சியர்!

Published on 17/09/2019 | Edited on 17/09/2019

புதுக்கோட்டை மாவட்டத்தில் கொத்தமங்கலம், மறமடக்கி, மாங்காடு, வடகாடு உள்ளிட்ட கிராமங்களில் நீர்நிலை சீரமைப்பு பணிகளை அந்தந்த கிராம இளைஞர்களே சொந்த செலவில் தொடங்கி செய்து வருகின்றனர். பல வருடங்களாக மராமத்து செய்யப்படாததால் ஆக்கிரமிப்புகள் அதிகமாக உள்ளது. அதனால் ஆக்கிரமிப்புகளை அகற்றிக் கொடுத்தால் சீரமைப்புகளை முழுமையாக செய்து விடுவோம் என்று கொத்தமங்கலம் இளைஞர் மன்றத்தினர் 2 மாதங்களுக்கு முன்பு மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தனர். 

அதேபோல வட்டாட்சியரிடமும் மனு கொடுத்தனர். ஆனால் இதுவரை அதற்கான எந்த பணிகளும் நடக்கவில்லை. அதனால் சில நாட்களாக கனமழை பெய்தும் கூட சீரமைக்கப்பட்ட குளங்களுக்கு தண்ணீர் செல்வது தடைப்பட்டுள்ளது. அதனால பணத்தையும், உழைப்பையும் செலவழித்து சீரமைத்த இளைஞர்கள் கவலையில் உள்ளனர். இந்த நிலையில் ஆட்சியரிடம் கொடுக்கப்பட்ட மனு சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்பி கிடப்பில் போடப்பட்டுள்ளது.
 

இந்த நிலையில் தான் திங்கள்கிழமை மாலை புதுக்கோட்டை மாவட்டத்தில் அறந்தாங்கி அருகில் உள்ள நற்பவளக்குடி கிராமத்தில் ரூ. 25 லட்சம் மதிப்பீட்டில் நடந்து வரும் குடிமராமத்து பணிகளை பார்வையிட வந்த மாவட்ட ஆட்சியர் உமாமகேஸ்வரி செய்தியாளர்களிடம் பேசும் போது, புதுக்கோட்டை மாவட்டத்தில் 66 ஏரிகள், குளங்கள் குடிமராமத்துப் பணிகள் நடந்து வருகிறது. இதுவரை 40 சதவீதம் பணிகள் முடிவடைந்துள்ளது. ஆயக்கட்டுதாரர்களே பணிகளை செய்து வருகின்றனர். அவர்களுக்கு இதுவரை 29 சதவீதம் அளவிற்கு நிதி வழங்கப்பட்டுள்ளது. 

pudukkottai Officials asked for a week's time to eliminate the occupation  Remove in 2 days collector order


மேலும் தற்போது மழை தொடங்கிவிட்டதால் இனிமேல் எப்படி பணிகள் தொடர்ந்து செய்வது என்பது பற்றி ஆலோசனைகளை அதிகாரிகள், பொதுப்பணித்துறை பொறியாளர்கள் தொடர்ந்து வழங்கி வருகின்றனர். அதேபோல் இந்த பணிகள் சரியாக நடைபெற வேண்டும் என்பதால் துறை செயலர் நேரடியாக வந்து பார்வையிட்டுள்ளார். அதன் தொடர்ச்சியாக உயர் அதிகாரிகளும் தொடர்ந்து பார்வையிட்டுள்ளனர். இந்த மாத இறுதிக்குள் பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான நிதியும் வழங்க ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது என்றார்.

அதை தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்து பேசும் போது, கொத்தமங்கலம் மறமடக்கி உள்ளிட்ட கிராமங்களில் இளைஞர்களே குளங்களில் மராமத்து பணிகளை செய்து வருகின்றனர். நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி மாவட்ட ஆட்சியரிடம் 2 மாதங்களுக்கு முன்பு மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை. அதனால் சீரமைக்கப்பட்ட குளங்களுக்கு கூட தண்ணீர் வரவில்லை என்ற கேள்விக்கு,
    
மனு கொடுத்திருந்தால் நடவடிக்கை எடுத்திருப்போம். என்றவர் பொதுப்பணித்துறை குளமா? என்று கேட்டுவிட்டு அந்த பகுதிக்கான பொறியாளர் யார் என்று அருகில் அழைத்து ஏன் ஆக்கிரமிப்புகளை அகற்றவில்லை என்று கேள்வி எழுப்பினார். ஆக்கிரமிப்பாளர்கள் கோர்ட்டுக்கு போவதாக நோட்டீஸ் கொடுப்பதாக சொல்றாங்க.. என்று பொறியாளர் பதிலளித்தார். கோர்ட்டுக்கு போகல, ஸ்டே வாங்கல தானே அப்பறம் என்ன தயக்கம். இதுவரை என்ன பணிகள் நடந்திருக்கு என்ற ஆட்சியர் கேட்க, அது வந்து கொஞ்சம் கொஞ்சமாக அகற்றி வருகிறோம் என்றார் பொறியாளர்.

pudukkottai Officials asked for a week's time to eliminate the occupation  Remove in 2 days collector order



சரி எப்ப முழுமையாக அகற்றி அறிக்கை கொடுப்பீங்க. என்ன ஆக்கிரமிப்பு இருக்கு என்றார் ஆட்சியர். கட்டிடங்கள், விவசாய நிலங்கள் ஆக்கிரமிப்பு உள்ளது. அடுத்த வாரம் அகற்றி அறிக்கை தருகிறோம் என்று இழுக்க..ஏன் அவ்வளவு நாள் நாளை மறு நாள் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியை தொடங்கனும். அது எந்த வட்டம் ஆலங்குடியா? தாசில்தார், போலீஸ் துணைக்கு அழைச்சுட்டு போய் உடனே 2 நாட்களில் ஆக்கிரமிப்பை அகற்றி அறிக்கை கொடுக்கனும் என்றார்.


அடுத்து மேற்பனைக்காடு பெரிய குளம் குடிமராமத்து பணிகளால் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. ஆற்றில் வரும் தண்ணீரை குளத்தில் சேமிக்க முடியவில்லையே என்ற செய்தியாளரின் கேள்விக்கு.. அது கல்லணை கோட்டத்தில் வருகிறது. பணிகள் தொடங்கி நடக்கிறது. மழையால் பாதிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் விரைவில் பணிகளை முடிக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். இவ்வளவு சீக்கிரம் ஆற்றில் தண்ணீர் வரும் என்பது தெரியவில்லை என்றார். ஆட்சியர் கொடுத்த மனுவை ஓரங்கட்டி வைத்துவிட்டு ஆக்கிரமிப்பாளர்களுக்கு துணையாக இருந்த அதிகாரிக்கு மாவட்ட ஆட்சியர் உடனே ஆக்கிரமிப்பை அகற்ற உத்தரவிட்ட தகவல் பரவியதும், இளைஞர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். அதிரடி உத்தரவிட்ட ஆட்சியருக்கு இளைஞர்கள் நன்றி கூறினார்கள்.




 

சார்ந்த செய்திகள்

Next Story

பூச்சிக்கொல்லி மருந்தா? பயிர்க்கொல்லி மருந்தா? - போராடும் விவசாயிகள்! நடவடிக்கை எடுக்கத் தயங்கும் அதிகாரிகள்

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Farmers struggle at Pudukkottai District Collectorate

திருச்சி மாவட்டம் மணப்பாறை வட்டம் சேர்பட்டி அருகே மறவனூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி செந்தில்குமார் 10 ஏக்கரில் நெல் பயிர் நடவு செய்துள்ளார். கதிர் வரும் நிலையில் இலைசுருட்டுப்புழு காணப்பட்டதால் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் உள்ள ஒரு தனியார் பூச்சிக்கொல்லி மருந்துக் கடையில் பூச்சிக்கொல்லி மருந்து வாங்கிச் சென்று 8.5 ஏக்கருக்கு தெளித்துள்ளார்.

பூச்சிக்கொல்லி மருந்து தெளித்து சில நாட்களில் பயிர்கள் கருகத் தொடங்கி ஒரு வாரத்தில் முழுமையாக கருகியது. சம்பந்தப்பட்ட மருந்துக் கடையில் கேட்டதற்கு சரியான பதில் இல்லாததால் திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டார் விவசாயி செந்தில்குமார். இதனையடுத்து வயலுக்கே வந்து ஆய்வு செய்த வேளாண்துறை அதிகாரிகள் பூச்சிக்கொல்லி மருந்தால் தான் பயிர்கள் கருகிவிட்டதாக சான்றளித்தனர்.

இதனையடுத்து விராலிமலை பூச்சிக்கொல்லி மருந்துக்கடை மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில், வியாழக்கிழமை தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் துணைச் செயலாளர் சேகர் முன்னிலையில் ஏராளமான விவசாயிகள் கருகிய பயிர்களுடன் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி வந்தனர்.

கருகிய பயிர்களுடன் வந்த விவசாயிகளை ஆட்சியர் அலுவலகத்திற்குள் அனுமதிக்காததால் நுழைவாயிலிலேயே கருகிய பயிர்களை கொட்டியும் கையில் வைத்துக் கொண்டும் ஒப்பாரி வைத்து ஆர்ப்பாட்டம் செய்தனர். அங்கு வந்த போலீசாரும் வருவாய்த் துறை அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாகக் கூறிய பிறகு ஆட்சியர் அலுவலக நுழைவாயில் போராட்டத்தை விவசாயிகள் முடித்துக் கொண்டனர்.

ஆனால் வேளாண்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் பிச்சத்தான்பட்டியில் திருச்சி மாவட்ட விவசாயிகள் இருவர் செல்போன் கோபுரத்தில் ஏறிவிட்டனர். அதேபோல மற்றொரு குழு விவசாயிகள் விராலிமலை வேளாண் இணை இயக்குநர் அலுவலகத்திற்குச் சென்ற விவசாயிகள் அலுவலகத்திற்குள் நுழைந்து நடவடிக்கை எடுக்கும் வரை போகமாட்டோம்  என்று அங்கேயே படுத்துவிட்டனர்.

அதன் பிறகே சம்பந்தப்பட்ட விராலிமலை பூச்சிக்கொல்லி மருந்துக் கடையை அதிகாரிகள் மூடினர். பூச்சிக்கொல்லி மருந்து கேட்டால் பயிர்க்கொல்லி மருந்து கொடுத்து 8.5 ஏக்கர் நெல் பயிர்களைக் கொன்ற பூச்சி மருந்துக்கடை உரிமத்தை ரத்து செய்ய வேண்டும். கடையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை வைத்துள்ளனர். சில மாதங்களுக்கு முன்பு கீரமங்கலத்தில் 10 ஆண்டுகளுக்கு முன்பு காலாவதியான பூச்சிக்கொல்லி மருந்துகளை புதிய லேபிள் ஒட்டி புதிய மருந்தாக விற்பனைக்கு வைத்திருந்த சுமார் 1500 மருந்துப் பாட்டில்களை பறிமுதல் செய்த அதிகாரிகள் இப்போது நடவடிக்கை எடுக்க தயக்கம் ஏன் என்ற கேள்வி எழுப்புகின்றனர்.

Next Story

தொடங்கியது வேட்புமனு பரிசீலனை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Scrutiny of nominations has begun

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

நேற்று வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில், இன்று வேட்புமனு பரிசீலனை நடைபெற்று வருகிறது. சேலத்தில் திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட செல்வ கணபதியின் வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இரட்டை வாக்குரிமை சர்ச்சை காரணமாக அவருடைய வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. திருச்சியில் மதிமுக சார்பில் போட்டியிடும் துரை வைகோவின் மனு ஏற்கப்பட்டுள்ளது. திருச்சியில் அமமுக சார்பில் போட்டியிடும் செந்தில்நாதன் வேட்புமனு ஏற்கப்பட்டுள்ளது.

மதுரை தொகுதியில் அதிமுக, பாஜக, நாம் தமிழர் வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. நாமக்கல் தொகுதியில் திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சிகளின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது. மத்திய சென்னையில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் மனு ஏற்கப்பட்டுள்ளது. தென் சென்னையில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் மனு ஏற்கப்பட்டுள்ளது. பாஜக வேட்பாளர் வினோத் பி. செல்வம் மனுவை ஏற்றுக்கொள்ளக்கூடாது என திமுக தரப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மனுவை முழுமையாகப் பூர்த்தி செய்து தராததால் திமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. வினோத் பி. செல்வத்தின் மனுவை மறு ஆய்வு செய்ய வேண்டும் என திமுக தரப்பு கோரிக்கை வைத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.